Monday, May 25, 2026

கீழ்மை குணம் TN 2026

கீழ்மை குணம் TN 2026 

திருக்குறள்: 1080

எற்றிற்கு  உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் 
விற்றற்கு உரியர் விரைந்து.

கீழ்மை குணம்  கொண்ட கயவர்கள் தயங்காமல் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு குழப்பமான சந்தர்ப்ப  சூழல் உருவானால், தன்னை விற்றாவது அதன் பலனை அடையத்துடிப்பார்கள்.

தி. மு. க.: 
பரம எதிரியுடன் கை கோர்த்து, 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்', என்று  ஆட்சி அமைக்க துடித்தவர்கள்.

அ. தி. மு. க.: 
பரம எதிரியுடன் கை கோர்க்க துணிந்ததல்லாமல், 'அவளும் படிதாண்டா பத்தினியல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்று ஆட்சி தலைமை கேட்டு நாடகம் ஆடியவ ர்கள்.

காங்கிரஸ்: 
வெற்றிக்கு காரணமான கூட்டணிக்கட்சியாக,  மாலையிட்ட மன்னனறை செல்லாமல், பாலொடு பழம் தந்து எதிரியுடன் முதலிரவை பகிர்ந்தவர்கள். 

இ.யூ.மு.லீ.: 
கண்ணில் நீர் பெருக, மாற்றுக்கட்சியில் மந்திரிப்பதவி பெற்று, சிறுபான்மை என்னும் புர்காவை கழற்றி எறிந்தவர்கள்.

வி.சி.க.: 
சாறுண்ணிகளுடன் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த வாழ்வை மறந்து, பதவிக்காக கூட்டணியில் இருந்து விலகி வக்கணை பேசி நடிப்பவர்கள். 

கம்யூனிஸ்ட்கள்: 
காசுக்காக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என  இரு பக்கமும்  ஒட்டிக்கொண்டிருக்கும் வெட்டிப்பதர்கள்.

த.வெ.க.: 
கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படியாவது அனுபவிக்க, பிறவி குணம் மேலோங்க, எதிரிகளின் கோவணத்தை உருவியதோடல்லாமல், அவர்களின் வெற்றியையே கேள்விக்குறி                                 ஆக்கியவர்கள்.











  

Thursday, April 9, 2026

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள் 


நீங்கள் கனவு காண்பவர்களா?

கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருகின்ற தியானிகளின் கனவு.

சரி, வாங்க நம்ம கனவுலகிற்கு போவோம்.

இன்றைய நாளின் கடமைகள் எல்லாம் முடிந்து விட்டது. இனி தூங்கி கனவு காணலாம்.

கண்ணை மூடினால், மனம் எதை எதையோ கொண்டுவந்து கொடுத்து, பழைய நினைவுகளை   அசை போட வைக்கிறது.

தூக்கம் என்றால் என்ன? விழிப்பு நிலையில் இருந்து  எப்படி உறக்க நிலைக்கு செல்கிறோம்?

விழிப்பும் உறக்கமும் சந்திக்கும் நேரத்தில் என்ன நடக்கிறது?

இமைகளில் அன்றைய  நாளின் அனுபவத்தின் பாரம். மன வெளியிலோ  வாழ்வில் கடந்து வந்த தூரம். உடலளவில் உலகின் ஆரவாரம் அடங்கிவிடும்.  ஐம்புலன்களும் இயல்பான  குணத்தை இழந்து விடும். உள்ளம் எங்கே செல்கிறது  என்று  யாருக்கும் தெரியாது. பிறக்கும் முன்னர் உள்ளம் இல்லை. இறந்த பின்னர் உள்ளம் இருக்கப்போவது இல்லை. வாழும் நாட்களிலும்  தூக்கத்தில் உள்ளம் இல்லை.

விழிப்பிலிருந்து உறக்கம், இது  எப்படி நிகழ்கிறது?  உறக்கத்திலிருந்து விழிப்பு எவ்வாறு நிகழ்கிறது? 

சிந்தனை நீண்டு கொண்டே இருந்தது.

இன்றைக்கு எப்படியாவது விழிப்பிலிருந்து உறக்கத்திற்கு செல்லும் பாதையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த இறப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.

உறக்கத்திலிருந்து விழிப்பு நிலை என்பது புதுப்பிறப்பு எடுப்பது போன்றது. விழிப்பும், பிறப்பும்  நம் கையில் இல்லை.

தூக்கத்தின் ஆரம்பத்தில்  மூச்சுக்காற்று சீராக இயங்க ஆரம்பிக்கிறது. மூச்சு காற்றின் பாதையில் உள்ள தசை நார்கள் தளர்வு  நிலைக்கு செல்கிறது. சீராக இயங்கும் காற்று தளர்வு நிலையில் உள்ள தசைநார்களை கடக்கும்போது மெல்லிய ஓசை. இந்த ஓசை காதுக்கு கேட்கிறது. இது நான்கைந்து சுவாசத்திற்கொருமுறை நிகழ ஆரம்பித்தது. விழிப்பு நிலையில் இருப்பதால் காதுக்கு கேட்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாக சுவாச இடைவெளி குறைய குறைய தொடர் ஓசையாக மாறுகிறது. மனம் விழிப்பு நிலையிலிருந்து நழுவி வேறு ஒரு பரிமாணத்தில் இயங்க ஆரம்பிக்கிறது.

முழுவதும் தூக்கத்தில் ஆழ்வதற்குள், மனதில்  தீர்மானித்தபடி, மீண்டும் விழிப்புணர்வு  நிலைக்கு வருகிறேன்.

தூக்கமும் விழிப்புமான இந்த கண நேர கால இடைவெளியில் எனக்குள் என்ன நடந்தது?

எண்ணங்கள் திசை மாறாமல் இருக்க சுவாசத்தையே கவனித்துக்கொண்டிருந்தேன். சுவாசத்தை கவனித்துக்கொண்டிருந்த நான், சுவாச சத்தத்தின் ஊடே, இன்னொரு உலகிற்குள் நுழைகிறேன்.

அங்கே, 'நான் ஒரு பள்ளி மாணவன். நண்பனுடன் கோலி விளையாடிக்கொண்டிருக்கிறேன். பள்ளி மணி அடித்தாகி விட்டது. எல்லோரும் வகுப்பறைக்குள் சென்று விட்டார்கள். நானும் போக முயற்சிக்கிறேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. வீட்டுப்பாடம் செய்யவில்லை. கணக்கு வாத்தியார் ரொம்ப கண்டிப்பானவர். ஒரு கணம் அவரைப்பற்றிய பின்னூட்டம் முழுவதுமாக  உணர்வுக்கு வருகிறது. [காலமான] அம்மா கூப்பிடுகிறார்கள். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை. புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு ஓட வேண்டும். ஓடுகிறேன். மூச்சு வாங்குகிறது.' 

மீண்டும் விழிப்புணர்வு நிலையில் படுக்கைக்கு திரும்புகிறேன். சுவாசத்தின் சப்தம் நின்று விட்டது. மூச்சு இன்னும் அடங்கவில்லை. உடலில், ஓடியதனால் உண்டான  லேசான  வியர்வை பூத்திருந்தது. படபடக்கும் இதயம் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.

நான் என்னும் இந்த உடல் ஓடவில்லை. மனம் ஓடி இருக்கிறது.

எனக்கு பதிலாக என்னுடைய சூக்கும உடல் ஓடி இருக்கிறது. கனவையே நனவாக உடல் அனுபவித்திருக்கிறது.

இங்கே, விழிப்பு நிலை பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

விழிப்பு நிலை என்பது இரண்டு வகையானது. புறவெளி மட்டுமே உணரும் விழிப்பு நிலை; மற்றொன்று அகவெளி மட்டுமே காணுகின்ற விழிப்பு நிலை. சாதாரண நேரங்களில் நாம் இருப்பது புறவெளி விழிப்பு. தியானத்தின் இடையில்  நடப்பது அகவெளி விழிப்பு.

பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள் செயல்  நிலையில் இருக்கிறது.  இது புறவெளி விழிப்பு நிலை. உறங்கும் நேரத்தில் இங்கிருந்து கனவு நிலைக்கு செல்லும்பொழுது, சூக்கும உடலாக மாறி புது உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவோம்.

ஒருவர் தியானம் செய்யும்போது மனம் உள்நோக்கி திரும்புகிறது. அப்பொழுது, பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள், விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்கிறது.

தியான நிலையிலும்,  விழிப்பு நிலை  பரு உடலில் இருந்து நுண்ணுடலுக்குள் செல்கிறது.

விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்ல மனம், புத்தி, அகங்காரம் வழிகாட்டியாக இருக்கிறது. மனமும் புத்தியும் மட்டும் செயல்படும் நிலையில் கனவு நிலை மாறி உறக்கம் உண்டாகிறது. மனமும் புத்தியும் மறைகின்ற பொழுதில் சித்தம் தலை தூக்கி துரியம் எனப்படும் பேருறக்க நிலைக்கு செல்கிறது.

தியானத்தில் வெறும் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. இதுவே சமாதி நிலை.

திருமந்திரம் - 2201

புரியட் டகமே பொருந்தல்  கனவு 
புரியட் டகம் தன்னில் மூன்று கனவு 
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி 
புரியட் டகத்து  ஒன்று புக்கல்  துரியமே.    

புரியட்டகம் என்றால் சூக்கும உடல் அல்லது நுண்ணுடலில் வருவது கனவு. அதாவது பஞ்சபூதங்களின் தன்மைகள், ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின் தன்மைகள் அடங்கி, அந்தக்கரணங்களில் மனம், புத்தி மற்றும் அகங்காரத்தை ஆன்மா ஏற்கும் நிலை கனவு. 

தியானத்திலும்  இவ்வாறே  விழிப்பு நிலையில் கனவு நிகழ்கிறது.

தியானத்தின் தொடர்ச்சியில் நுண்ணுடலில்  மனம், புத்தி செயல்படும் நிலை உறக்க நிலையாகும். மனம் புத்தி செயலற்று நுண்ணுடலில் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. அதுவே சமாதி நிலை.

இன்றைக்கு படுக்கைக்கு சென்றதும் முயற்சி செய்து பாருங்களேன்!

*** *** *** *** ***






Wednesday, December 3, 2025

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர் 


உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும் ஒன்று.

அறிவியலின்  துணை கொண்டு எவ்வளவு அலசினாலும், அடியும், முடியும் காண முடியாத அதிசயம் உயிர்.

தில்லை அம்பலத்தில் நடனமாடும் அந்த பரம்பொருள், ஒவ்வொரு உயிரியின் உடலிலும்  உள்ள உயிருக்கு பற்று கோலாக இருக்கிறான். அண்ட சராசரங்களை ஆட்டுவித்து தானும் ஆடிக்கொண்டிருக்கிறான் இறைவன். 

உடலும் அதற்கு விதிவிலக்கல்ல. கண்ணால் காணும் பரு உடலும், சூக்கும உடலான ஒளி உடலும் இறையோடு இணைந்து ஆடிக்கொண்டிருக்கிறது என்கிறார் திருமூலர். 

திருமந்திரம் - 913

ஒன்றிரண்டு ஆட ஓரொன்றும் உடனாட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும்  ஒத்தாட 
ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே. 

பரு உடலும், ஒளி உடலுமாக உள்ள உடல் ஆடிக்கொண்டிருக்கிறது .

இதுவே, ஒன்றிரண்டு ஆட

அதனுடன் உயிர் சேர்ந்து  மூன்றாக மாறி ஆடுகிறது.. 

ஓரொன்றும் உடனாட ஒன்றினின் மூன்றாட

இந்த மூன்று பரிமாணங்களும் உடலின் ஏழு ஆதார நிலைகளான, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை மற்றும் துரியத்துடன் இணைந்து ஏழும்  ஒத்து ஆடுகிறது.

 ஓரேழும்  ஒத்தாட 

இவை அனைத்தும் ஒன்றி நிற்கும்போது, இதனுடன் ஐம்பொறிகளின் குணமும், நான்கு அகக்கருவிகளான மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என ஒன்பது குணங்களும் பொருந்தி இருக்கும். இந்த ஒன்பது குணங்களும் பாசம் என்னும் இச்சா சக்தியுடன் சேர்ந்தாடும்.

ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட

இவ்வாறு பொருந்தி நிற்கும் உடலையே மன்றமாக கொண்டு  இறைவன் மாணிக்க ஒளிக்கீற்றுகளாக ஒளிவீசி உடலின் உள்ளே  நடனம் புரிவான்.

மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே

சிதம்பர நடராஜரின் திருக்கூத்து நம் ஒவ்வொருவர் உடலிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

*** *** *** *** ***






Friday, October 31, 2025

காணாததை காணலாம்

 காணாததை காணலாம் 



கடவுளைக் காண்பது சாத்தியமா?

கடவுளை யாரும் கண்டிருக்கிறார்களா?

கடவுள் என்பது யார்?

இறைவனா? தெய்வமா? அல்லது கடவுளா?

கோயிலில் இருப்பது இறைவனா? தெய்வமா அல்லது கடவுளா?

இறைவன் கோயிலில் உள்ள சிலையில் மட்டும் இருந்தால், பிரபஞ்சத்தில் உள்ள  மற்ற  பொருட்களில் இறைவன் இல்லை என்றாகிவிடும். எங்கும் எதிலும் இருப்பவன் இறைவன்.

இறைவனே  இயற்கை என்பதால் இறைவனை  கோயிலில் இருந்து எடுத்து விடுவோம்.

இனி கடவுளுக்கு வருவோம்.

ஒவ்வொரு உயிர்வாழ் உடலிலும் இறைவனின் இணைப்பு இருக்கிறது. அதை உயிர்வாழிகள் உணர்வதில்லை. தனக்குள்ளே பரம்பொருள் உறைகிறான் என்று உணர்ந்து, கடும் முயற்சி செய்து, அறிய முற்படும் பொழுது இறைவன் கடவுளாக வெளிப்படுகிறான்.

அடுத்து தெய்வத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

பூவுலகில் தானும் வாழ்வாங்கு வாழ்ந்து, தன்னை சார்ந்தோர்க்கும் பயனளிப்பவனாக இருந்து, தன்னை ஒரு முன்னோடியாக கொண்டு மக்கள் வாழ  வழிகாட்டியாக வாழ்ந்தவர்கள் தெய்வம் ஆகிறார்கள்.

திருக்குறள் - 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

எனவே, நாம் இன்று தெய்வம் என்று வணங்குபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து சென்றவர்கள் என்று கொள்ளலாம். குறிப்பாக, ஆதி யோகியாகிய சிவன், தமிழ்க்கடவுளான முருகன் மற்றும்  திருமூலர் போன்ற சித்தர்களை இந்த வரிசையில் கொண்டு வரலாம். இவர்கள்  அஷ்டமா சித்திகள் என்னும் எட்டு வகை  ஆற்றலை  கைவரப்பெற்றவர்கள். 

அஷ்டமா  சித்திகள் என்பது எட்டு வகை ஆற்றல்கள்:

1. அணுவை விட சிறிய நிலை எடுப்பது 

2. அண்டத்தை விட பேரண்டமாக விரிந்து நிற்பது 

3. காற்றினும் மென்மையாக இருப்பது 

4. மலையினும் பாரமாய் இருப்பது 

5. எண்ணம் போல் நினைத்தவற்றை அடைவது  

6. உலகப்பொருட்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பது  

7. தன்னுயிரை பிறிதோர் உடலில் மாற்றுவது 

8. தெய்வ நிலையில் நிற்பது 

அதாவது, தெய்வ நிலையில் இருக்கும் இவர்கள் கோயிலில் இருந்து மக்களுக்கு அருள் பாலிப்பவர்களாக இருக்கிறார்கள். கருவறையில் உள்ள கல்லிலும் இவர்களால் உறைந்திருக்க முடியும்.

இந்தக் கோட்பாட்டில்தான் நம் முன்னோர்கள் கல்லிலும், பொன்னிலும்  தெய்வ சிலைகளை வடித்து அதனை கருவறைக்குள் வைத்திருக்கிறார்கள். மனிதன் வடித்த சிலைகளில் எல்லாம் தெய்வங்கள் வாழ்கின்றனர்.

சிவன் கோயில் கருவறை சிலையில்  சிவன் இருப்பதும், முருகன் கோயில் கருவறை சிலையில் முருகன் இருப்பதும், சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பின்னர்  கோயில்களில் சித்தர்கள் இருப்பதும்  இவ்வாரென்று கொள்ளலாம்.

கல்லென்று பார்ப்பவர்களுக்கு கல்லாகவும், தெய்வம் என்று பார்ப்பவர்களுக்கு தெய்வமாகவும் இருக்கிறார்கள்.

திருமூலர் இந்த கருத்தை மிகத் தெளிவாக திருமந்திரத்தில் விளக்குகிறார்.

திருமந்திரம் - 2290

மரத்தை மறைத்தது மாமத யானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே. 

மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது, நம் கண்களுக்கு யானை மட்டுமே தெரிகிறது. இந்த யானை, மரத்தால் செய்யப்பட்டது என்று உணர்ந்து யானையைப் பார்க்கும்போது யானை மரமாக தெரிகிறது. அதுபோலவே, இந்த உலகம், இறைவனை மறைத்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பெரும்  பூதங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுது, இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்கிறோமோ அப்பொழுதே பஞ்ச பூதங்கள் மறைந்து இறைவனுக்குள்  ஐக்கியமாகி விடும்.

இனிமேல், கோயிலில் தெய்வத்தை வணங்கும்போது, முழு விழிப்புணர்வு நிலையில் வணங்கினால் நம் முன் இருப்பது கற்சிலையல்ல, சிலை வடிவில் உள்ள நாம் வணங்கும் தெய்வம். 

அங்கே  மனமுருக பிரார்த்திக்கும்போது, ஒலியற்ற நம்  குரல் தெய்வத்திற்கு கேட்டிடும், தெய்வத்தின் கருணை அளவின்றி பொழிந்திடும்.

*** *** ***



Friday, October 17, 2025

நட்சத்திரமடி நீ எனக்கு

நட்சத்திரமடி நீ எனக்கு 




நிச்சயம் மறுபடியும் பிறந்திருப்பேன் - எனினும் 
நானாக பிறப்பது நிச்சயமில்லை - குறிப்பாக  
மனிதனாக பிறப்பதும் நிச்சயமில்லை.

செய்யக் கூடாததை செய்தும் 
செய்ய வேண்டியதை செய்யாமலும் 
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் - மீண்டும் 
மனிதனாக பிறப்பது நிச்சயமில்லை.

இயமநியமம் ஈரங்க யோகநிலை 
இயல்பான  வாழ்வாக  பழகிவிட்டால் 
அறமதுவே பிறவிக்  கடமை - மறுபடியும் 
மனிதனாக பிறப்பதற்கது  கடவுச்சீட்டு.


திருமந்திரம் - 113

விண்ணின்‌ றிழிந்து வினைக்கீடாய்‌ மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத்‌  தலைக்காவல்‌ முன்வைத்து 
உண்ணின்‌. றுருக்கியொ ரோப்பிலா ஆனந்தக்‌ 
கண்ணின்று காட்டிக்‌ களிம்பறுத்‌ தானே.


வானத்திலிருந்து இறங்கி வரும் இறைவன், ஒருவன் முற்பிறவியில்  செய்த நன்மை, தீமைக்கேற்ப உடல் கொடுக்கிறான்.

அந்த உடல் மனித உடலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தனது குளிர்ந்த காலை, உடலுக்கு காவலாக தலையில் வைக்கிறான்.   முற்பிறவியின் நினைவுகளையும், மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்னும் களிம்பை  அகற்றும் இறைவன், ஒப்பற்ற ஆனந்தப் பேரொளியாக கண்களின் இடையே திகழ்கிறான்.

இந்தப்பாடலில் மிகவும் கடினமான  மெய்யியல்  கேள்விக்கு பதில் இருக்கிறது.

கேள்வி: 

முதன் முதலில் மனிதன்  பிறக்கும்போது, வினைப்பயன் அற்ற நிலையில் தானே இருந்திருப்பான். நல்வினை, தீவினை  என இருவினைகளுக்குள் செல்ல வேண்டிய அவசியம் எப்படி அமைந்தது?

பதில்: 

முதல் பிறப்பில் தூய உடலில் இருந்தாலும், மண்ணில் பிறந்தவுடன் மும்மலங்கள் என்னும் ஆணவம், கன்மம், மாயைக்குள் வாழ்க்கையை  துவங்குகிறான். வாழ்வில் இன்பம் ஒன்றையே நாட்டமாக கொள்வதால், நல்லவை, கெட்டவை என்று பகுத்தறியாமல் இருவினைகளின் மாய வலையில் சிக்கிக்கொள்கிறான்.

ஒவ்வொரு முறை மனிதனாக பிறப்பெடுக்கும்போதும், உடல் மற்றும் பின்புலம் அவன் முற்பிறப்பின்  முழு வினைப்பயனாலே  அமைகிறது. அதாவது முந்தைய பிறவியின் மும்மலங்கள்  அழிக்கப்பட்டு புதிதாகவே பிறக்கிறான்.

இதைத்தான் திருமந்திரம், 

வினைக்கீடாய் மெய்கொண்டு.. களிம்பு அறுத்தானே..  என்று விளக்குகிறது.

*** *** ***



Saturday, October 11, 2025

காலதேவனின் கணக்கு

காலதேவனின் கணக்கு 

உடலைப்  பிரிந்த  உயிரின் நிலை என்ன?

மறுபடியும் பிறந்திருக்கும்.

இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உயிரின் நிலை என்ன?

இராப்பகல் அற்ற சுத்தப் பெருவெளியில்  இருக்கும்.

உயிரின் இறுதி ஆதார நிலை என்ன?

முழுமுதற் பொருளான இறைவனுடன்  இணைந்து  இருக்கும்.

இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.

திருமந்திரம் - 1822

கூறுமின் நீர்முன் பிறந்துஇங்கு  இறந்தமை 
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும் 
பாரணியும்  உடல் வீழவிட்டு  ஆருயிர் 
தேரணியும் இது  செப்ப  வல்லீரே. 

ஏற்கனவே நீங்கள் இந்த பூமியில் பிறந்து, இறந்திருக்கிறீர்கள், மீண்டும் பிறந்திருக்கிறீர்கள் இது வேறு.  அதைப்போலவே, பூமியில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலை அடைந்து இறந்தவரின் உடலை விட்டு அதன் மெய்ப்பொருளான உயிர் நீங்கியிருக்கும்.  ஆனால், அவர்  இந்த மண்ணில் பிறக்கும்போது கூட வந்த உடலை, மண்ணிலேயே விட்டுவிட்டு சென்ற உயிர், இறைவனின் தேரில் ஏறி இறையுடன் இணைந்திருக்கும். அந்த உயிர் மீண்டும் மண்ணில்  பிறப்பெடுக்காது.

இதைப்  புரிந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

*** *** *** *** ***





Monday, October 6, 2025

பெருந்துயரம்

பெருந்துயரம் 

 



திருமந்திரம் - 171

ஈட்டியதேன் பூமணம் கண்டு ரதமும் 
கூட்டியே கொணர்ந்து ஒருகொம்பிடை வைத்திடும் 
ஓட்டியே துரத்திட்டு அதுவலியார் கொளக் 
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

இந்தப் பாடலுக்கான சரியான பொருள் நீண்ட காலம்   பிடிபடாமலே இருந்தது. இந்தப் பாடலின், நேரான விளக்கம், மெய்யியல் விளக்கம் மற்றும் அரசியல் விளக்கம் என  மூன்று கோணங்களில் புரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேனீக்கள் மலர்களின் நறுமணத்தைக் கொண்டு, மலர்களிடம் இருந்து  தேனை சேகரிக்கிறது. மரத்தின் கொம்புகளில் உள்ள தனது தேனடையில் சேமித்து வைக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தேனடை தெளிவாக தெரிவதால், தேனெடுக்கும் ஆற்றல்  உள்ளவர்கள்,  தேனீக்களை துரத்திவிட்டு தேனை எடுத்துக்கொள்வார்கள்.

மலர் தன் நறுமணத்தால் காட்டிக்கொடுத்து  தேனை இழந்தது. தேனீ, கண்ணில் படும்படி கட்டிய  தேனடையால் அதன்  பலனை இழந்தது.

இது நேரான புரிதலில்..

மனிதன் சுவையான  உணவினை தேடி தேடி  உண்டு பல வகைகளில் தன் உடலை வளர்த்து  வைத்திருக்கிறான். ஒரு நாள், கால தூதன் உயிரை எடுத்தபின், பொத்தி பொத்தி வளர்த்த உடலால் எந்த நன்மையும்  அவனுக்கு இருப்பதில்லை.

இது மெய்யியல் பார்வையில்..  

ஒருவன் தன் பல வருட உழைப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொள்கிறான். அவர்களின் மூலம் தனக்கான ஒரு அரசியல் பாதையை அமைத்து வெற்றிக்காக பாடுபடுகிறான். அவனுக்கு சேரும் கூட்டம் ஆட்சி செய்பவர்களின்  கோபத்தை தூண்டி விடுகிறது. இதுவே, கரூரில் நடந்த பெருந்துயர நிகழ்விற்கு  காரணமாகிறது. கூடிய கூட்டத்தால் அவனுக்கு எந்த பலனும் இல்லை. 

இது அரசியல் நிகழ்வில்..

*** *** ***

மக்களை காப்பது மன்னனின் கடமை 

மக்களை காப்பதுதான் மன்னனின் கடமை 

மக்களை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை 

மக்களின் உயிரை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை 

மற்றவர் மீது  குற்றம் சுமத்துவது  சுத்த மடமை 


*** *** ***







 

கீழ்மை குணம் TN 2026

கீழ்மை குணம்  TN 2026   திருக்குறள்: 1080 எற்றிற்கு  உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்  விற்றற்கு உரியர் விரைந்து. கீழ்மை குணம்  கொண்ட கயவர்கள் த...