Sunday, May 19, 2019

சாமியார் ஆவது எப்படி?

சாமியார் ஆவது எப்படி?

பொறந்தாலும்
ஆம்பளையா
பொறக்கக்கூடாது






ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை.  ஞானம் பிறந்து விட்டது எனக்கு.

காப்பி குடிச்சிட்டு, சொல்லிட்டு கிளம்பிற  வேண்டியதுதான்.

'எங்கேடி காப்பி'

'என்ன டி யா? விளக்குமாறு பிஞ்சிரும்'

'ஆமாண்டி பொண்டாட்டி. பாரு, இதுல கூட டீ இருக்கு'

'எனக்கு ஞானம் வந்துருச்சு. காப்பி குடிச்சிட்டு சன்யாசம் போறேன். ஒரு நாலு மொழ வேட்டி  எடுத்து வை'


'அது டூ மச் டாட். ஒரு ஈரிழை துண்டு போதும்' - அன்பு மகளின் பதில்.

'அது கூட அதிகம்தான். ஒரு கர்ச்சீப் போதும்'- நான் கொஞ்சமும்  எதிர்பார்க்காத சிந்தனை மனைவியிடமிருந்து.

பொறப்பட்டாச்சு, இனி வெள்ளியங்கிரி மலையில் போய் செட்டில் ஆயிர வேண்டியதுதான்.

இப்ப கேள்வி எல்லாம் எங்கே செட்டில் ஆவது? மலை அடிவாரம் உள்ள கிராமத்தில் தங்கலாமா, இல்லை அடிவாரத்தில் தங்கலாமா?

கிராமத்தில் தங்குவதும்  ஒன்றுதான், வீட்டில் இருப்பதும் ஒன்றுதான். மனம் அலை பாய விடக்கூடாது.

ஏழு மலை இருக்கு. மத்த சாமி மலைகளில் எல்லாம் பாத்தால், சாமியார்கள், பிச்சைக்காரர்கள் அங்குமிங்கும் தங்கி இருப்பார்கள். இந்த வெள்ளியங்கிரி மலை மேல்  மட்டும் சாமியார்கள் , பிச்சைக்காரர்கள், பிராமணர்கள்  என்று யாரும் இல்லையே. கண்ணுக்கு புலப்படாமல் நிறைய சித்தர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்கிறார்கள்.

அடிவாரத்தில் மட்டும் ஒரு சாமியார் கும்பல் இருக்கு. அதுகூட சேந்துக்கலாமா?

நோ.. நோ.. இவர்கள் பணம் கேட்கிறார்கள். நான் இல்லற வாழ்வை முற்றும் துறந்து ஞானம் பெற்றவன். அவர்களுடன் சேர்ந்து,  இரந்து வாழ மாட்டேன்.

'மலை மேல எல்லாம் ஏறி தங்க வேண்டாம் டாட்..'

'ஏம்மா..'- மகளின் அக்கறை பற்றி அவசரமாக ஆனந்தப்பட்டு கேட்டேன்.

'நீ விட்ற கொறட்டைக்கு, எல்லா மிருகங்களும் பயந்து மலய  விட்டு ஓடி, ஊருக்குள்ளாற வந்துரும்'

'மேற்கு தொடர்ச்சி மலையில், ஒரு ஜீவ ராசி கூட தங்காது'- இது என் தர்ம பத்தினி.

'சரி. என்னை யாரும் பாக்க வரவேண்டாம்'- என் தன்மானத்தை சீண்டுகிறார்கள்.

'நீ வராம, இருந்த சரி' - கலிகாலம் பேசியது.

முதல் மலை உச்சியில், வெள்ளை விநாயகர் கோவில். ஒரு சின்ன ஓய்வு மேடை இருக்கு. அங்கே தங்க முடியாதே.

ரெண்டாவது மலை முடிவில், பாம்பாட்டி சித்தர் குகை இருக்கு. அங்கிருந்து கொஞ்சம் மேலே, ஒரு நீரூற்று இருக்கு. குகைக்குள் தங்கலாம். நான் தங்கினால் அவர் எப்படி தங்குவார். இந்த குறட்டை வேற கூடவே வருது. பாவம் இல்லையா பாம்பாட்டி சித்தர். வேண்டாம் ரெண்டாவது மலை.

ஆறாவது மலை முடிவில், நீர் சுனை இருக்கு. ரொம்ப குளிரும். குளிருதுன்னு, கஞ்சா, தண்ணின்னு கெட்ட  பழக்கம் வந்துரும். பொண்டாட்டி திட்டுவா. வேண்டாம்ப்பா.

அட. சாமியார் ஆயிட்டா, 'மகளே, என்ன வரம்  வேண்டும் கேள்'-னு சொல்லிறலாம். சாமியார் ஆன பின்னால்  ஆம்பளைங்க பொண்டாட்டிக்கு  எக்காரணம் கொண்டும் பயப்படக்கூடாது.

பொண்டாட்டி பயமில்லாமல் வாழ்க்கை. ஆஹா.. நினைத்தாலே இனிக்குதே!

ஆனாலும், ஆறாவது மலையும்  சரிப்படாது.

ஏழாவது மலையில் நிக்க கூட இடம் இல்ல. ஆனா பக்க வாட்டு சரிவுல ரெண்டு குடிசை இருக்கு. தண்ணி இல்ல, ஒண்ணும் இல்ல எப்படி தங்க? அவரே, சிவனேன்னு குகைக்குள் உக்காந்திருக்கார். முதலில், இருக்கிற குகையில் சக்தி அம்மா இருக்காங்க. நுழைவு பாறை அடியில் நம்ம ஞான முதல்வன். எல்லாம் ஒண்டுக்குடித்தனம், நமக்கெங்கே இடம் அங்கே.

யோசிச்சிட்டே இருந்ததில் நேரம் போனதே தெரியல. மணி பன்னிரண்டு பக்கம் ஆயிருச்சே.

மசாலா வாசனைவேறு  மூக்கை துளைத்து என் ஞானத்தை கேலிக்குறியாக்கியது.

பனியில்லாத மார்கழியா?
மட்டனில்லாத ஞாயிரா?

இன்னிக்கு மட்டனா?.. சிக்கனா?..

'காடை, மசாலாவில் ஊறுனது போதும். எடுத்து அவனில் வை' - மகளுக்கு கட்டளை மனைவியிடமிருந்து.

இந்த வாரம் சாமியார் ஆகாட்டி என்ன,  இந்த வாரம் வந்த ஞானம் அடுத்த வாரம் வராமலா போகும்.

'தயிர் கம்மியா இருக்கு தயிர் சட்னி பண்ண. போய் வாங்கிட்டு வாங்க'

ஹய்யா.. அப்படியே வெத்தலையும், பாக்கும், சுண்ணாம்பும் வாங்கிட்டு வந்திரலாம். ஒரு புடி புடிச்சிட்டு மத்தியானம் தூங்கினா, கொறட்ட சத்தத்துக்கு பக்கத்து வீட்டு நாய் கத்தி கிட்டு கிடக்கும். எனக்கென்ன, கத்திட்டு போகட்டும்.

சாமியார் ஆயிரலாம்னு நெனச்சோமே. சாப்பாடு யார் குடுப்பான்னு நெனக்கலியே. அதுதான் மலை மேல ஒரு சாமியார் கூட இல்ல.

நமக்கு சாப்பாடுதான் முக்கியம்.

இல்லறத்தார் சாமியார் ஆவது இப்படித்தான்.

[கல்யாணமான ஆண்களின் மனக்குமுறலை எண்ணி  எழுதப்பட்டதால், இந்த இதிகாசத்தை ஆண் இனத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.]

ஒரு நல்ல விஷயம். புலன்களை அடக்க கூடாதுன்னு திருமூலரே சொல்லி இருக்கார். ஐம்புலன்களை அடக்க சொல்பவன் அறிவில்லாதவன்னு சொல்லி இருக்கார்.

எனவே, வாய்க்கு ருசியா சாப்பிடுறது தப்பில்ல.

திருமந்திரம்

அஞ்சும்  அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் 
அஞ்சும்  அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும்  அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா  அறிவை அறிந்தேனே. 

தெளிந்த அறிவுடையவர் ஐம்புலன்களை அடக்க சொல்ல மாட்டார்கள். தேவர்களாலும் புலன்களை அடக்க முடியாது. அப்படியே, அடக்கினால் நாம்  உணர்வுகளற்ற ஜடத்திற்கு சமமாகிவிடுவோம். அதனால், ஐம்புலன்களையும் அடக்காமல் அதனை  அறிந்து வாழும் அறிவினை பெற வேண்டும்.


*** *** ***

நீங்களும் சாமியார் ஆகலாம்.

எளிய முறையில் சாமியார் ஆவது எப்படி என்று விளக்கி இருக்கிறேன்.

இனி, எந்த  பொண்டாட்டி தொல்லையும்  இருக்காது.
என்று நினைப்பவர்கள் சற்று ஒதுங்கிக்கொள்ளவும்.








No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...