Saturday, November 14, 2020

அதா எனக்கு தெரியுமே

 அதா எனக்கு தெரியுமே  

பஞ்சு பஞ்சாக 
வரணும் பணியாரம் 
வெள்ளி நூலாக 
வரணும் இடியாப்பம் 





கோதுமை அல்வா நன்றாக திரண்டு, நெய் மணத்தோடு நல்ல நிறத்தோடு வந்திருப்பதை பார்த்து  திருப்தி அடைந்த வெங்கடேச ஐயர், இதுவரை கிண்டி வைத்திருந்த அல்வாவை எடுத்து பெரிய தட்டில் ஊற்றினார்.

'டேய் சோமு, செத்தே பாத்துக்கோ. இதோ வந்துர்றேன்' - பன்னிரண்டு வயது பையனிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அல்வா கடையின் முன் பக்கம் சென்றார் ஐயர்.

வெங்கடேச ஐயர் தலை மறைந்ததும் அவசரமாக, சூடாக இருந்த அல்வாவை ஒரு கரண்டியில் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டான், சோமு.

அடுத்த வினாடியே, அவன் அலறிய அலறலில் மொத்த கடை ஊழியர்களும் அங்கு வந்துவிட, அவன் துடி துடித்து இறந்ததை பார்ப்பதை தவிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.

நிச்சயம் சோமு அதை சுவைக்கவில்லை. அது இனிப்பான அல்வா என்று தெரிந்த ஒரே காரணத்தினால் எடுத்து விழுங்கிவிட்டான்.

இதைத்தான் நாம் அனைவரும் தினம்தோறும் செய்து கொண்டிருக்கிறோம். எதையும் சுவைத்து, ரசித்து அனுபவிப்பதில்லை. சாப்பிட்டோம் என்ற திருப்தியில் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதற்கான சன்மானத்தை பல வகைகளில் பெற்று, வாழ்க்கையை  துன்ப மயமாக்கிக்கொள்கிறோம். 

நம் உடல், அன்னமயகோஷம் என்று சொல்லப்படுகிற வண்ணம், உண்ணும் உணவினால் உண்டானது. உணவினாலேயே உடலில் உயிர் தங்கி உள்ளது.

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

புறநானூறு-18

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
                                                                                                     

உயிர் காக்கும் உணவை தினம் தினம் நமக்கு வழங்குபவர்களை நன்றியுடன் வாழ்த்த வேண்டாமா?

நாம் உண்ணும் உணவு, நம் உடலில்  எப்படி செயல்படுகிறது என்று திருமூலர் சொல்வதை பார்ப்போம்.

திருமந்திரம்-1933

அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம் 
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடல் மனமாம் கூறுசேர்ந்திடு 
இருந்தன முன்னாள் இரதம் அதாகுமே.
                                                                                                                  

உடலுடன் சேரும் சக்தி, உணவால் திருப்தியுறும்  மனம்  மற்றும் கழிவு  என நாம் உண்ணும் உணவு மூன்று கூறாக உள்ளது. உடலும், மனமும் சேர்ந்தியங்குவதின் காரணம் நாம் முன்னர் உண்ட உணவின் சக்தியாலேதான்.

கொஞ்சம் சமையல் கலையும் கற்றுக்கொள்வோமே!


நமக்கு ஒரு ஃபில்டர் காபி போட தெரியாமல்,  இன்ஸ்டன்டில் திருப்தி பட்டுக்கொள்கிறோம். ஒரு challenge-ஆக எடுத்துக்கொண்டு முயற்சி செய்தால்.
பூரி என்ன, மைசூர்பாக்கே செய்யலாம்.

*** *** ***


Wednesday, November 11, 2020

வேதியல் வினை

வேதியல் வினை  

உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே 
விண்ணை நான் பார்க்கும்போது 
என்னை நீ பார்க்கின்றாயே 




பார்க்கும்போது என்ன நிகழ்கிறது?

வேதியல் வினை.

கண்களில் ஒளி பட்டவுடன், வேதிவினை தூதுவர்கள் மூலம் மூளைக்கு செய்தி 
செல்கிறது. மற்ற வேலைகளை பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பிகள் நடத்தி காட்டுகிறது.

இங்கே,
புன்னகை புரிந்தால் என்ன பூமுகம் சிவந்தா போகும்..

சிவந்துதான் போகிறது.

நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும், பார்வைதான் சாட்சியாக விளங்குகிறது.

காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் நீரில் குதித்து , வீர விளையாட்டு புரியும் ஒருவன், நீரில் குதித்தவுடன் எப்படியும் கரை ஏறிவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் நீரில் குதிக்கிறான்.

நீரைப்பார்த்து, அதன் வேகத்தை கணித்து, குதிக்க வேண்டிய இடமும், கரை ஏற  வேண்டிய இடமும் மனதுக்குள் தீர்மானித்து வெள்ளத்தில் பாய்கிறான். 

குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

கண் பார்க்க, வேதிவினை செய்தி ஒளி நரம்புகள் வழியாக மூளையை சென்றடைந்து, அங்கிருந்து பெரும் கட்டளைக்கேற்ப செயல்படுகிறான்.

நாளமில்லா சுரப்பியாகிய பினியல் சுரப்பியில் இருந்து சுரக்கும் ஹார்மோன் நம்முடலை அனைத்து வகைகளிலும் சீராக வைத்திருக்கிறது. 

புற உலகினை கண்டு, உடலினை சீராக்கும் இதே பினியல் சுரப்பிதான், சுழுமுனை, அகஉலகின் அடித்தளமாக உள்ளது.

இதனை மூன்றாம் கண் என்று ஆன்மிகம் சொல்லுகிறது. ஞான சித்தி பெற்றவர்கள் உறங்கும் இடமும் இதுவே.

தூங்கிக்  கண்டார் சிவலோகமும் தம்உள்ளே
தூங்கிக்  கண்டார் சிவயோகமும் தம்உள்ளே
தூங்கிக்  கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக்  கண்டார்நிலை சொல்வது எவ்வாறே.
                                                                                              - திருமந்திரம் 129

வாசி யோகம் அறிந்த சித்தர்கள் எப்பொழுதும் தியான உறக்கநிலையில் இருப்பார்கள்.     சிவலோகம், சிவயோகம் மற்றும் சிவபோகம் இவற்றை இவ்வுறக்க நிலையிலும்  சுழு முனையில் உள்ள மூன்றாம் கண்ணால்   கண்டு கொண்டிருப்பார்கள்.





Monday, November 9, 2020

தேவாமிர்தம்


தேவாமிர்தம் 

சாட்சி சொன்ன 
சந்திரனே 
நீ போய் சேதி 
சொல்ல மாட்டாயோ?



உடலின் ஒவ்வொரு அசைவிற்கும், உணர்வுக்கும் 
சாட்சியாக நிற்பது சந்திரன்.

விழித்திருக்கும் நேரமும், உறங்கும் நேரமும் 
உயிர்ப்பித்திருப்பது சந்திரன்.

சந்திரன் என்பது புருவமத்தியில் உள்ள சுழுமுனை, அதாவது பினியல் சுரப்பி.
மனிதனின் அத்தனை அபிலாசைகளின்  பிறப்பிடம். இங்கேதான் ஞானத்தேனும், தேவாமிர்தமாக சுரக்கிறது.

ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர் 
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர் 
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு 
பாடி உள்நின்ற பகைவரைக் கட்டுமே.
                                                                                     - திருமந்திரம் 661

மூலாதாரத்திலிருந்து பிராணனை மூச்சுப்பயிற்சி மூலம் சுழுமுனைக்கு கொண்டுசெல்ல வல்லவர்கள், பேரொளியை கண்டு, நாதத்தை கேட்டு, தேவாமிர்தமான ஞானத்தேனையும் உண்பார்கள். இம்முயற்சிக்கு பகையாக அங்கே உருவாகும்  பற்றினையும் அகற்றி விடுவார்கள்.

ஆக்கினையில்,  சதாசிவத்துடன் நிலவொளியில் உறையும் மனோன்மணித்தாய், அனைத்து உணர்வு நிலைக்கும் ஆதாரமாக நிற்கிறாள்.

உறங்கும் அளவின் மனோன்மணி வந்து 
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் 
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு 
உறங்கல் ஐயாஎன்று உபாயம் செய்தாளே.
                                                                                       - திருமந்திரம் 1107

அட்டாங்க யோகத்தில், சமாதி நிலையில் உறங்காமல் உறங்கி இருக்கும்போது, கை வளையல் ஒலியுடன்,  ஞான அமிர்தத்தை வாயில் ஊறச்செய்து, உறங்கும் நிலையை, உணர்வு நிலையாக மனோன்மணித்தாய்  மாற்றி நின்றாள்.

அட்டாங்க யோகப்பயிற்சியில் தேர்ந்தவர்களின்  சுழுமுனையில் உள்ள பினியல் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் உள்நாக்கு வழியாக தேன் போன்ற சுவையுடன் இறங்கும். இந்நிலை எய்தப்பெற்றவர்கள் அடையும் பேரின்பம்,  இருவர் கூடி அடையும் இன்பத்தை விட பல கோடி மடங்கு அதிகமாகும்.


Thursday, November 5, 2020

பிள்ளையார் பிள்ளை



பிள்ளையார்  பிள்ளை  

மாலையில் காற்றினில் 
உண்டாவது 
அது மஞ்சத்திலே 
மலர்ச்செண்டாவது  



'அரசினை நம்பி புரசினை கை விட்டாளாம்'

அரசனை அல்ல.. அரசினை.. அரச மரத்தை!

புருஷனை அல்ல.. புரசினை..

புரசு என்பதும் அரச மரத்தை போன்ற ஒரு பிள்ளை வரம் தரும் மரமே! 

'அரச மரத்தை சுற்றி வந்து, அடி  வயிற்றை தொட்டு பாத்தாளாம்' 

அரச மரத்தை சுற்றி வந்தால் பிள்ளை வரம்  கிடைக்குமா? 

என்னவொரு முட்டாள்தனம்.. பத்தாம் பசலித்தனம்.. பகுத்தறிவற்ற காட்டுமிராண்டித்தனம்.

பேசாமல் செயற்கை கரு ஊட்டும் மருத்துவரிடம் சென்று, சொத்தை எழுதி வைக்க வேண்டியதுதானே புத்திசாலித்தனம். பிள்ளை வரம் கிடைக்காமலா போகும்.

பதினெண் சித்தர் காலத்தில், இந்த நவீன  மருத்துவ முறை இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இயற்கையை சார்ந்து வாழ சொல்லி விட்டு போய் விட்டார்கள்.

இனி, அரச மரத்தின் சிறப்பை பார்க்கலாம், வாங்க.

காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை தானுண்டு, அதிக அளவு பிராண வாயுவினை வெளிவிடும் தன்மை அரசுவிற்கு உண்டு.

பிராண வாயுவுடன், வியானன் வாயுவும் அதிகளவு இருந்திருக்க வேண்டும். அதுவும், காலை நேரங்களில் அதிகமான அளவு இருக்கும்.

நாம் சுவாசிக்கும் காற்றில் பத்து வகையான வாயுக்களின் தன்மை இருக்கிறது என்று சித்தர்கள் வழி காட்டி சென்றுள்ளார்கள். 

வியானன் வாயு தனஞ்சய வாயுவுடன் சேர்ந்து, பிள்ளைப்பேறு சம்பந்தமாக அனைத்து செயல்களையும் நம் உடலில் செய்கிறது, ஆரம்பம் முதல். அந்த வாயுவின் தன்மை பெற்றோர் உடலிலும் சார்ந்திருக்கும்.


காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன் 
காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன் 
காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை 
காலின்கண் வந்த கலப்பு அறியாரே.

                                                                                      - திருமந்திரம் 1954

காலத்தை வென்றவன், உடலில் விந்துவை விதைத்திருப்பவன். வீணடித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிகின்றான்.  பெண்ணுடன் சேரும் காலங்களில், உடல்களுக்குள் சேரும் காற்றின் கலப்பினை யாரும் அறிவதில்லை. இந்தக் காற்றை, வீங்கற்காற்று என்று சொல்வார்கள். 

தனஞ்சயனும், வியானனும் சமமாக ஒத்து இயங்கினால் இன்பம்.

அரசமரத்துப்  பிள்ளையாரும் பிள்ளை அருளுவார்.






Sunday, November 1, 2020

தூக்கம்

தூக்கம் 

தூக்கம் உன் கண்களை 
தழுவட்டுமே 
அமைதி உன் நெஞ்சில் 
நிலவட்டுமே 


                
                           
            
கண்களிலே.. கண்களிலே.. கண்களிலே..  
தூக்கத்தின் துவக்கம் கண்களிலே..

தூக்கமும் அறிவியலும் 

மூளையில் நிலக்கடலை அளவுள்ள ஹைபோதலமஸ் [hypothalamus] அமைப்புக்குள், கண்களில் இருந்து  வரும் ஒளியை உணரும்   ஆயிரக்கணக்கான சுப்ரக்யஸ்மாட்டிக் நியூக்ளியஸ் [suprachiasmatic  nucleus] உள்ளது. மூளைத்தண்டு, 'தூக்கம்',  'விழிப்பு' நிலைகளை தொடர்ந்து ஹைபோதலமஸ்க்கு  அறிவித்தபடி இருக்கும். 

மூளைத்தண்டில் இருந்து சுரக்கும் பினியல் சுரப்பி [pineal gland] என்னும் மூன்றாம் கண்,தொடர்ந்து சுப்ரக்யஸ்மாட்டிக் நியூக்ளியஷிடம் இருந்து கண்களில் இருந்து வரும் ஒளி செய்திகளை [melatonin] பெற்று 'தூக்கம்', 'விழிப்பு' செயல்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். 

அறிவியல் உடலினை ஆய்வு செய்வதுடன்  நின்று விடுகிறது. 

தூக்கம், விழிப்பு இரண்டின் கிரியா ஊக்கியான உயிரின் தன்மையை  ஆன்மீகத்தில் பார்ப்போம், வாருங்கள். 


தூக்கமும் ஆன்மீகமும் 

காற்றை சுவாசிக்கும் வரையில்தான் உயிர், உடலில் இருப்பதை அறிகிறோம். பொதுவாக மூச்சுக்காற்றை பிராண வாயு என்று சொல்லி நிறுத்திக்கொள்கிறோம்.

ஆனால், நாம் சுவாசிக்கும் காற்றினில்  பத்துவகை வாயுக்கள் உள்ளன.

பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் - 5
கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன் - 5

இந்த பத்து வாயுக்களில், தனஞ்சயன் வாயு மட்டும், மற்ற ஒன்பது வாயுக்களுடன் எப்பொழுதும் தலைமையேற்று இணைந்து செயலாற்றும்.

ஒத்தஇவ் ஒன்பது வாயுவும் ஒத்தன 
ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன் 
ஒத்தஇவ் ஒன்பதில் ஒக்க இருந்திட 
ஒத்தஉடலும் உயிரும் இருந்ததே.
                                                                                      - திருமந்திரம் 653

கண்களுக்கான வாயு கூர்மன். தனஞ்சயன், கூர்மன் வாயுக்களே நம் தூக்கம், மற்றும் விழிப்பின் கிரியா ஊக்கிகள். தனஞ்சயன் மற்ற ஒன்பது வாயுக்களோடு ஒத்திராமல் இருக்குமானால், பலவகை நோய்கள் உடலில் உண்டாகும்.

கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன் 
கண்ணில் இவ்வாணிகள்  காசம் அவனல்லன் 
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால் 
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.
                                                                                         - திருமந்திரம் 655

உன் கண்கள் ஒளி வீசுகிறதென்றால், அதற்கு தனஞ்சயனும், கூர்மனும் இணைந்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று பொருள்.



 


 

Saturday, October 24, 2020

திருவிழா

திருவிழா 

விழியே விழியே 
உனக்கென்ன வேலை 
விருந்துக்கு வரவா 
நாளைக்கு மாலை 



ஆடியவர்கள் - மனங்களை
ஆட்டுவித்தார்கள் - மக்களை  
ஆண்டார்கள் - வரலாறாய் 
ஆகிவிட்டார்கள்.

இது திருவிழாக்காலம். 

ஆடலும், பாடலும் இல்லாமலா?

நவராத்திரி என்றும் தசரா என்றும் பெண் தெய்வங்களை போற்றி வணங்கும் நேரம்.

துரியன் பழம். 

இந்தியாவில் அதிகம் பரிச்சயம் இல்லாத பழம். முதலில் பார்த்த போதும், சுவைத்த போதும் எனக்கு அதன் சுவையும், மணமும் உடன்பாடில்லை.

அதன் மருத்துவ குணங்கள், சுவை மற்றும் மணத்தின் தன்மையை தெரிந்து கொண்ட பின்னர்,  அதன் முட்களும், மணமும் என்னுடன் பயணிக்கவில்லை.

இப்பொழுது என்னால் துரியன் பழத்தை ரசித்து, சுவைத்து உண்ண முடியும்.

தமிழில் உள்ள பாடல்களும் அப்படித்தான். புத்தகத்தில், செய்யுள் பகுதி வந்தாலே வயிற்றை பிசையும். அப்படியே மனப்பாடம் செய்ய வேண்டிய கட்டாயம். பாடல்களில் உள்ள சங்கதி, சொல்லித்தரும் ஆசிரியர்களின் திறனை மீறிய பொருட்கள். மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவு எங்கே சொல்லித்தருவது.

தமிழ் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. அதுவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.

தமிழையும் சரியாக  புரிந்து கொள்ளாமல், மனு ஸ்ம்ருதி என்று வேற்று மொழியில் யாரோ எழுதியதை, யாரோ மொழி பெயர்த்ததை வைத்துக்கொண்டு  இவர்கள் போடும் ஆட்டமும், பெண் தெய்வங்களை கொண்டாடும் திருவிழா நாட்களில் தேவைதானா?

கண்கள் காணும் காட்சிகளில், மாயையை போக்கும் குருவினை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாயையை  போக்க முடியாதவர்களை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள், அவர்கள் காட்டும் மாயையில், அவர்களுடனே  விழுந்து மறைந்து போகவேண்டியதுதான்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் 
குருட்டினை  நீக்காக் குருவினைக் கொள்வர் 
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்  
குருடும் குருடும் குழி விழுமாறே.

                                                                                                           - திருமந்திரம் 1680

இப்பேற்பட்ட குருவின்  கருத்துக்களை எடுத்துக்கோளாக  காட்டுவதனால், தனக்கு இயல்பாக இருக்கும் அறிவு நிலையும் போய்விடும்.  அரசியலுக்கு உன் நுண்ணறிவுதான்  மூலதனம், அது  அதிகம் செலவாகிவிடும், தேவையற்ற மிடுக்கான வாய் சவடால் பேச்சுக்களால்.

மூலதனம் அதிகம் செலவானால் என்னாகும் தெரியுமா?

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.           

                                                                                                                                                   - நல்வழி 25

ஒளவைப்பாட்டியின் பேச்சுக்கு மறு  பேச்சுண்டோ?

  

 











Friday, October 23, 2020

பூ விலை

பூ விலை   

சின்ன குடை போல் விரியும் இமையும் 
விழியும் பார்த்தால் ஆசை விளையும்  




'இந்து சனாதன தர்மத்தில் பெண்கள் அனைவருமே பூ விலை மகளிர் '

எழுதவே கூசும் வார்த்தைகளை, எப்படி இவர்களால் மேடைகளில் பேசி கைதட்டல் வாங்க முடிகிறது? - இப்படி ஒரு கூட்டம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது, தன்னைப் பெற்றவளும் பெண் என்பதை மறந்து.

எங்கோ பேசியதை, எதிர்க்கூட்டம் கட்டம் கட்டி எடுத்து தூபம் போட்டு மக்களிடையே பரப்புரை செய்து வன்மத்தை தூண்டுகிறது.

23-10-2020 இன்றைய சூடான தமிழக நிகழ்வு இது.

இரண்டு கூட்டமுமே ஒன்றை மறந்துவிட்டு இதனை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறது.

பரமஹம்சர் சிவானந்த ஸ்வாமிகளின் சித்த வேதம் என்ற புத்தகத்தில் சொல்வார்கள், 'ஒருவன் வடை, பாயசத்தோடு உண்ட இலையை வைத்து மற்றவர் அதன் சுவையை சொல்வது போல்தான்' நாம் படிக்கும் ஆன்மீக புத்தகங்கள்.

சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டு  உள்ளதாலேயே, அந்த கருத்துகள், நிகழ் காலத்திற்கு ஏற்றதாகவும், தகுதி அற்றதாகவும் ஆகி விடாது.

உணவில் கல் இருந்தால் விலக்கி விட்டு உண்பது போல, நாம் நல்லதை மட்டும் நம் சிந்தனைக்கேற்ப  எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். 

பெண்மை என்பது மாபெரும் சக்தி. 

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் உறையும் சக்தியே, நம் உடலில் ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும் உறைகின்றது. அந்த சக்தியை உணர்ந்து, உய்யும் வழியை மானிடம் அடையும் வழித்துணை அவர்கள் என்று  திருமூலர் போன்ற தீர்க்கதரிசிகள் காட்டி சென்றுள்ளார்கள்.

உலகத்து உயிர்களை எல்லாம் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த ஆதி பராசக்தி உமையவள் என்னுள்ளும் கோவில் கொண்டுள்ளாள். பஞ்ச பூதங்களான நிலம், 
நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் உறையும் அதே சக்தி என்னுள்ளும் என் கண்களுக்குள்ளும்  குடிகொண்டிருக்கிறாள்.

தன்னுளு மாகித் தரணி  முழுதுங்கோண்(டு)
என்னுளு மாகி இடம்பெற நின்றவள் 
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வான்உளும்
கண்ணுளும் மெய்யுளுங் காணலும் ஆமே. 

                                                                                               - திருமந்திரம் 1354

கண்ணுக்குள்ளே வா வா.. நெஞ்சுக்குள்ளே போ போ..  என் ஜீவனே!



ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...