காலப்பரிமாணம்
இப்பொழுதென்பது எப்பொழுதும் இல்லை;
எப்பொழுதும் இருப்பதுவோ இப்பொழுதே!
காலம் ஒரு மாயை.
பிறவிப்பயனால் காலப்பெருவெளிக்குள் நுழைகிறேன்.
அங்கே நிகழ் காலம் என்னும் மாயா உலகின் அமானுஷ்யப்பெருவெளிக்குள் நிற்கிறேன்.
ஒரு புறம், எக்காரணம் கொண்டும் திரும்பி செல்ல முடியாத, மாயமாக மறைந்துவிட்ட கடந்த காலம். எதிரிலோ, கண்களுக்கோ மற்ற புலன்களுக்கோ, எட்டாத எதிர் காலம்.
இதில் நான் உணரும் உண்மை என்னவென்றால், உடலுடனும், உடலற்றும் கடந்த காலங்களில் நாம் இருந்துகொண்டே இருந்திருக்கிறோம் அல்லது இருக்கிறோம் .
திருமந்திரம் - 80
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
திருமூலர் சூக்கும உடலுடன் பல கோடி வருடங்கள், காலப்பெருவெளிக்குள் இருந்ததை 'இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி' என்று குறிப்பிடுகிறார். பின்னர், இறை அருளால் மூலனின் உடலில் புகுந்து, மீண்டும் மனிதப்பிறவி பெறுகிறார்.
சித்தர்கள் முக்காலமும் அறிந்த ஞானிகள். அவர்களுக்கு காலப்பயணம் மிக எளிதாக கை வரப்பட்டிருக்கிறது. போகர் தனது போகர் 7000 என்ற நூலில் காலப்பயணம் செய்ததைப்பற்றிய பாடல்களை எழுதி இருக்கிறார். காலப்பயணத்தில் சந்தித்த முனிவர்களிடம் இருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மருந்து செய்யும் முறையை கற்று வந்திருக்கிறார். எதிர்காலப்பயணம் பற்றிய குறிப்பு எதையும் விட்டு சென்றதாக தெரியவில்லை.
எதிர்காலப்பயணம் பற்றிய குறையை, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்கள் தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள ஆகாய விமானம் முதல் கைப்பேசி வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே செதுக்கிய சிற்பங்களில் விட்டு சென்றிருக்கிறார்கள். அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிர்கால பயணம் மேற்கொண்டு, இன்றைய நாகரிகத்தை அன்றே தெரிந்து சிற்பமாக்கி இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய், புதிதாக கட்டிக்கொண்டிருந்த கோயிலின் நுழைவாயில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதை கோயிலின் உட்புற வளாகத்தில் சிற்பமாக செதுக்கி சென்றிருக்கிறார்கள். அந்த அதிசயத்தை பார்க்க விரும்பினால் நீங்கள் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும். அங்கே நீங்கள் காணும் வெளிப்புறம் சிதிலமடைந்த முன்புற வாசல், அச்சு அசலாக உட்பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள சித்திரத்தில் காணலாம்.
காலப்பயணத்தில் கடந்த காலம், எதிர் காலம் சென்று வரும் சாத்தியம் நிகழ் காலத்தில் உண்டு என்னும் உண்மை நமக்கு தெளிவாகிறது.
[சமீபத்தில் OTT-ல் வெளிவந்த BLINK என்னும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட கன்னட திரைப்படம் காலப்பயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.]
இவை அனைத்திலிருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டென்றால் அது காலப்பயணம் சாத்தியம் என்பதே.
இனி முக்கியமான ஆய்வுக்கு வருவோம்.
இன்றிலிருந்து முறையாக பயிற்சி செய்து ஒரு பத்து வருடங்களில் நாம் காலப்பயணம் செய்யும் திறனைப்பெறுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அன்றைய நாளில், சோதித்து பார்க்கும் ஆவலில் பத்து வருடம் பின்னோக்கி இன்றைய நாளுக்கு வந்தால், நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். பத்து வருடம் முன்னோக்கி இருந்த நான் அந்த உணர்வு நிலையில் இருப்பேன். அதே சமயம், நிகழ் கால வாழ்விலும் எழுதிக்கொண்டிருக்கும் நானும் இன்றைய உணர்வு நிலையில் இருப்பேன்.
இது எப்படி சாத்தியம்?
முறையாக யோகப்பயிற்சி செய்த சித்தர்களுக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.
காலப்பெருவெளியில் எங்கு வேண்டுமானாலும் என்னால் செல்ல முடியும்; உணர்வு நிலையில் இருக்க முடியும். அதாவது, கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று நிலையையும் ஒரே காலத்தில் அனுபவிக்க முடியும்.
முக்காலமும் ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. பழைய கால இசைத்தட்டை எடுத்துக்கொள்வோம். அதில் எந்த புள்ளியில் முள்ளை வைக்கிறோமோ அங்கிருந்து இசை கேட்க ஆரம்பிக்கும். அப்படித்தான் மாயை நிலையில் உள்ள காலமும்.
நாம் உறக்கத்தில் இருந்து கண்விழிக்கும் வேளையில், காலப்பெருவெளியில் எந்தப்புள்ளியில் இருந்து வேண்டுமானாலும் விழித்தெழலாம். விழித்தெழுவது எந்த யுகமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
யோசிப்பதற்கே சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. யோசிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் என்னைப்போல் நீங்களும் காலப்பரிமாணத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.
மெய்யியல் பற்றிய உண்மை விளக்கம் தரும் சித்தர்கள், வித்யா தத்துவம் என்று மாயா தத்துவத்தை விளக்குகிறார்கள். மாயா தத்துவத்தின் ஏழு கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காலம்.
காலம், காலப்பரிமாணம் என்பது மீள முடியாத ஒரு மாயை.