Saturday, May 18, 2019

உயிர் வலி

உயிர் வலி 

சட்டி சுட்டதடா
கை விட்டதடா

பொருள்:

'மிஸ் அழாதீங்க மிஸ். பாருங்க, எங்களுக்கும் அழுகை அழுகையா வருது'- ஆறாங்கிளாஸ் அமுதா, கணக்கு மிஸ்ஸுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள், 'ஏன்டா, வீட்டுக்கணக்கு போட்டுட்டு வரலைன்னு', சதீஷை அடித்துவிட்டு மனவலியால் கண்ணீர் விட்ட ஆசிரியைக்கு.

வகுப்பறை முழுக்க, தேம்பி அழும் சத்தம். அடிவாங்கிய சதீஸ் மட்டும், 'என்னால் தானே எல்லாரும் அழுகிறார்கள்' என்று மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தான். குழந்தைகள் கண்ணீரால்  அன்பை காட்டினார்கள்.

மனவலியை கொடுக்கும் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

'இன்றைக்கு கவிஞர் திராட்சை ரசத்தை தொடவில்லை' - தோழிகள் கடந்து செல்லும்போது சொன்ன வார்த்தைகள் தேனாய் பாய்ந்தது, மாதாந்திர ஓய்வில் இருந்த, அடிமைப்பெண் லைலாவிற்கு.

இந்த காதலின் மொழியே தனி. வாய் மட்டும் மௌனிக்கும், உடல் முழுதும் பேசும். அவர்கள் அறிய மறுப்பார்கள்  காதலர்களென்று, ஆனால்  சுற்றி உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும், அவர்கள் காதலர்கள்தானென்று.

லைலாவின் வேலை, அந்தப்  பாரசீக கவிஞருக்கு திராட்சை ரசம் ஊற்றி கொடுப்பது. மதுவிற்குள்  காதல் மனதை ஊற்றிக்கொடுத்து விட்டாள், லைலா.  மற்றவர்கள் கொடுத்ததை ஏற்கவில்லை என்பதே, அவள் காதலின் சந்தோசம்.

'காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க்  கொண்டு சேர்க்குமோ?'

காதலின் வலி காதலர்களுக்கு மட்டுமே தெரியும்.

'நைனா.. நைனா.. போவொச்சு  நைனா.. ரா நைனா'- ஐந்து வயது  மகள் கண்மணியின் கண்ணீரின் ஊடே தெரிந்த தன்  உயிரை  கடைசியாக பார்த்து ஐந்து  வருடங்கள் ஓடி விட்டது. கல் உருண்டு வந்து தொடை சதையை சிதைத்த வலியை மீறி மகளின்  கண்ணீர் கிருஷ்ண தேவராயனை கலங்கடித்தது.

போர்க்கைதிகளாக  அருள்மொழி வர்மனால் கொண்டு வரப்பட்ட பல்லாயிரம் வீரர்களில் ஒருவன். இன்று பெருவுடையார் கோவிலை கட்டும் கல் நகர்த்தும் தொழிலாளி. கடவுளை வேரறுக்க வேறென்ன காரணம் வேண்டும். இன்னும் முழுமை பெறாத நிலையில் தஞ்சை பெரிய கோவில் இருப்பது இவர்கள் கொடுத்த சாபம் அல்லாமல், வேறென்ன?

பாச வலி உயிர் வலியை மீறியது, கடவுளையும் எதிர்த்து நிற்கும்.

'மேல வரைக்கும் போனா ஆயிரத்து ஐநூறு, ஒரு தல சுமைக்கு'- தலை சுமையை இறக்கி வைத்து, சற்று ஓய்வெடுத்தவன் சொல்லிக்கொண்டிருந்தான், தானும் இதை கூலித்தொழிலாக செய்யலாம் என்று கேட்டவனுக்கு.

குறைந்த பட்சம், அறுபது கிலோ எடையுள்ள தலை சுமை, காலில் சேப்டி பின் குத்திய ஹவாய் சப்பல். படிகளற்ற, வழுக்குப்பாறை பாதை. என்னுடைய அவ்வளவு கால் வலியிலும், இவர்களின் பேச்சு, அந்த தொழிலாளியின்  உடல் வலி பற்றியும், இந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்தையும் நினைத்து கலங்கித்தான் போனது.

பிறவிப்பெருங்கடல் கூட நீந்தி விடலாம்; வீட்டின் தலைவாசலைக்கூட  தாண்ட  முடியாத வாழ்க்கை வலி இந்த விளிம்பு நிலை மக்களுக்கு.

ஏழாவது மலை, கையில் ஊன்று கோலோடு, அடுத்த  அடி  எப்படி வைப்பது என்று தடுமாற வைக்கும் பாதை அது.

'மழைக்காலத்தில் மலை ஏற அனுமதி கிடையாதுங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்ன நெறைய  சனம், செத்துருச்சுங்க மழையில'- அடிவாரத்தில் பக்தர்கள் பேசிக்கொண்டிருந்த செய்தி மனதிலாடியது.

சித்திரை பௌர்ணமி நாட்களில், ஒருவருக்கொருவர் இடைவெளி இல்லாத நெருக்கும் கூட்டம். மேலிருந்து  கால் வழுக்கியோ, தவறியோ விழுந்தால் நேராக இறைவனடிதான். குறைந்தது நாற்பது, ஐம்பது பேரையாவது கீழே இழுத்து சென்று விடும். பெரிய மழை தேவை இல்லை; கொஞ்சம்  தூறலே போதும், வழுக்கி விழுவதற்கு.

முதல் மலை இறங்கும்போது,

 'கொஞ்சம் வயசானவர் சாஞ்சிட்டாருங்க.. கூட வந்தவங்க யாராவது இருந்தா போங்க சீக்கிரம்'

சற்று முன், ஊன்று கோல் தளர்ந்து, ஏற முடியாமல் சென்றவராக இருக்கும் என நினைத்தேன். திரும்பிப்  பார்க்கக்கூட தெம்பில்லை உடம்பில்.

அதே  வாரம்,  செய்திகளில் வெளிநாட்டவர் ஒருவர் மலை ஏறும்போது உயிரிழந்த செய்தி  வந்தது.

உயிரையே பறிக்கும் உயிர் வலி.

கூட்டைத்  திறந்துவிட்டால் அந்த குருவி பறந்து விடும்.

இந்த மாய உலகினை இன்ப மையமாக அனுபவிக்க கிடைத்த ஐந்து இந்திரியங்களும் செயல் நிலை இழந்து, அவைகளை இயக்கும் காமம்  என்னும் சக்தி  விலகும்போது, குருவி பறந்து விடுகிறது.















No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...