Sunday, June 14, 2026

மும்மலங்கள்

மும்மலங்கள்




கோயிலைக்கட்டியவன் மனிதன் 
சிலைதனை வடித்தவன் மனிதன் 
உண்டியலை வைத்ததும் மனிதன் 
பூட்டினைப்  போட்டதும்  மனிதன் 

- சேருகின்ற காசுக்கு காவலாளியா இறைவன்? 

பன்னீரில் நீராட்டி கற்சிலைக்கு 
பளபளப்பாய் பட்டுஜரிகை வேட்டிகட்டி 
வண்ணமலர் மாலைபோட்டு வாழ்த்துப்பாடி 
ஆயிரம் விளக்கில் தீபாராதனை

- மும்மலங்களை கடந்தவன்  இறைவன்  

ஆணவமே மும்மலத்தின் முதல்மலம்  
இம்மூலஇருள் இல்லாத அமரருமில்லை
ஆணவத்தை கலைப்பது அறிவாகும் 
அறிவுக்கு அறிவே  பகையாகும்  

- ஆணவ மலம் மட்டும் கொண்டவர் விஞ்ஞானாகலர் 

அகவிருளினை போக்கிடும் கலையொன்றே 
ஆணவத்தை அகற்றிடும் ஒளியாகும்   
மனமதை தானென்று  கொள்ளலாகும் 
கன்மமென்ற மலமுமிங்கு  அதனையாளும் 

- ஆணவமும், கன்மமும் கொண்டவர் பிரளயாகலர்  

கலைத்தொழிலும் கன்மமென்ற வித்தையாகி 
காலமெல்லாம் நிழலான மாயையென்றாகும்
பெண்ணின் கருவறைக்குள் நுழைந்தக்கணம் 
மண்ணின் மாந்தரின் பொதுமாண்பதுவாகும்  

- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களில் வாழ்பவர் சகலர் 

விளக்கம்:

மெய்யியல் பற்றிய உண்மை  அறிய முற்படுவோர்க்கு சித்தர்கள் காட்டிய அருள்நெறி:

மனிதனின் சாத்வீக, சத்திரிய மற்றும் தாமச  என்னும் முக்குணங்களை ஆள்வது முப்பத்தாறு  பிரதம உண்மைகள். அவைகள், இருபத்தி நான்கு உண்மைகள் ஆன்ம உண்மைகள் என்றும், ஏழு உண்மைகள் வித்தியா உண்மைகள் என்றும், ஐந்து உண்மைகள் சிவ உண்மைகள் என்றும் பிரிவினைப்படும்.

இதில் வித்தியா உண்மைகள் என்பது,

 1. காலம்  2. நியதி  3. கலை  4. வித்தை  5. அராகம்  6. புருடன்  7. மாயை 

கலை என்பது ஆன்மா கொண்டுள்ள மூல மலமான அறியாமையை கலைக்கக்கூடியது. அறியாமை அகலும்போது, அது மாயையின் பண்பு என்றறியாமல் ஆன்மா தானே முன்னின்று செய்கிறேன் என்று, 'நான்' என்ற அறியாமையை மீண்டும் ஏற்றுக்கொள்கிறது.  இதனால் தான் கலையின் மூலம் பெற்ற அறிவுக்கு புறம்பாக, சிற்றறிவின் எல்லைக்குள்  நின்று செயல்படுகிறது. இந்த நிலையே, அவரவர் பிறப்பின்  கன்மம் என்றறியப்படுகிறது. கலை கற்றுத்தந்த வித்தையின்மீது ஈர்ப்பு ஏற்பட்டு, விரும்பி வித்தைகளை அறிய முயற்சி செய்கின்றது.  இந்த விருப்பமே அராகம் என்பது.

மேற்படி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஆன்மா புருடன் என்றறியப்பட்டு, பிறப்பிலிருந்து இறப்பு வரை, மாயையினால் சூழப்பட்டு,  மாயா உலக நியதிகளிலிருந்து விடுபடாமல் வாழ்ந்து மறைகிறது.

பள்ளிகளும், கல்லூரிகளும் வித்யாலயா என்றோ கலைக்கல்லூரி என்றழைக்கப்படுவது இதனால்தானோ என்னவோ?

*****     *****    *****    *****    *****    *****    *****


 


  



Friday, June 5, 2026

காலப்பரிமாணம்

 காலப்பரிமாணம் 


இப்பொழுதென்பது எப்பொழுதும் இல்லை;
எப்பொழுதும் இருப்பதுவோ இப்பொழுதே!

காலம் ஒரு மாயை.

பிறவிப்பயனால் காலப்பெருவெளிக்குள் நுழைகிறேன்.

அங்கே நிகழ் காலம் என்னும் மாயா உலகின் அமானுஷ்யப்பெருவெளிக்குள் நிற்கிறேன். 

ஒரு புறம், எக்காரணம் கொண்டும் திரும்பி செல்ல முடியாத, மாயமாக மறைந்துவிட்ட கடந்த காலம். எதிரிலோ, கண்களுக்கோ மற்ற  புலன்களுக்கோ,  எட்டாத எதிர் காலம்.

இதில் நான் உணரும்  உண்மை என்னவென்றால், உடலுடனும், உடலற்றும்  கடந்த காலங்களில்  நாம் இருந்துகொண்டே இருந்திருக்கிறோம் அல்லது  இருக்கிறோம் .

திருமந்திரம் - 80 

இருந்தேன் இக்காயத்தே  எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே 
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே 
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

திருமூலர் சூக்கும உடலுடன் பல கோடி வருடங்கள், காலப்பெருவெளிக்குள் இருந்ததை 'இருந்தேன் இக்காயத்தே  எண்ணிலி கோடி' என்று  குறிப்பிடுகிறார். பின்னர், இறை அருளால் மூலனின் உடலில் புகுந்து, மீண்டும் மனிதப்பிறவி பெறுகிறார்.

சித்தர்கள் முக்காலமும் அறிந்த ஞானிகள். அவர்களுக்கு  காலப்பயணம் மிக எளிதாக கை வரப்பட்டிருக்கிறது. போகர் தனது போகர் 7000 என்ற நூலில் காலப்பயணம் செய்ததைப்பற்றிய பாடல்களை எழுதி இருக்கிறார். காலப்பயணத்தில் சந்தித்த முனிவர்களிடம் இருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும்  சஞ்சீவினி மருந்து செய்யும் முறையை கற்று வந்திருக்கிறார். எதிர்காலப்பயணம் பற்றிய குறிப்பு எதையும் விட்டு சென்றதாக தெரியவில்லை.

எதிர்காலப்பயணம் பற்றிய குறையை, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்கள் தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள ஆகாய விமானம் முதல் கைப்பேசி வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே செதுக்கிய சிற்பங்களில் விட்டு சென்றிருக்கிறார்கள். அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிர்கால பயணம் மேற்கொண்டு, இன்றைய நாகரிகத்தை அன்றே தெரிந்து சிற்பமாக்கி இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய், புதிதாக கட்டிக்கொண்டிருந்த கோயிலின் நுழைவாயில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதை கோயிலின் உட்புற வளாகத்தில் சிற்பமாக செதுக்கி சென்றிருக்கிறார்கள். அந்த அதிசயத்தை பார்க்க விரும்பினால் நீங்கள் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும். அங்கே நீங்கள் காணும் வெளிப்புறம் சிதிலமடைந்த முன்புற வாசல், அச்சு அசலாக உட்பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள  சித்திரத்தில்  காணலாம்.

காலப்பயணத்தில் கடந்த காலம், எதிர் காலம் சென்று வரும் சாத்தியம் நிகழ் காலத்தில் உண்டு என்னும் உண்மை நமக்கு தெளிவாகிறது.

[சமீபத்தில் OTT-ல் வெளிவந்த BLINK  என்னும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட கன்னட  திரைப்படம் காலப்பயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.]

இவை அனைத்திலிருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டென்றால் அது காலப்பயணம் சாத்தியம் என்பதே.

இனி முக்கியமான ஆய்வுக்கு  வருவோம்.

இன்றிலிருந்து முறையாக பயிற்சி செய்து ஒரு பத்து வருடங்களில் நாம் காலப்பயணம் செய்யும் திறனைப்பெறுகிறோம்  என்று வைத்துக்கொள்வோம். 

அன்றைய நாளில், சோதித்து பார்க்கும் ஆவலில் பத்து வருடம் பின்னோக்கி இன்றைய நாளுக்கு வந்தால், நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். பத்து வருடம் முன்னோக்கி இருந்த நான் அந்த உணர்வு நிலையில் இருப்பேன். அதே சமயம், நிகழ் கால வாழ்விலும் எழுதிக்கொண்டிருக்கும் நானும் இன்றைய உணர்வு நிலையில் இருப்பேன்.

இது எப்படி சாத்தியம்?

முறையாக யோகப்பயிற்சி செய்த சித்தர்களுக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.

காலப்பெருவெளியில் எங்கு வேண்டுமானாலும் என்னால் செல்ல முடியும்; உணர்வு நிலையில் இருக்க முடியும். அதாவது, கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று நிலையையும் ஒரே காலத்தில் அனுபவிக்க முடியும்.

முக்காலமும் ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. பழைய கால இசைத்தட்டை எடுத்துக்கொள்வோம். அதில் எந்த புள்ளியில் முள்ளை வைக்கிறோமோ அங்கிருந்து இசை கேட்க ஆரம்பிக்கும். அப்படித்தான் மாயை நிலையில் உள்ள காலமும். 

நாம் உறக்கத்தில் இருந்து கண்விழிக்கும் வேளையில், காலப்பெருவெளியில் எந்தப்புள்ளியில் இருந்து  வேண்டுமானாலும் விழித்தெழலாம். விழித்தெழுவது எந்த யுகமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

யோசிப்பதற்கே சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. யோசிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் என்னைப்போல் நீங்களும் காலப்பரிமாணத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.

மெய்யியல் பற்றிய உண்மை  விளக்கம்  தரும் சித்தர்கள், வித்யா தத்துவம் என்று மாயா தத்துவத்தை விளக்குகிறார்கள். மாயா தத்துவத்தின் ஏழு கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காலம். 

காலம், காலப்பரிமாணம் என்பது மீள முடியாத ஒரு மாயை.

Monday, May 25, 2026

கீழ்மை குணம் TN 2026

கீழ்மை குணம் TN 2026 

திருக்குறள்: 1080

எற்றிற்கு  உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் 
விற்றற்கு உரியர் விரைந்து.

கீழ்மை குணம்  கொண்ட கயவர்கள் தயங்காமல் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு குழப்பமான சந்தர்ப்ப  சூழல் உருவானால், தன்னை விற்றாவது அதன் பலனை அடையத்துடிப்பார்கள்.

தி. மு. க.: 
பரம எதிரியுடன் கை கோர்த்து, 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்', என்று  ஆட்சி அமைக்க துடித்தவர்கள்.

அ. தி. மு. க.: 
பரம எதிரியுடன் கை கோர்க்க துணிந்ததல்லாமல், 'அவளும் படிதாண்டா பத்தினியல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்று ஆட்சி தலைமை கேட்டு நாடகம் ஆடியவ ர்கள்.

காங்கிரஸ்: 
வெற்றிக்கு காரணமான கூட்டணிக்கட்சியாக,  மாலையிட்ட மன்னனறை செல்லாமல், பாலொடு பழம் தந்து எதிரியுடன் முதலிரவை பகிர்ந்தவர்கள். 

இ.யூ.மு.லீ.: 
கண்ணில் நீர் பெருக, மாற்றுக்கட்சியில் மந்திரிப்பதவி பெற்று, சிறுபான்மை என்னும் புர்காவை கழற்றி எறிந்தவர்கள்.

வி.சி.க.: 
சாறுண்ணிகளுடன் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த வாழ்வை மறந்து, பதவிக்காக கூட்டணியில் இருந்து விலகி வக்கணை பேசி நடிப்பவர்கள். 

கம்யூனிஸ்ட்கள்: 
காசுக்காக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என  இரு பக்கமும்  ஒட்டிக்கொண்டிருக்கும் வெட்டிப்பதர்கள்.

த.வெ.க.: 
கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படியாவது அனுபவிக்க, பிறவி குணம் மேலோங்க, எதிரிகளின் கோவணத்தை உருவியதோடல்லாமல், அவர்களின் வெற்றியையே கேள்விக்குறி                                 ஆக்கியவர்கள்.











  

Thursday, April 9, 2026

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள் 


நீங்கள் கனவு காண்பவர்களா?

கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருகின்ற தியானிகளின் கனவு.

சரி, வாங்க நம்ம கனவுலகிற்கு போவோம்.

இன்றைய நாளின் கடமைகள் எல்லாம் முடிந்து விட்டது. இனி தூங்கி கனவு காணலாம்.

கண்ணை மூடினால், மனம் எதை எதையோ கொண்டுவந்து கொடுத்து, பழைய நினைவுகளை   அசை போட வைக்கிறது.

தூக்கம் என்றால் என்ன? விழிப்பு நிலையில் இருந்து  எப்படி உறக்க நிலைக்கு செல்கிறோம்?

விழிப்பும் உறக்கமும் சந்திக்கும் நேரத்தில் என்ன நடக்கிறது?

இமைகளில் அன்றைய  நாளின் அனுபவத்தின் பாரம். மன வெளியிலோ  வாழ்வில் கடந்து வந்த தூரம். உடலளவில் உலகின் ஆரவாரம் அடங்கிவிடும்.  ஐம்புலன்களும் இயல்பான  குணத்தை இழந்து விடும். உள்ளம் எங்கே செல்கிறது  என்று  யாருக்கும் தெரியாது. பிறக்கும் முன்னர் உள்ளம் இல்லை. இறந்த பின்னர் உள்ளம் இருக்கப்போவது இல்லை. வாழும் நாட்களிலும்  தூக்கத்தில் உள்ளம் இல்லை.

விழிப்பிலிருந்து உறக்கம், இது  எப்படி நிகழ்கிறது?  உறக்கத்திலிருந்து விழிப்பு எவ்வாறு நிகழ்கிறது? 

சிந்தனை நீண்டு கொண்டே இருந்தது.

இன்றைக்கு எப்படியாவது விழிப்பிலிருந்து உறக்கத்திற்கு செல்லும் பாதையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த இறப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.

உறக்கத்திலிருந்து விழிப்பு நிலை என்பது புதுப்பிறப்பு எடுப்பது போன்றது. விழிப்பும், பிறப்பும்  நம் கையில் இல்லை.

தூக்கத்தின் ஆரம்பத்தில்  மூச்சுக்காற்று சீராக இயங்க ஆரம்பிக்கிறது. மூச்சு காற்றின் பாதையில் உள்ள தசை நார்கள் தளர்வு  நிலைக்கு செல்கிறது. சீராக இயங்கும் காற்று தளர்வு நிலையில் உள்ள தசைநார்களை கடக்கும்போது மெல்லிய ஓசை. இந்த ஓசை காதுக்கு கேட்கிறது. இது நான்கைந்து சுவாசத்திற்கொருமுறை நிகழ ஆரம்பித்தது. விழிப்பு நிலையில் இருப்பதால் காதுக்கு கேட்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாக சுவாச இடைவெளி குறைய குறைய தொடர் ஓசையாக மாறுகிறது. மனம் விழிப்பு நிலையிலிருந்து நழுவி வேறு ஒரு பரிமாணத்தில் இயங்க ஆரம்பிக்கிறது.

முழுவதும் தூக்கத்தில் ஆழ்வதற்குள், மனதில்  தீர்மானித்தபடி, மீண்டும் விழிப்புணர்வு  நிலைக்கு வருகிறேன்.

தூக்கமும் விழிப்புமான இந்த கண நேர கால இடைவெளியில் எனக்குள் என்ன நடந்தது?

எண்ணங்கள் திசை மாறாமல் இருக்க சுவாசத்தையே கவனித்துக்கொண்டிருந்தேன். சுவாசத்தை கவனித்துக்கொண்டிருந்த நான், சுவாச சத்தத்தின் ஊடே, இன்னொரு உலகிற்குள் நுழைகிறேன்.

அங்கே, 'நான் ஒரு பள்ளி மாணவன். நண்பனுடன் கோலி விளையாடிக்கொண்டிருக்கிறேன். பள்ளி மணி அடித்தாகி விட்டது. எல்லோரும் வகுப்பறைக்குள் சென்று விட்டார்கள். நானும் போக முயற்சிக்கிறேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. வீட்டுப்பாடம் செய்யவில்லை. கணக்கு வாத்தியார் ரொம்ப கண்டிப்பானவர். ஒரு கணம் அவரைப்பற்றிய பின்னூட்டம் முழுவதுமாக  உணர்வுக்கு வருகிறது. [காலமான] அம்மா கூப்பிடுகிறார்கள். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை. புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு ஓட வேண்டும். ஓடுகிறேன். மூச்சு வாங்குகிறது.' 

மீண்டும் விழிப்புணர்வு நிலையில் படுக்கைக்கு திரும்புகிறேன். சுவாசத்தின் சப்தம் நின்று விட்டது. மூச்சு இன்னும் அடங்கவில்லை. உடலில், ஓடியதனால் உண்டான  லேசான  வியர்வை பூத்திருந்தது. படபடக்கும் இதயம் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.

நான் என்னும் இந்த உடல் ஓடவில்லை. மனம் ஓடி இருக்கிறது.

எனக்கு பதிலாக என்னுடைய சூக்கும உடல் ஓடி இருக்கிறது. கனவையே நனவாக உடல் அனுபவித்திருக்கிறது.

இங்கே, விழிப்பு நிலை பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

விழிப்பு நிலை என்பது இரண்டு வகையானது. புறவெளி மட்டுமே உணரும் விழிப்பு நிலை; மற்றொன்று அகவெளி மட்டுமே காணுகின்ற விழிப்பு நிலை. சாதாரண நேரங்களில் நாம் இருப்பது புறவெளி விழிப்பு. தியானத்தின் இடையில்  நடப்பது அகவெளி விழிப்பு.

பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள் செயல்  நிலையில் இருக்கிறது.  இது புறவெளி விழிப்பு நிலை. உறங்கும் நேரத்தில் இங்கிருந்து கனவு நிலைக்கு செல்லும்பொழுது, சூக்கும உடலாக மாறி புது உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவோம்.

ஒருவர் தியானம் செய்யும்போது மனம் உள்நோக்கி திரும்புகிறது. அப்பொழுது, பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள், விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்கிறது.

தியான நிலையிலும்,  விழிப்பு நிலை  பரு உடலில் இருந்து நுண்ணுடலுக்குள் செல்கிறது.

விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்ல மனம், புத்தி, அகங்காரம் வழிகாட்டியாக இருக்கிறது. மனமும் புத்தியும் மட்டும் செயல்படும் நிலையில் கனவு நிலை மாறி உறக்கம் உண்டாகிறது. மனமும் புத்தியும் மறைகின்ற பொழுதில் சித்தம் தலை தூக்கி துரியம் எனப்படும் பேருறக்க நிலைக்கு செல்கிறது.

தியானத்தில் வெறும் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. இதுவே சமாதி நிலை.

திருமந்திரம் - 2201

புரியட் டகமே பொருந்தல்  கனவு 
புரியட் டகம் தன்னில் மூன்று கனவு 
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி 
புரியட் டகத்து  ஒன்று புக்கல்  துரியமே.    

புரியட்டகம் என்றால் சூக்கும உடல் அல்லது நுண்ணுடலில் வருவது கனவு. அதாவது பஞ்சபூதங்களின் தன்மைகள், ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின் தன்மைகள் அடங்கி, அந்தக்கரணங்களில் மனம், புத்தி மற்றும் அகங்காரத்தை ஆன்மா ஏற்கும் நிலை கனவு. 

தியானத்திலும்  இவ்வாறே  விழிப்பு நிலையில் கனவு நிகழ்கிறது.

தியானத்தின் தொடர்ச்சியில் நுண்ணுடலில்  மனம், புத்தி செயல்படும் நிலை உறக்க நிலையாகும். மனம் புத்தி செயலற்று நுண்ணுடலில் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. அதுவே சமாதி நிலை.

இன்றைக்கு படுக்கைக்கு சென்றதும் முயற்சி செய்து பாருங்களேன்!

*** *** *** *** ***






Wednesday, December 3, 2025

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர் 


உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும் ஒன்று.

அறிவியலின்  துணை கொண்டு எவ்வளவு அலசினாலும், அடியும், முடியும் காண முடியாத அதிசயம் உயிர்.

தில்லை அம்பலத்தில் நடனமாடும் அந்த பரம்பொருள், ஒவ்வொரு உயிரியின் உடலிலும்  உள்ள உயிருக்கு பற்று கோலாக இருக்கிறான். அண்ட சராசரங்களை ஆட்டுவித்து தானும் ஆடிக்கொண்டிருக்கிறான் இறைவன். 

உடலும் அதற்கு விதிவிலக்கல்ல. கண்ணால் காணும் பரு உடலும், சூக்கும உடலான ஒளி உடலும் இறையோடு இணைந்து ஆடிக்கொண்டிருக்கிறது என்கிறார் திருமூலர். 

திருமந்திரம் - 913

ஒன்றிரண்டு ஆட ஓரொன்றும் உடனாட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும்  ஒத்தாட 
ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே. 

பரு உடலும், ஒளி உடலுமாக உள்ள உடல் ஆடிக்கொண்டிருக்கிறது .

இதுவே, ஒன்றிரண்டு ஆட

அதனுடன் உயிர் சேர்ந்து  மூன்றாக மாறி ஆடுகிறது.. 

ஓரொன்றும் உடனாட ஒன்றினின் மூன்றாட

இந்த மூன்று பரிமாணங்களும் உடலின் ஏழு ஆதார நிலைகளான, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை மற்றும் துரியத்துடன் இணைந்து ஏழும்  ஒத்து ஆடுகிறது.

 ஓரேழும்  ஒத்தாட 

இவை அனைத்தும் ஒன்றி நிற்கும்போது, இதனுடன் ஐம்பொறிகளின் குணமும், நான்கு அகக்கருவிகளான மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என ஒன்பது குணங்களும் பொருந்தி இருக்கும். இந்த ஒன்பது குணங்களும் பாசம் என்னும் இச்சா சக்தியுடன் சேர்ந்தாடும்.

ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட

இவ்வாறு பொருந்தி நிற்கும் உடலையே மன்றமாக கொண்டு  இறைவன் மாணிக்க ஒளிக்கீற்றுகளாக ஒளிவீசி உடலின் உள்ளே  நடனம் புரிவான்.

மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே

சிதம்பர நடராஜரின் திருக்கூத்து நம் ஒவ்வொருவர் உடலிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

*** *** *** *** ***






Friday, October 31, 2025

காணாததை காணலாம்

 காணாததை காணலாம் 



கடவுளைக் காண்பது சாத்தியமா?

கடவுளை யாரும் கண்டிருக்கிறார்களா?

கடவுள் என்பது யார்?

இறைவனா? தெய்வமா? அல்லது கடவுளா?

கோயிலில் இருப்பது இறைவனா? தெய்வமா அல்லது கடவுளா?

இறைவன் கோயிலில் உள்ள சிலையில் மட்டும் இருந்தால், பிரபஞ்சத்தில் உள்ள  மற்ற  பொருட்களில் இறைவன் இல்லை என்றாகிவிடும். எங்கும் எதிலும் இருப்பவன் இறைவன்.

இறைவனே  இயற்கை என்பதால் இறைவனை  கோயிலில் இருந்து எடுத்து விடுவோம்.

இனி கடவுளுக்கு வருவோம்.

ஒவ்வொரு உயிர்வாழ் உடலிலும் இறைவனின் இணைப்பு இருக்கிறது. அதை உயிர்வாழிகள் உணர்வதில்லை. தனக்குள்ளே பரம்பொருள் உறைகிறான் என்று உணர்ந்து, கடும் முயற்சி செய்து, அறிய முற்படும் பொழுது இறைவன் கடவுளாக வெளிப்படுகிறான்.

அடுத்து தெய்வத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

பூவுலகில் தானும் வாழ்வாங்கு வாழ்ந்து, தன்னை சார்ந்தோர்க்கும் பயனளிப்பவனாக இருந்து, தன்னை ஒரு முன்னோடியாக கொண்டு மக்கள் வாழ  வழிகாட்டியாக வாழ்ந்தவர்கள் தெய்வம் ஆகிறார்கள்.

திருக்குறள் - 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

எனவே, நாம் இன்று தெய்வம் என்று வணங்குபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து சென்றவர்கள் என்று கொள்ளலாம். குறிப்பாக, ஆதி யோகியாகிய சிவன், தமிழ்க்கடவுளான முருகன் மற்றும்  திருமூலர் போன்ற சித்தர்களை இந்த வரிசையில் கொண்டு வரலாம். இவர்கள்  அஷ்டமா சித்திகள் என்னும் எட்டு வகை  ஆற்றலை  கைவரப்பெற்றவர்கள். 

அஷ்டமா  சித்திகள் என்பது எட்டு வகை ஆற்றல்கள்:

1. அணுவை விட சிறிய நிலை எடுப்பது 

2. அண்டத்தை விட பேரண்டமாக விரிந்து நிற்பது 

3. காற்றினும் மென்மையாக இருப்பது 

4. மலையினும் பாரமாய் இருப்பது 

5. எண்ணம் போல் நினைத்தவற்றை அடைவது  

6. உலகப்பொருட்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பது  

7. தன்னுயிரை பிறிதோர் உடலில் மாற்றுவது 

8. தெய்வ நிலையில் நிற்பது 

அதாவது, தெய்வ நிலையில் இருக்கும் இவர்கள் கோயிலில் இருந்து மக்களுக்கு அருள் பாலிப்பவர்களாக இருக்கிறார்கள். கருவறையில் உள்ள கல்லிலும் இவர்களால் உறைந்திருக்க முடியும்.

இந்தக் கோட்பாட்டில்தான் நம் முன்னோர்கள் கல்லிலும், பொன்னிலும்  தெய்வ சிலைகளை வடித்து அதனை கருவறைக்குள் வைத்திருக்கிறார்கள். மனிதன் வடித்த சிலைகளில் எல்லாம் தெய்வங்கள் வாழ்கின்றனர்.

சிவன் கோயில் கருவறை சிலையில்  சிவன் இருப்பதும், முருகன் கோயில் கருவறை சிலையில் முருகன் இருப்பதும், சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பின்னர்  கோயில்களில் சித்தர்கள் இருப்பதும்  இவ்வாரென்று கொள்ளலாம்.

கல்லென்று பார்ப்பவர்களுக்கு கல்லாகவும், தெய்வம் என்று பார்ப்பவர்களுக்கு தெய்வமாகவும் இருக்கிறார்கள்.

திருமூலர் இந்த கருத்தை மிகத் தெளிவாக திருமந்திரத்தில் விளக்குகிறார்.

திருமந்திரம் - 2290

மரத்தை மறைத்தது மாமத யானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே. 

மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது, நம் கண்களுக்கு யானை மட்டுமே தெரிகிறது. இந்த யானை, மரத்தால் செய்யப்பட்டது என்று உணர்ந்து யானையைப் பார்க்கும்போது யானை மரமாக தெரிகிறது. அதுபோலவே, இந்த உலகம், இறைவனை மறைத்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பெரும்  பூதங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுது, இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்கிறோமோ அப்பொழுதே பஞ்ச பூதங்கள் மறைந்து இறைவனுக்குள்  ஐக்கியமாகி விடும்.

இனிமேல், கோயிலில் தெய்வத்தை வணங்கும்போது, முழு விழிப்புணர்வு நிலையில் வணங்கினால் நம் முன் இருப்பது கற்சிலையல்ல, சிலை வடிவில் உள்ள நாம் வணங்கும் தெய்வம். 

அங்கே  மனமுருக பிரார்த்திக்கும்போது, ஒலியற்ற நம்  குரல் தெய்வத்திற்கு கேட்டிடும், தெய்வத்தின் கருணை அளவின்றி பொழிந்திடும்.

*** *** ***



Friday, October 17, 2025

நட்சத்திரமடி நீ எனக்கு

நட்சத்திரமடி நீ எனக்கு 




நிச்சயம் மறுபடியும் பிறந்திருப்பேன் - எனினும் 
நானாக பிறப்பது நிச்சயமில்லை - குறிப்பாக  
மனிதனாக பிறப்பதும் நிச்சயமில்லை.

செய்யக் கூடாததை செய்தும் 
செய்ய வேண்டியதை செய்யாமலும் 
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் - மீண்டும் 
மனிதனாக பிறப்பது நிச்சயமில்லை.

இயமநியமம் ஈரங்க யோகநிலை 
இயல்பான  வாழ்வாக  பழகிவிட்டால் 
அறமதுவே பிறவிக்  கடமை - மறுபடியும் 
மனிதனாக பிறப்பதற்கது  கடவுச்சீட்டு.


திருமந்திரம் - 113

விண்ணின்‌ றிழிந்து வினைக்கீடாய்‌ மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத்‌  தலைக்காவல்‌ முன்வைத்து 
உண்ணின்‌. றுருக்கியொ ரோப்பிலா ஆனந்தக்‌ 
கண்ணின்று காட்டிக்‌ களிம்பறுத்‌ தானே.


வானத்திலிருந்து இறங்கி வரும் இறைவன், ஒருவன் முற்பிறவியில்  செய்த நன்மை, தீமைக்கேற்ப உடல் கொடுக்கிறான்.

அந்த உடல் மனித உடலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தனது குளிர்ந்த காலை, உடலுக்கு காவலாக தலையில் வைக்கிறான்.   முற்பிறவியின் நினைவுகளையும், மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்னும் களிம்பை  அகற்றும் இறைவன், ஒப்பற்ற ஆனந்தப் பேரொளியாக கண்களின் இடையே திகழ்கிறான்.

இந்தப்பாடலில் மிகவும் கடினமான  மெய்யியல்  கேள்விக்கு பதில் இருக்கிறது.

கேள்வி: 

முதன் முதலில் மனிதன்  பிறக்கும்போது, வினைப்பயன் அற்ற நிலையில் தானே இருந்திருப்பான். நல்வினை, தீவினை  என இருவினைகளுக்குள் செல்ல வேண்டிய அவசியம் எப்படி அமைந்தது?

பதில்: 

முதல் பிறப்பில் தூய உடலில் இருந்தாலும், மண்ணில் பிறந்தவுடன் மும்மலங்கள் என்னும் ஆணவம், கன்மம், மாயைக்குள் வாழ்க்கையை  துவங்குகிறான். வாழ்வில் இன்பம் ஒன்றையே நாட்டமாக கொள்வதால், நல்லவை, கெட்டவை என்று பகுத்தறியாமல் இருவினைகளின் மாய வலையில் சிக்கிக்கொள்கிறான்.

ஒவ்வொரு முறை மனிதனாக பிறப்பெடுக்கும்போதும், உடல் மற்றும் பின்புலம் அவன் முற்பிறப்பின்  முழு வினைப்பயனாலே  அமைகிறது. அதாவது முந்தைய பிறவியின் மும்மலங்கள்  அழிக்கப்பட்டு புதிதாகவே பிறக்கிறான்.

இதைத்தான் திருமந்திரம், 

வினைக்கீடாய் மெய்கொண்டு.. களிம்பு அறுத்தானே..  என்று விளக்குகிறது.

*** *** ***



Saturday, October 11, 2025

காலதேவனின் கணக்கு

காலதேவனின் கணக்கு 

உடலைப்  பிரிந்த  உயிரின் நிலை என்ன?

மறுபடியும் பிறந்திருக்கும்.

இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உயிரின் நிலை என்ன?

இராப்பகல் அற்ற சுத்தப் பெருவெளியில்  இருக்கும்.

உயிரின் இறுதி ஆதார நிலை என்ன?

முழுமுதற் பொருளான இறைவனுடன்  இணைந்து  இருக்கும்.

இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.

திருமந்திரம் - 1822

கூறுமின் நீர்முன் பிறந்துஇங்கு  இறந்தமை 
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும் 
பாரணியும்  உடல் வீழவிட்டு  ஆருயிர் 
தேரணியும் இது  செப்ப  வல்லீரே. 

ஏற்கனவே நீங்கள் இந்த பூமியில் பிறந்து, இறந்திருக்கிறீர்கள், மீண்டும் பிறந்திருக்கிறீர்கள் இது வேறு.  அதைப்போலவே, பூமியில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலை அடைந்து இறந்தவரின் உடலை விட்டு அதன் மெய்ப்பொருளான உயிர் நீங்கியிருக்கும்.  ஆனால், அவர்  இந்த மண்ணில் பிறக்கும்போது கூட வந்த உடலை, மண்ணிலேயே விட்டுவிட்டு சென்ற உயிர், இறைவனின் தேரில் ஏறி இறையுடன் இணைந்திருக்கும். அந்த உயிர் மீண்டும் மண்ணில்  பிறப்பெடுக்காது.

இதைப்  புரிந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

*** *** *** *** ***





Monday, October 6, 2025

பெருந்துயரம்

பெருந்துயரம் 

 



திருமந்திரம் - 171

ஈட்டியதேன் பூமணம் கண்டு ரதமும் 
கூட்டியே கொணர்ந்து ஒருகொம்பிடை வைத்திடும் 
ஓட்டியே துரத்திட்டு அதுவலியார் கொளக் 
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

இந்தப் பாடலுக்கான சரியான பொருள் நீண்ட காலம்   பிடிபடாமலே இருந்தது. இந்தப் பாடலின், நேரான விளக்கம், மெய்யியல் விளக்கம் மற்றும் அரசியல் விளக்கம் என  மூன்று கோணங்களில் புரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேனீக்கள் மலர்களின் நறுமணத்தைக் கொண்டு, மலர்களிடம் இருந்து  தேனை சேகரிக்கிறது. மரத்தின் கொம்புகளில் உள்ள தனது தேனடையில் சேமித்து வைக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தேனடை தெளிவாக தெரிவதால், தேனெடுக்கும் ஆற்றல்  உள்ளவர்கள்,  தேனீக்களை துரத்திவிட்டு தேனை எடுத்துக்கொள்வார்கள்.

மலர் தன் நறுமணத்தால் காட்டிக்கொடுத்து  தேனை இழந்தது. தேனீ, கண்ணில் படும்படி கட்டிய  தேனடையால் அதன்  பலனை இழந்தது.

இது நேரான புரிதலில்..

மனிதன் சுவையான  உணவினை தேடி தேடி  உண்டு பல வகைகளில் தன் உடலை வளர்த்து  வைத்திருக்கிறான். ஒரு நாள், கால தூதன் உயிரை எடுத்தபின், பொத்தி பொத்தி வளர்த்த உடலால் எந்த நன்மையும்  அவனுக்கு இருப்பதில்லை.

இது மெய்யியல் பார்வையில்..  

ஒருவன் தன் பல வருட உழைப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொள்கிறான். அவர்களின் மூலம் தனக்கான ஒரு அரசியல் பாதையை அமைத்து வெற்றிக்காக பாடுபடுகிறான். அவனுக்கு சேரும் கூட்டம் ஆட்சி செய்பவர்களின்  கோபத்தை தூண்டி விடுகிறது. இதுவே, கரூரில் நடந்த பெருந்துயர நிகழ்விற்கு  காரணமாகிறது. கூடிய கூட்டத்தால் அவனுக்கு எந்த பலனும் இல்லை. 

இது அரசியல் நிகழ்வில்..

*** *** ***

மக்களை காப்பது மன்னனின் கடமை 

மக்களை காப்பதுதான் மன்னனின் கடமை 

மக்களை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை 

மக்களின் உயிரை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை 

மற்றவர் மீது  குற்றம் சுமத்துவது  சுத்த மடமை 


*** *** ***







 

Tuesday, September 30, 2025

பயணம் முடிந்துவிடும்

பயணம் முடிந்துவிடும் 

NEWS: 

Accenture lays off more than 11,000 employees: CEO Julie Sweet says we are "exiting" employees on a compressed timeline, people where reskilling, based on our experience, is not a viable path for the skill we need.

மற்றவர்கள் உங்களை மாற்றுவது சாத்தியமல்ல. நீங்களாக, மாறுவதை தெரிந்து, மாறிக்கொள்ளுங்கள்.

புதிய பயணத்தை தொடங்குங்கள்.

திருமந்திரம் - 177

கிழக்குஎழுந் தோடிய ஞாயிறு மேற்கே 
விழக்கண்டும் தேறார் விழிஇலா மாந்தர் 
குழக்கன்று மூத்து எருதாய்ச் சிலநாளில் 
விழக்கண்டும் தேறார் வியன்உல கோரே.

காலையில் கிழக்கே உதிக்கும் கதிரவன் மாலையில் மேற்கே மறைவதை தினமும் காண்கிறீர்கள். மாற்றத்தை கண்கூடாக பார்த்தும் பாராமல் இருக்கிறீர்கள். எருதின் கன்று வளர்ந்து பருவமடைந்து, வாழ்நாள் முடிந்து நம் கண் முன்னரே மறைவதை பார்த்தும் மாற்றத்தின் தன்மையை உணராமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

எந்தவொரு பயணமும் மாறி மாறி ஒரு நாள் முடிந்துவிடும் என்பதை  உணர்ந்து கொள்ளுங்கள். வாழும் நாட்களை விழிப்புணர்வோடு வாழுங்கள்.






Saturday, September 27, 2025

காமதேனு

காமதேனு 


திருமந்திரம் - 2015

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 
மற்றைப் பசுக்கள் வறள்  பசுதானே.

தமிழகம் ஏன் ஏனைய மாநிலங்களில் இருந்தோ, மற்ற நாடுகளில் இருந்தோ தனித்து  தெரிகிறது? இறைத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் இறை உணர்வாளர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். 

இங்குதானே, இறை  மறுப்பாளர்களும், அவர்களின் போதனைகளும் நிறைந்து வழிகிறது. இவர்களின் போக்கும், செயல்களும் தாங்கள் மிக்க அறிவுடையவர்கள் மற்றவர்கள் இழி பிறவிகள் என்னும் அளவிற்கு தங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

'கடவுள் இல்லை ' - என்றால் பகுத்தறிவாளன். உண்டு என்றால் சுயமாக சிந்திக்கும் திறனற்ற பழமைவாதி. 

இந்த பகுத்தறிவாளர்கள்தான் தான்  கற்ற பசுக்கள். கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசும் தங்கள் பங்கிற்கு இறை மறுப்பை சிரமேற்கொண்டிருப்பதும் தமிழகத்தில்தான். மக்களின் தேர்தல் வாக்குகளுக்காகவும், கோயில்களின் சொத்துகளுக்காகவும், தினம் தினம் உண்டியலில் சேரும் செல்வத்திற்காகவும், இவர்கள் செய்யும் குட முழுக்குகளும், விழாக்களும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கொற்ற பசுக்கள். நெற்றியில் அதிகாரம் என்னும் குறியை கட்டி  மேய்பவர்கள். 

ஆனால், தன்னுள் நிரம்பி நிறைகுடமாக உள்ள ஒருவர் போதும். உலகையே தன் பக்கம் இழுத்து, சமுதாயத்திற்கு தேவையானதை செய்ய.

இந்த முற்ற பசுவின் ஒரு குடம் பால் போதும். ஏனைய பசுக்கள், பால் வற்றிய வறள் பசுக்களே.

அப்படிப்பட்ட ஒருவர்தான் இவர். சமுதாய ஊடகத்தின் இன்ப்ளூயன்சர்.









                                                                                      

Tuesday, September 16, 2025

ஆசை நூறுவகை

 ஆசை நூறுவகை 



திருமந்திரம் - 2033

அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்கா அறிவு  அறிந்தேனே.


புலன்களால் உண்டாகும் ஆசையை அடக்கினால் மட்டுமே யோக  வாழ்வை  அடைய  முடியும் என்று அறிவற்றவர்கள்தான் சொல்வார்கள். புலனாசையை, வானில் வாழும் தேவர்களாலும், அடக்க முடியாது. அதற்கு தேவர்களும் விதி விலக்கல்ல. அடக்க இயலா காமத்துடன் சென்று, முனிபத்தினியான அகலிகையின் சாபம் பெற்றவன் தேவர்களின் கோமான்  இந்திரன். புலன்களை அடக்குவதால் இன்னொரு கோளாறும் உண்டு;   நாமும் ஜடப்பொருள்களைப்போல் ஆகி நம் வாழ்வும் இயந்திர  வாழ்வாகி விடும்.

எனவே, புலனாசையை அடக்காமல், புலன்களின் இயக்க உண்மையை அறிவதே யோக வாழ்விற்கு வழிகாட்டியாகும்.

புலன்களின் உண்மைத்தன்மை அறிந்து யோக வாழ்விற்கு வழி காட்டும் திருமூலரின் திருமந்திரத்தை நாம் தொடர்வோம்.


 

Sunday, September 14, 2025

புலனறிவே யோகம்

புலனறிவே  யோகம் 


திருமந்திரம் - 2023

ஆக மதத்தன ஐந்து களிறுஉள
ஆக மதத் தறியோடு அணைகின்றில 
பாகனும் எய்த்து  அவைதாமும் இளைத்தபின் 
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.

ஐந்து மதம் கொண்ட யானைகள் இருக்கின்றன. அவைகள் அமைதியாக அதன் கட்டுத்தறியோடு இணைந்து இருப்பதில்லை. இதனால் யானைகளை பராமரிக்கும் பாகனும் ஓய்ந்துபோய், யானைகளும் சக்தி இழந்து இளைத்தபின் மீண்டும் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாது.

ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கையை அடக்க முடியாமல் தறிகெட்டு அலைவது  உடல். முதுமையில் உடல் ஓய்ந்த நிலையில் புலன்களின் வேட்கை குறைந்து சுகமான  யோக வாழ்வை தேடினாலும் அடைய முடியாது. 

நம் உடலில் ஆற்றல்  உள்ள போது,  புலன்வழி போகாமல், யோக வாழ்விற்கு  பயிற்சி செய்ய வேண்டும்.



Monday, August 11, 2025

உனக்காக எல்லாம் உனக்காக

 /உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக/


நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

கொடுக்காதே கட்சி கொடுக்காதே.. நீ கட்சியை விட்டு தள்ளி இருந்தா நிதி கொடுக்காதே..

கொடுக்காதே கட்சி கொடுக்காதே.. நீ கட்சியை விட்டு தள்ளி இருந்தா நிதி கொடுக்காதே..

கட்சிக்குள்ளே வந்து காலம் தள்ளுவது நிதிக்காக..

கட்சிக்குள்ளே வந்து காலம் தள்ளுவது நிதிக்காக..

கொஞ்சம் கட்சிக்குள்ளே வந்து வேலைய செய்வேன் அதுக்காக..

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

ஊருக்குள்ளே வந்து காரு  பந்தயம் நடத்தணுமா  இல்ல மேட போட்டு பொங்கி பொங்கிப் பேசணுமா?

ஊருக்குள்ளே வந்து காரு பந்தயம்  நடத்தணுமா  இல்ல மேட போட்டு பொங்கி பொங்கிப் பேசணுமா?

பேந்து விடும் ரோடு  காண்ட்ராக்ட்டு கொடுக்கணுமா? 

பேந்து விடும் ரோடு  காண்ட்ராக்ட்டு கொடுக்கணுமா? 

இல்ல ஆத்து  மணல  அள்ள  அள்ள லைசென்ஸ்   எடுக்கணுமா?

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

இந்திர லோகத்திலே இந்திரனே நின்னாலும்     
தேர்தலில்  பணத்த  அள்ளி வீசி ஜெயிச்சிடுவேன்.

கந்தர்வன் போல  வந்து  ரம்பைகள்  அழகை  ருசிச்சிருவேன்.

கந்தர்வன் போல  வந்து  ரம்பைகள்  அழகை  ருசிச்சிருவேன்.

நீட்டு  ரகசியத்தை ரகசியமா வச்சிக்குவேன். மதுபாட்டில்  ஆனாலும் கூட்டு சேந்து நிதி              தேத்திடுவேன்.

நிதிக்காக இன்ப  நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

நிதிக்காக இன்ப  நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..


கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்

 'கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்..'

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

கொட்டி  கொட்டி  மூட்டை..  கொட்டி  கொட்டி..

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்

கொட்டி  கொட்டி  மூட்டை..  கொட்டி  கொட்டி..

பேச்சினில் என்றுமே இனிமையில்லை 
சொல்லும் வார்த்தையில்  உறுதி இல்லை.

பேச்சினில் என்றுமே இனிமையில்லை 
சொல்லும் வார்த்தையில்  உறுதி இல்லை.
கொண்ட கொள்கை எல்லாம் காற்றினில் பறக்க 
பொய்யும் புரட்டுமாய் உரக்கவே  பேசிடுவார்.

கோட்டைக்குள்  சென்று கொடிதனை நாட்டியென்  மக்களுக்காக நிதி திரட்டிடுவேன்.. 

சபாஷ்..

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.  

சொல்ல நினைத்ததை மறந்திடுவார்   
எழுதி தந்ததை  உளறிடுவார்

சொல்ல நினைத்ததை மறந்திடுவார் 
எழுதி தந்ததை  உளறிடுவார்
சொந்த மக்கள் எல்லாம் கால்விரல் பார்க்க     
தற்குறியாகவே  பேசி முடிப்பார்.

ஆட்டு மந்தை கூட்டம் சேர்த்து ஆடிப்பாடி நடித்திடுவேன்..

சபாஷ்.. 

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

கொட்டி  கொட்டி  மூட்டை..  கொட்டி  கொட்டி..

சொந்தப் புத்தியும் பிறப்பிலில்லை  
சொல்வோர் புத்தியும் கேட்பதில்லை  

சொந்தப் புத்தியும் பிறப்பிலில்லை  
சொல்வோர் புத்தியும் கேட்பதில்லை  
சட்டையை கிழித்து  ஊருக்கெல்லாம்  காட்டி
சட்டசபையை  விட்டு  ஓடிடுவார்.  

பணத்துக்காக கலங்க மாட்டேன் காசை கொடுத்து வெற்றி காண்பேன் 

சபாஷ் 

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.'

ஆண்டவன்  படைத்தது மனிதன் என்றாலும் மதங்களைப்  படைக்கவில்லை.
மதங்களை படைத்தது  மனிதன் என்றாலும் மனிதத்தைப் படைக்கவில்லை.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

வானத்தில்   கருந்துளைகள் சவாலாகலாம்   அதை 
எண்ணத்தில்  வைத்திருந்தால்   அறிவாகுமா?

வானத்தில்   கருந்துளைகள் சவாலாகலாம்   அதை 
எண்ணத்தில்  வைத்திருந்தால்   அறிவாகுமா?

நதிவெள்ளம் கடல்  நோக்கிப்  பாய்ந்தோடுமே

நதிவெள்ளம் கடல்  நோக்கிப்  பாய்ந்தோடுமே  அதை   
விதியென்று ஊர்  சொல்லி வழி  மாற்றுமா? 

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

மலர்தாவும் தேனீக்கள் தேன் சேர்க்குமே தன் 
இனம்காக்க  உறவாடி உயிர் போக்குமே 

மலர்தாவும் தேனீக்கள் தேன் சேர்க்குமே தன் 
இனம்காக்க  உறவாடி உயிர் போக்குமே

தினம்உண்ணக் கிடைப்பது கூழாயினும் 
தினம்உண்ணக் கிடைப்பது கூழாயினும் தன் 
மனம்மகிழ பகிர்ந்துண்டால் பசி தீருமே.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

மேகங்கள் வான்சென்று  மழை பெய்திடும்  
தேகத்தில்  உயிர்ப்பூ க்கள்  அமிழ்தாகிடும் 

மேகங்கள் வான்சென்று  மழை பெய்திடும்  
தேகத்தில்  உயிர்ப்பூ க்கள்  அமிழ்தாகிடும் 

காலம்தான் உனக்கென்று  காத்திருக்குமா
காலம்தான் உனக்கென்று  காத்திருக்குமா உடல் 
கோலம் தான் இழந்தபின் எழில் கூடுமா?

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

Sunday, June 22, 2025

உதிரப்பிறந்த பிஞ்சுகள்

உதிரப்பிறந்த பிஞ்சுகள்




எது நடக்கக்கூடாது என்று உலகம் எதிர்பார்த்ததோ, அது நடந்து விட்டது.

ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் அமெரிக்கர்களால் தகர்ப்பு. கொக்கரிக்கும் டிரம்ப்.

இதனால் ஈரான் மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை. மத்திய தரைக்கடல் நாடுகள் அனைத்தும் நேரடி பாதிப்பில். அவர்களால் எண்ணெய் மட்டும் எடுக்க முடியும். குடி நீருக்கு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர்தான் ஆதாரம். கடல் நீர் அணுக்கதிர்களால் மாசுபடும் நிலை இப்போது. 

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் குடி நீருக்கு சமமாகிவிடும்.

போர் ஒழிக!

போர் வேண்டாம். பேரழிவைத்தரும் போர் வேண்டாம்.

இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தம். மண்ணில் பிறந்த அனைவருக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு.

இறைவன் சந்நிதியில் சிறப்பு அனுமதி யாருக்கும்  இல்லை. யாருக்கும் யாரையும் கொல்லும்  உரிமை இல்லை, குறிப்பாக பொது மக்களை.

'காமெனியை கொன்றிடுவோம். அவன் இருப்பிடம் தெரியும்.' - கொக்கரிக்கிறான் டிரம்ப். இவன் போருக்கு சம்மந்தமில்லாத அமெரிக்கன். சீனாவோ உளவுக்கப்பல்களை போரின் எல்லைக்குள் நிறுத்தி வைக்கிறது, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கையாக. ஈரான் - இஸ்ரேல் போரினால் உலகமே இரண்டுபட்டு  நிற்கிறது. 

ஏவுகணைகள் ஏற்படுத்தும் அழிவுத்திறனை  எதிர் அணிகள் பெருமையாக பேசி, வேடிக்கை பார்க்கிறார்கள். போரினால் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களில், குழந்தைகள், வயோதிகர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடில்லை. 

பசித்து அழும் குழந்தைக்கு பால் தர முடியவில்லை என்றால், தன் பசியை பொறுத்துக்கொள்ளும் அன்னையால் இந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியுமா? எண்ணற்ற பிஞ்சுக்குழந்தைகளின் பசிக்குரல் யாருக்கும் கவலையை தராதா?

இது மிகவும் கொடுமையானது. அனைத்து தர்மங்களையும் மீறியது. இவர்களுக்கு அறமே எமனாக அமையும்.

திருமந்திரம் - 198

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை 
வல்லடிக்  காரர் வலிக்கயிற்றால் கட்டிச் 
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை 
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே

கொல்லு. குத்து என்று சொல்பவர்கள் மனிதர்களல்ல மிருகங்கள். இவர்களை எம தூதர்கள் தங்களது பாசக்கயிற்றால் கட்டி ஓட்டி சென்று நெருப்பின் வாயிலில் நிற்கவைத்து, நரகத்தை காட்டுவார்கள். 

*** *** ***


Friday, June 20, 2025

பொட்டு வைத்த முகம்

பொட்டு வைத்த முகம் 

  



'எடுத்துக்கோ..' - கைகட்டி நின்றிருந்த சிறுவனிடம் தலைமை ஆசிரியர் சொன்னார்.

இரண்டு வெள்ளை சாக்பீஸை எடுத்த குமாரின் கண்களில் பக்கத்தில் இருந்த கலர் சாக்பீஸ் கண்ணில் பட்டது.  கண்கள் விரிய ஆச்சர்யமாக அதை பார்த்தான்.

'சார், சாக்பீஸ்' - என்று சொல்லியபடியே, சாக்பீஸ் வாங்கி வர சொன்ன  வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தான்.

'டேய்.. ஹெட்மாஸ்டர் கிட்ட கலர் கலரா சாக்பீஸ் இருக்குடா..' - என்று தான் பார்த்ததை பக்கத்தில் அமர்ந்திருந்த  செல்வாவிடம் சொன்னான்.

'லக்குடா உனக்கு. நாளைக்கு நான் போய் எடுத்துட்டு  வருவேன். நானும் பார்ப்பேன்.' - செல்வா பொறாமையோடு சொன்னான்.

'சாக்பீஸ் செஞ்சு பாக்கலாமா? எங்கம்மா வீட்டுக்கு வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கல் வேக வச்சிருக்காங்க.' - என்றான் குமார்.

'எங்க வீட்லயும் சுண்ணாம்பு இருக்கு. இன்னிக்கு செய்யலாம்.' - சந்தோசமாக சொன்னான் செல்வா.

இவர்களுக்கு வெள்ளையாக இருப்பதெல்லாம் சுண்ணாம்புதான்.

*** *** ***

'பெல்லடிச்சிட்டாங்க, வாடா போலாம்' - என்ற செல்வாவின் முகத்தை பார்த்தான் குமார்.

'ஐயோ.. நான் விபூதி வெக்கலடா.' - திருநீறணிந்த செல்வாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கத்தினான் குமார்.

'போச்சு. சார், உன்ன வச்சு வெளுக்கப்போறார்.' - மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திருநீறணியாமல் யாரும் வகுப்புக்கு வரக்கூடாது என்று கட்டளை போட்டிருக்கிறார்.

ஹிஜாப், தொப்பி, சிலுவை அணிந்த சிறுவர், சிறுமிகளுக்கும் இந்த விதி பொருந்தும். விதி எல்லாருக்கும் பொதுவானது. அந்த ஆசிரியர்  வகுப்பில் மட்டும் எல்லோரும் திருநீறணிந்திருப்பார்கள்.

என்ன செய்வதென்று திகைத்து நின்ற குமார், வேகமாக சென்று பள்ளி சுவற்றில் அடித்திருந்த சுண்ணாம்பை விரல்களில் தேய்த்து நெற்றியில் வைத்துக்கொண்டான்.

'அப்பாடா.. இன்னிக்கு தப்பிச்சேன்டா..'

*** *** ***

'பொட்டு வைத்திருந்தால் அது இந்தியப்பெண். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தால் அது வடஇந்தியப்பெண். கொஞ்சம் சந்தனம் வைத்திருந்தால் நம்ம கேரளம். பொட்டுடன் திருநீறு வைத்திருந்தால் அது நம்ம தமிழ்ப்பெண்.' - வெஸ்ட்மீடில் இரயிலில் ஏறிய திருநீறணிந்த பெண்ணைப்பார்த்ததும், குமாரின் சிந்தனை  இப்படியாக ஓடியது.

'நம் இனமடா..' - என்ற எண்ணம் சட்டென்று ஒட்டிக்கொண்டது.

பளிச்சென்ற ஒரு தெய்வீக அம்சம் இந்தியப்பெண்களின்  முகத்தில் ஒளிர்வதாக தெரிவது, தனக்கு மட்டும்தானா என்ற சந்தேகம் எப்போதும் குமாருக்கு உண்டு.

இந்தியப் பெண்கள் சேலை கட்டுவதும், பூ வைத்து பொட்டு வைப்பதும் தீராத ஆவலைத்தூண்டுகிறது ஆஸ்திரேலியாவில் வாழும் பெண்களுக்கு. அரசியல் பெண் தலைவர்கள் இந்திய விழாக்களில் சேலை மற்றும் பொட்டுடன் கலந்து கொள்வார்கள்.வெட்கம் அவர்கள் அறியாத ஒன்று. ஆனால், இந்த சமயங்களில் அவர்கள் முகத்தில் இழையோடும் வெட்கம் அபரிமிதமான அழகு.

மூன்றாம் வகுப்பில் தன்னை அறியாமல், ஆசிரியரின் கட்டுப்பாட்டில், நிகழ்ந்த ஒரு சின்ன படிப்பினை, இன்று உலகளாவிய நிலையில் நிலைத்திருப்பதை எண்ணி உள்ளூர சந்தோஷமாக இருந்தது குமாருக்கு.

*** *** ***

'சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை எரித்தான்' - என்று புராணக்கதைகள் சொல்லிக்  கேள்விப்பட்டிருக்கிறோம்.

மூன்றாவது கண் இருக்குமிடம் நெற்றி. இதையே ஆக்ஞா என்றும் சுழு முனை என்றும் சொல்வார்கள். இங்குதான் பிட்யூட்டரியில் சுரக்கும் இனப்பெருக்கத்திற்க்கான ஹார்மோன்கள் வெளிப்படுவதற்கான இடம். அதாவது, காம உணர்வுகளைத்தூண்டும் எண்ணங்கள் இங்குதான் உருவாகிறது. 

நம்முடைய உணவு பழக்கம், சுற்றுப்புற சூழல்களால் காம உணர்வுகள் இல்லாத நேரமே இல்லை என்னும் வண்ணம் நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. காமத்தை  ஏதோ ஒரு வழியில் முறைப்படுத்த வேண்டும். 

மன்மதனை எரித்த சிவன் எதை பூசிக்கொண்டு  எரித்தானோ,  அதையே நாமும் செய்ய வேண்டுமானால் சுடுகாட்டுச் சாம்பலைத் தான் பூசிக்கொள்ள வேண்டும். ஆனால், அது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லை என்பதால் சித்தர்கள் நமக்கு திருநீற்றை வழங்கி சென்றிருக்கிறார்கள்.

திருநீறை அணிவதால் காம உணர்வுகள் முறைப்படுத்தப்படும். இன்னும் ஒரு நிலை மேலே சென்று, நமக்கு காம உணர்வால் வெளிப்படும் ஆசையை பாழ்படுத்தும்  முறையை காண்பிக்கிறார் திருமூலர்.

திருமந்திரம் - 1937

பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.  

உள்ளம் உருக அனலை மூட்டுகின்ற  இடமே புருவ மத்தியான சுழு முனை.

அங்கே திருநீறை அணியுங்கள். காமன் உங்கள் வசப்படுவான், காலமும் உங்களை தாலாட்டும்.

*** *** ***

இந்துக்கள் ஓட்டுக்காக கோயிலினுள்  திருநீறணிந்து, இஸ்லாமியர்கள்  ஓட்டுக்காக  திருநீரைத் துறக்கும் சுண்ணாம்புகளை இனங்கண்டு ஒதுக்கித்தள்ளுங்கள். 

தர்காக்களில் வழங்கும் திருநீறும் புனிதமானதே. துஷ்ட ஆவிகளை தூர நிறுத்தும் ஆற்றலைக் கொண்டது.

*** *** ***








Tuesday, January 21, 2025

கதிரொளியில் உயிரலைகள்

கதிரொளியில் உயிரலைகள் 






அணுவினுள் ஆற்றலாய் நின்றியங்கும்
அணுவினும் நுண்ணிய பருப்பொருளே  
உயிரினை உடலுடன் ஒன்றிணைக்கும் 
உயரழுத்த  மின்காந்த அலைகள்


அணு, அறிவியல் கண்டறிந்த மிகச்சிறிய பருப்பொருள். அணுவை பகுத்தறிய முடியும் என்ற அறிவியலாளர்களின் ஆய்வுகள், அணுவைப்பற்றிய ஆராய்ச்சியை மேலும் தொடர ஆர்வத்தை தூண்டியது. அணுவினுக்குள் நியூக்ளியஸ் என்னும் கருப்பொருளும், அதனை சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான் என்னும் சார்பொருளும் இருப்பதை கண்டறிந்தார்கள். இதையே நாம், சூரியனை நியூக்ளியசாக கொண்டு சுற்றும் கிரகங்களை எலெக்ட்ரான்கள் என்று  கற்பனை செய்து கொள்ளலாம். 

இத்தோடு அறிவியல் ஆய்வு நிற்கவில்லை. எலெக்ட்ரானின் சுழற்சியை ஆராய முற்பட்டார்கள். சுழற்சிக்கு தேவையான ஆற்றலை குவாண்டம் என்று பெயரிட்டு மேலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். குவாண்டம் என்றால் ஆற்றலின் ஒரு அளவுகோல். எலெக்ட்ரானின் சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்ததில் இரண்டு உண்மைகள் தெரிய வந்தது.

வரைமுறைப்  படுத்தமுடியாத வேகத்தில் நியூக்ளியசை சுற்றும்  எலக்ட்ரான்கள், ஒரு நிலையில் பருப்பொருளாகவும், மற்றொரு நிலையில் அலைகளாகவும் செயல்படுவதை உறுதி செய்திருக்கிறார்கள். 

அதாவது, எலெக்ட்ரான்கள் மின்காந்த அலைகளாக  நியூக்ளியசை சுற்றிக்கொண்டிருக்கிறது. இங்கே குவாண்டம் என்னும் இறை ஆற்றல் நியூக்ளியசையும், எலெக்ட்ரானையும் இணைக்கும்  ஆற்றலாய் விளங்குகிறது.

இனி, நம் உடலுக்கு வருவோம். உடலுடன் உயிர் இணைந்தே செயல்படுகிறது, நியூக்ளியசும் எலெக்ட்ரானும் போல. இங்கே குவாண்டமாக செயல்படும் ஆற்றல் இறை ஆற்றல். மின்காந்த அலைகளாக உடல் முழுவதும் உயிருடன் இணைந்து செயல்படுகிறது.

அதாவது, உடலை உயிருடன் கட்டி இருக்கும் மின்காந்த அலைகளே இறைவன்.

ஒவ்வொருவர் உடலிலும் இவ்வாறாக இறைநிலை செயல்படுவதை  திருமூலர் மிகத்தெளிவாக நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லி சென்றிருக்கிறார்.

திருமந்திரம் - 2002

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 

நீர் நிறைந்த குடங்களை சூரிய ஒளியில் வைத்தால், அனைத்து குடங்களிலும் சூரியனின் பிம்பம் தெரியும். குடத்தில் மூடி வைத்துக்கொள்ளலாம் என்றால் சூரியனை  குடத்தில் அடக்க முடியாது.

விஷத்தை உண்ட இறைவனும் அனைத்து உயிர்களின் உடலில் தோன்றி இருப்பதும், நீர் நிறைந்த குடத்தில் தோன்றிடும் சூரியன் போலத்தான்.

மின்னலைகளாக, ஒப்பற்ற ஆனந்த ஒளிக்கற்றை ஆற்றலாக,  நம் உடலில் இருப்பது இறைவன்.


*** *** *** *** *** 

இறைநிலை தியானம் 

மனதை புருவ மத்தியில் நிறுத்தி, திரிவேணி சங்கமமாக உடல், உயிர் மற்றும் இறை ஒன்று கூடுவதை கவனிப்போம். 

அகத்தை திறக்கும் திறவுகோல் உள்ளம். உள்ளமே நம்முடலையும், உடலுடன் உயிர் இணைந்து  இருப்பதையும் உணர்கிறது. 

உடல் நிலத்தின் பண்புகளால் ஆனது. நிலத்தில் கிடைக்கும் உணவினைக்கொண்டே தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

உயிர் உருவான நாளிலிருந்து உடலுடன் இணைந்து செயல்படுகிறது. உயிரை காற்றிலுள்ள பிராண வாயு பாதுகாக்கிறது. உயிர், உடலின் ஒவ்வொரு சிற்றறையிலும் உடல் இயக்கத்துடன் இயைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

உடலும், உயிரும் இணைந்து செயல்பட்டாலும், இணைப்பு ஆற்றலைப்பற்றி அறியாமல் இருக்கிறது மனம். குவாண்டம் அறிவியல் மூலம், இரண்டையும் இணைப்பது இறை நிலையிலுள்ள மின்காந்த அலைகள் என்று அறிந்து கொண்டோம்.

மனதை புருவ மத்தியில் நிறுத்தி, திரிவேணி சங்கமமாக உடல், உயிர் மற்றும் இறை ஒன்று கூடுவதை கவனிப்போம். 

முதலில் உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உண்மைகளை ஒவ்வொன்றாக கவனத்தில் கொள்வோம்.

பஞ்சபூதங்கள் - 5:

உடலைப் பெற்றுத்தந்தது நிலம். உடலில் நீரோட்டமாக உள்ளது சக்தி பரிமாற்றம். வெப்பமே அனைத்து உடல் காரியங்களுக்கும் அடிப்படை காரணியாக இருக்கிறது. காற்று உயிரை நிலை நிறுத்தும் பணியை செய்கிறது. ஆகாயம் உடலின் சிற்றறைகளில் உள்ள உயிரை இணைக்கும் அலை வரிசையாக உள்ளது. இவ்வாறாக பஞ்சபூதங்களின் செயல் தொடர்ந்து நம் உடலில்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஞானேந்திரியங்கள் - 5: 

உடல் இயக்கத்திற்கு தேவையான அவசியங்களை கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய் உண்டாக்கித்தருகிறது.

கர்மேந்திரியங்கள் - 5:

ஐம்புலன்கள் உண்டாக்கும் அவசியங்களை நடத்தி தருவது, கால், கை, வாய், கருவாய் மற்றும் எருவாய் எனப்படும் கர்மேந்திரியங்கள்.

தன்மாத்திரைகள் - 5:

ஐம்புலன்களால் உண்டாகும் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் மற்றும் நுகர்தல் போன்ற உலக அனுபவங்களை உணரச்செய்கிறது.

மேலே குறிப்பிட்டவை எல்லாம் உடலுடன், உயிர் அனுபவிக்கும்  உண்மைகள். 

அந்தக்கரணங்கள் - 4:

உலக வாழ்வின் அனுபவத்தை உடலுக்கும், உயிருக்கும்  கொடுப்பது அந்தக்கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி.

இந்த 24 உண்மைகளும் ஆன்ம தத்துவங்கள் என்றும் அறியலாம். இதில் முக்கியமாக மனம். மனமே அனைத்துக் காரியங்களுக்கும் முன்னிலை வகிக்கிறது.

மனதை புருவ நெற்றியில் நிலைப்படுத்தி, மின்காந்த அலைகளான இறை ஆற்றலை பெறுவதாக தியானம் செய்வோம்.

முதலில், புருவ நெற்றியில் உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் உருவத்தை தியானிக்க ஆரம்பியுங்கள். அந்த பரு உருவம் மறைந்து மின்னலைகளாக மாறும் வரை தொடர்ந்து தியானம் செய்து வாருங்கள்.

*** *** *** *** ***

கொஞ்ச நாட்களில் இந்த தியானத்தின் பலன்களை நீங்களே மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

இறைநிலை தியானம் உங்களுக்கு சீராக அமைய வாழ்த்துகள்.

*** *** *** *** **


  





Friday, November 22, 2024

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம் 

 



எனக்கு தீப ஆராதனை. 

இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்கள், நீர் என மாற்றி மாற்றி  ஊற்றி அபிஷேகம் நடந்தது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆலயப்பணியாளர்கள் அவர்களை ஒழுங்குபடுத்தி  வேகமாக அவர்களை வெளியேற்றி, வரிசையில் வந்த அனைவரும்  என்னை தரிசிக்க வசதி செய்து கொண்டிருந்தார்கள்.

'முருகா.. முருகா.. வெற்றி வேல்.. வீர வேல்..' - வெளியே கூட்டம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

தரிசனம் முடித்தவர்கள் திண்ணையில் என் மீது அமர்ந்து கொண்டு ஊர்க்கதை  பேசிக்கொண்டிருந்தார்கள். பஞ்சாமிர்தத்தை விட அதுதான் சுவையாக இருக்கும் போல.

சின்னஞ்சிறு குழந்தைகளும் என்மீது படிக்கட்டுகளில் தவழ்ந்து  ஏறிக்கொண்டிருந்தார்கள். வெயில் பட்டு படிக்கட்டுகள் சூடாவதால் அதன்மீது தென்னை நார்ப்பாய்கள் போட்டிருந்தார்கள்.

எனக்கே மலைப்பாக இருக்கிறது. எண்ணற்ற காலம் நீரிலும், நிலத்திலும் பெரிய பாறையாக இருந்த நான் இன்று கருவறைத் தெய்வமாகவும், அமர்வதற்கு  திண்ணையாகவும் மற்றும் படிக்கட்டுகளாகவும் மாறி இருக்கிறேன்.

'ஹரஹர ஹரஹர.. வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா..'

பார்த்தவர்களுக்கெல்லாம் பாறையாய் தெரிந்த நான் ஒரே ஒரு ஜோடி கண்களுக்கு மட்டும் தெய்வமாய் தெரிந்திருக்கிறேன். அந்தப்பார்வையில் மட்டும் நான் மூலவராகவும், திண்ணைக்கற்களாகவும், படிக்கட்டுகளாகவும் தெரிந்திருக்கிறேன்.

சிற்பியின் கலைக்கண்கள்.

இன்று, என்னை வணங்குபவர்களின் கண்கள், பக்திக்கண்கள். அவர்களுக்கு நான் தெரியவில்லை; மாறாக அவர்கள் பக்தி சிரத்தையுடன் வணங்கும் அந்த தண்டாயுதபாணியே தெரிகிறார்.

தந்தைக்கு மகளாக இருக்கும்  ஒரு பெண், கணவருக்கு  மனைவி, குழந்தைகளுக்கு அம்மா. இன்னும் எத்தனையோ உறவுகள் அந்த பெண்ணை சுற்றி. 

பெண்ணை பெண்ணாக மட்டும் பார்க்க முடியுமா என்ன?

திருமந்திரம் - 2290

மரத்தை மறைத்தது மாமத யானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது அங்கே மரம் தெரியவில்லை. அது மரம்தான் என்றுணரும்போது அங்கே யானை  மறைந்து மரமாகி விடுகிறது. பஞ்ச பூதங்களில் முதலான வானம், எங்கும் பரந்துள்ள பரம்பொருளை உள்ளடக்கி மறைத்து நிற்கிறது. பரம்பொருள்தான் அனைத்தும் என்னும்போது, வானம் மறைந்து விடுகிறது.


*** *** *** *** *** ***








 

 

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...