Sunday, June 14, 2026

மும்மலங்கள்

மும்மலங்கள்




கோயிலைக்கட்டியவன் மனிதன் 
சிலைதனை வடித்தவன் மனிதன் 
உண்டியலை வைத்ததும் மனிதன் 
பூட்டினைப்  போட்டதும்  மனிதன் 

- சேருகின்ற காசுக்கு காவலாளியா இறைவன்? 

பன்னீரில் நீராட்டி கற்சிலைக்கு 
பளபளப்பாய் பட்டுஜரிகை வேட்டிகட்டி 
வண்ணமலர் மாலைபோட்டு வாழ்த்துப்பாடி 
ஆயிரம் விளக்கில் தீபாராதனை

- மும்மலங்களை கடந்தவன்  இறைவன்  

ஆணவமே மும்மலத்தின் முதல்மலம்  
இம்மூலஇருள் இல்லாத அமரருமில்லை
ஆணவத்தை கலைப்பது அறிவாகும் 
அறிவுக்கு அறிவே  பகையாகும்  

- ஆணவ மலம் மட்டும் கொண்டவர் விஞ்ஞானாகலர் 

அகவிருளினை போக்கிடும் கலையொன்றே 
ஆணவத்தை அகற்றிடும் ஒளியாகும்   
மனமதை தானென்று  கொள்ளலாகும் 
கன்மமென்ற மலமுமிங்கு  அதனையாளும் 

- ஆணவமும், கன்மமும் கொண்டவர் பிரளயாகலர்  

கலைத்தொழிலும் கன்மமென்ற வித்தையாகி 
காலமெல்லாம் நிழலான மாயையென்றாகும்
பெண்ணின் கருவறைக்குள் நுழைந்தக்கணம் 
மண்ணின் மாந்தரின் பொதுமாண்பதுவாகும்  

- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களில் வாழ்பவர் சகலர் 

விளக்கம்:

மெய்யியல் பற்றிய உண்மை  அறிய முற்படுவோர்க்கு சித்தர்கள் காட்டிய அருள்நெறி:

மனிதனின் சாத்வீக, சத்திரிய மற்றும் தாமச  என்னும் முக்குணங்களை ஆள்வது முப்பத்தாறு  பிரதம உண்மைகள். அவைகள், இருபத்தி நான்கு உண்மைகள் ஆன்ம உண்மைகள் என்றும், ஏழு உண்மைகள் வித்தியா உண்மைகள் என்றும், ஐந்து உண்மைகள் சிவ உண்மைகள் என்றும் பிரிவினைப்படும்.

இதில் வித்தியா உண்மைகள் என்பது,

 1. காலம்  2. நியதி  3. கலை  4. வித்தை  5. அராகம்  6. புருடன்  7. மாயை 

கலை என்பது ஆன்மா கொண்டுள்ள மூல மலமான அறியாமையை கலைக்கக்கூடியது. அறியாமை அகலும்போது, அது மாயையின் பண்பு என்றறியாமல் ஆன்மா தானே முன்னின்று செய்கிறேன் என்று, 'நான்' என்ற அறியாமையை மீண்டும் ஏற்றுக்கொள்கிறது.  இதனால் தான் கலையின் மூலம் பெற்ற அறிவுக்கு புறம்பாக, சிற்றறிவின் எல்லைக்குள்  நின்று செயல்படுகிறது. இந்த நிலையே, அவரவர் பிறப்பின்  கன்மம் என்றறியப்படுகிறது. கலை கற்றுத்தந்த வித்தையின்மீது ஈர்ப்பு ஏற்பட்டு, விரும்பி வித்தைகளை அறிய முயற்சி செய்கின்றது.  இந்த விருப்பமே அராகம் என்பது.

மேற்படி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஆன்மா புருடன் என்றறியப்பட்டு, பிறப்பிலிருந்து இறப்பு வரை, மாயையினால் சூழப்பட்டு,  மாயா உலக நியதிகளிலிருந்து விடுபடாமல் வாழ்ந்து மறைகிறது.

பள்ளிகளும், கல்லூரிகளும் வித்யாலயா என்றோ கலைக்கல்லூரி என்றழைக்கப்படுவது இதனால்தானோ என்னவோ?

*****     *****    *****    *****    *****    *****    *****


 


  



No comments:

Post a Comment

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...