உன்னையும் உன்னையும் என் ரெண்டு குழந்தை போலவே எப்போதும் எப்போதும் நான் பத்துப்பேனே!
'சூரிய தேவா, நான் சிறு பெண். ஆர்வத்தால் மந்திரத்தை பிரயோகித்துப் பார்த்தேன். உங்களுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் இல்லை. இது முறையும் அல்ல.' - இளம் பெண்ணான குந்தி தன்னை அடைய தன் முன்னர் நிற்கும் சூரிய பகவானை கையெடுத்து கும்பிட்டுக் கதறினாள்.
துர்வாச முனிவருக்கு மனம் மகிழும்படி செய்த பணிவிடைகளினால் 'குழந்தை பெரும் மந்திரத்தை' வரமாக பெற்றாள் குந்தி. கிடைத்த வரத்தை விளையாட்டாக சூரியனைப் பார்த்து பிரயோகிக்க குழந்தை வரம் கொடுக்க நேரில் வந்து நின்று குந்தியை ஆகர்ஷிக்கப் பார்க்கிறான்.
'குந்தி தேவியே, என்னை மந்திரத்தால் அழைத்திருக்கிறாய். கண்டிப்பாக மந்திரத்தின் பலனாக உனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தாக வேண்டும். ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியும். மீண்டும் உன்னை கன்னிப்பெண்ணாக மாற்றி விட முடியும்.' - இப்படியாக பலதும் கூறி குந்தியை சேர்கிறான் சூரியன்.
பலன், பராக்கிரமசாலியான கர்ணன் பிறக்கிறான்.
குந்தி மீண்டும் கன்னியாகிறாள்.
பகுத்தறிவிற்கு ஒவ்வாத காரியம் இது. குழந்தை பெற்ற பெண் மீண்டும் கன்னித்தன்மை பெறுவது சாத்தியமா?
பெண்ணின் கருமுட்டையை வெளியே எடுத்து, கருத்தரித்தல் செய்து மீண்டும் பெண்ணின் வயிற்றில் வளர செய்யும் கலையை இன்றைய அறிவியல் உலகம் செய்து காட்டி விட்டது.
கருத்தரித்து உயிர் உண்டான நிலையில் மற்றோர் பெண்ணின் வயிற்றில் கருவை வைத்து, வளர்த்து குழந்தை பெற்று கொள்வது இன்றைய மருத்துவ உலகில் பிரசித்தமாக உள்ளது.
குழந்தை பெற்றும் தாயின் கன்னித்தன்மைக்கு எந்த பங்கமும் நேரவில்லை.
இது நடைமுறைக்கு சாத்தியமே என்று பின்னர் வரும் சந்ததியினர் அறிந்துகொள்ள குந்தியின் கதை எழுதப்பட்டதோ?
கருத்தரித்த மாத்திரத்தில், கருவில் சேர்ந்த உயிரின் வாழும் நாள், சாகும் நாள், அனுபவிக்கும் உலக இன்ப துன்பம் எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இவ்வாறாக உருப்பெறும் கருவானது, உருவான பெண்ணை நீங்கி வேறிடத்தில் வளர்ந்தாலும், உரிய நேரத்தில் அதாவது பத்தாவது மாதத்தில் குழந்தையாக பிறக்கும்.
பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்ந்துஉற்று இருதிங்கள் சேராது அகலினும் மூப்புற்றே பின் நாளில் ஆமெல்லாம் உள்ளவே. - திருமந்திரம் 1945
வெளியே பைக் புறப்படும் சப்தம் தெளிவில்லாமல் கேட்டது. கூடவே குரைத்த நாயின் குரல் அது பைக்தான் என்று தெளிவாக்கியது. எனக்கு கேட்கும் திறன் குறைந்துகொண்டே வருகிறது.
மகனும், மருமகளும் வேலைக்கு கிளம்பிவிட்டார்கள். குழந்தையை அப்படியே பள்ளியில் விட்டு விட்டு செல்லும் அவர்கள் மீண்டும் மாலைதான் வருவார்கள்.
சுவர்க்கடிகாரத்தைப்பார்த்தேன். 12-ல் சின்ன முள்ளா, பெரிய முள்ளா என்று சரியாக தெரியவில்லை. ஆனால், நிச்சயம் காலை மணி எட்டரையை தாண்டி இருக்கும். பார்வையும் மங்கலாகத்தான் இருக்கிறது.
இரவெல்லாம் சரியான தூக்கம் இருக்காது. அரண்டு, உருண்டு படுத்தாலும் கொஞ்சம் கோழித்தூக்கம் மட்டும் தினமும். அதுவும் கொச்சினிலிருந்து வரும் பிளைட் சரியா நாலு மணிக்கு எழுப்பி விட்டுரும். அவர்கள் வெளியே செல்லும் பைக் சப்தம் கேட்கும் வரைக்கும் பேசாமல் படுத்து கிடப்பேன். பகலில் தூக்கம் என்பதை சுத்தமாக விட்டு விட்டேன்.
பகலில் தூங்கினால் இரவில் வரும் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போச்சு. இன்னொரு பிரச்னையும் கூட. பகலில் தூங்கி எந்திரிச்சவுடன் மறுபடியும் காலையில் செய்யும் வேலைகளை செய்றேனாம். மறதியும் கூடிருச்சு போல.
வீட்டை விட்டு கிளம்பும்போது கிச்சன் கதவை பூட்டிட்டு போறாங்க. கொஞ்சூண்டு சுடுதண்ணி வேணும்னாலும் பிளாஸ்க் தண்ணிதான். ஒரே ஒரு முறை சுடுதண்ணி போட்டுட்டு காஸ் மூடாம விட்டுட்டேன். அன்னிக்கு இருந்து கிச்சன் என்ட்ரி நாட் அல்லொவ்ட். எனக்கு வாசம் வந்திருந்தா மூடாம விட்டிருப்பேனா? மூக்கும் போச்சு.
இதெல்லாம் போக, உடல் உபாதைகள், வேளா வேளைக்கு மருந்துகள். இதில் முக்கியமா ஒண்ணு தெரியுது. மனசு மட்டும் மாறாம இருக்குது, அதே பழைய துடிப்பும், கனவுகளுமாக.
என்னாலும் பைக் ஓட்டமுடியும்னு மனசு சொல்லுது. ஆனா, ஒரு காலில் நின்னு, இன்னொரு காலை தூக்கி பைக்ல உக்கார ஒடம்பு ஒத்துழைக்குமான்னு தெரியாது.
எதனால் இந்த மாற்றங்கள்?
உடலுக்கு தேவையான உணவில் மாற்றமில்லை. பின்னர் எதனால் புலன்களின் திறன் குறைந்து கொண்டே போகிறது, வயது ஏற ஏற.
இதைத்தான் நம் முன்னோர்கள் யோசித்தார்கள். உணவைத்தவிர்த்து, பஞ்ச பூதங்கள் ஆளும் இவ்வுடலை ஆரோக்கியமாக வைக்க என்ன தேவை என்று ஆராய்ந்தார்கள்.
இந்த உடலுக்குள் சந்தம் மாறாமல் சென்று வரும் காற்றை கவனித்தார்கள். காற்றின் தன்மையை பிரித்தும், வகுத்தும் பார்த்தார்கள்.
உடலில் கலந்த உயிர், காற்றினால் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். எவ்வளவுக்கெவ்வளவு காற்றும், உயிரும் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உடலில் உயிர் தங்கும் காலம் என்றறிந்தார்கள்.
காற்றுதான் உயிரை கட்டி வைத்திருக்கிறது என்னும் உண்மையை சொன்னார்கள்.
கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிரது காலின் நெருக்கம் கலந்த உயிரது காலது கட்டில் கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
- திருமந்திரம் 592
[கால் - காற்று ]
அடுத்து, மூச்சாக உட்செல்லும் காற்றினை ஆய்வு செய்தார்கள். அதனை பத்து வகையாக உள்ளது என்று பகுத்தறிந்தார்கள். தச வாயுக்கள் என்று பெயரிட்டு, பின்னர் அதனையும் இரு வர்க்கமாக பிரித்தார்கள். வெப்பத்தின் தன்மையாக ஐந்து வாயுக்களை ஒரு கூறாகவும், வாய்வின் தன்மையாக மற்றொரு ஐந்து வாயுக்களை மற்றொரு கூறாகவும் வைத்து ஆய்வினை மேற்கொண்டார்கள்.
தச வாயுக்களின் முக்கிய பணிகளாக, ஐம்புலன்களின் உணர்வு நிலையாக, சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்றறிந்தார்கள். கொட்டாவி, தும்மல், விழித்தல், இமைத்தல், கழிவுகளை வெளியேற்றும் உணர்வு/தன்மை, விந்து பாய்ச்சுதல் போன்ற செயல்களையும் இவைகளே காரணிகளாக உள்ளன என்பதையும் கண்டார்கள்.
வயது ஏற ஏற, சுவாசித்தலில் ஏற்படும் மாற்றம், தச வாயுக்கள் சீரற்ற அளவில் உடலில் இயங்குவதனால். பல்வேறு உபாதைகள் உண்டாக ஏதுவாகிறது.
அடுத்து உடலுக்குள் சுவாசக்காற்று செல்லும் பாதையை கவனித்தார்கள். சுவாசிக்கும் காற்று உடலுக்குள் பயணித்தலையும் அதன் பணிகளையும் பார்த்தார்கள்.
சுவாசத்தில் இடது சுவாச பாதையை இடகலை அல்லது சந்திரகலை என்றும், வலது சுவாச பாதையை பிங்கலை அல்லது சூரியகலை என்று பெயரிட்டார்கள். சுவாசிக்கும் காற்றை தச வாயுக்களாக பிரித்து, அதன் பணிகளின் தேவைக்கேற்ப அதனதன் நிலைகளில் நிலைநிறுத்தும் என்பதையும் கண்டறிந்தார்கள்.
மேலும் சுவாசிக்கும் காற்றின் பாதையினை ஆராய்ந்தபோது, சில நேரங்களில் இடது நாசியிலும், சில நேரங்களில் வலது நாசியிலும் காற்றின் வேகம் மாறுபடுவதை கண்டார்கள்.
வெள்ளி, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இடது நாசியில் அதிக காற்றோட்டமும், சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வலது நாசியில் அதிக காற்றோட்டமும் இருக்க வேண்டும். வியாழனன்று மட்டும், வளர் பிறை நாட்களில் இடது புறமும், தேய் பிறை நாட்களில் வலது புறமும் காற்று ஏற்றத்துடன் இருக்க வேண்டும்.
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம் தெள்ளிய தேய்பிறை தான்வலம் ஆமே. - திருமந்திரம் 790
உடல் நல்ல ஆரோக்கியத்துடன், உயிரோடு கலந்து ஒன்றி இருப்பதை மேற்கூறிய சுவாச நிலைகளில் இருந்து அறியலாம். உயிர் வாழும் காலத்தையும் கணக்கிடலாம்.
நாமும் இந்த எளிய சோதனையை செய்து பார்த்து, நம் சுவாச நிலையை காற்றுப்பயிற்சி மூலம் சரி செய்து கொள்ளலாம்.
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா
'கோயில்ல என்ன இருக்கு. அசிங்க அசிங்கமா பொம்மை சிலைகள் இருக்கு' - சமீபத்தில் ஒரு அரசியல் வியாதியின் அரிய கண்டுபிடிப்பு.
ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ளது பாப்பான்குளம் என்னும் சிற்றூர். சமீபத்தில் அங்குள்ள திருவெண்காடர் சிவாலயத்துக்கு சென்றிருந்தோம். மிகவும் பழமையான கோயில் அது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்தூண்களால் கோயில் நிறுவப்பட்டிருந்தது.
கோயிலின் சிறப்பு மாலை நேர பூஜை. விளக்குகள் அணைக்கப்பட்டு, வாத்திய இசையில் மூலவரின் தோற்றம் அற்புதமாக இருக்கும். சந்திரகாந்தக்கல்லால் ஆன சிவலிங்கம், கருவறை அருகில் இருந்து பார்த்தால் சிறியதாகவும், கொடிமரம் அருகில் இருந்து பார்த்தால் பெரியதாகவும் தெரியும்.
நாங்கள் செல்வதற்கு சற்று தாமதம் ஆகி விட்டதால், தரிசனம் மட்டும் செய்துவிட்டு, தூண்களில் அழகாக செதுக்கப்பட்டிருந்த சிலைகளை பார்க்க ஆரம்பித்தோம். அதில், ஒரு சிற்பம் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஆம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இன்று சிறுவர்கள் கால்களால் உந்தி ஓட்டி மகிழும், ஸ்கூட்டியில் ஒருவர்.
இது எப்படி சாத்தியம்?
ஒன்று அவர்களுக்கு காலப்பயணம் சாத்தியப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் அவை பயனில் இருந்திருக்க வேண்டும்.
இதே மாதிரியான பிரமிப்பு தரும் சிற்பங்கள் நம் பழங்கால கோயில்களில் நிறைய காணக்கிடைக்கிறது.
கரு உருவாவதிலிருந்து, அதன் வளர் நிலைகள் சிற்பங்களாக. இன்றைக்கு நாம் ஸ்கேன் செய்து பார்க்கும் அதே சிற்பம் கற்றூண்களில். கூடவே சில இடங்களில் குடங்கள்.
சிசுவின் வளர்ச்சிக்கும் குடத்திற்கும் என்ன தொடர்பு?
சோதனைக்குழாய் சிசு?
நான் சொல்லப்போவது கும்பமுனி பற்றி. குடத்தின் வாயிலாக பிறந்ததால் கும்பமுனி என்று அழைக்கப்படும் அகஸ்தியர் பற்றி.
வருண பகவானும், மித்ர பகவானும் யாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அப்சரஸ் ஊர்வசி அங்கே வருகிறாள். அவளது அழகில் மயங்கி தன்வசம் இழந்தவர்களின் விந்து வெளிப்படுகிறது.
மேலோட்டமாக பார்த்து, மிகவும் ஆபாசம் என்று ஒதுங்காமல் இதில் உள்ள அறிவியலைப்பார்ப்போம்.
ஊர்வசி வந்ததால், அதாவது பெண் வந்ததால், வருணன் என்னும் ஆணின் உயிரணு வெளிப்பட்டு பெண் உயிரணுவிடம் கலக்கிறது. அங்கே புதிய ஜீவன் உருவாகிறது.
அது ஒரு குடத்தில் சேமிக்கப்பட்டு குழந்தையாக வளர்கிறது. இந்த கும்பத்தில் பிறந்ததாலே, அகஸ்திய முனிவருக்கு கும்ப முனி என்ற பெயர் வழங்கப்படுகிறது.
நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு. புராண காலத்திற்கு முன்னரே சோதனைக்குழாய் மூலம் சிசுவை உருவாக்கும் அறிவியல் முறையை நம் மனித குலம் அறிந்திருந்தது என்பதுதான். இந்த கலையை நாங்கள் அறிந்திருந்தோம் என்று பறை சாற்றுவதே இந்த கற்சிற்பங்கள்.
எனவே, இது காலப்பயணத்தில் சேர்த்தி அல்ல. அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த அறிவியல் கலை என்றாகிறது.
இதெல்லாம் புராண கால புரட்டுக்கதைகள் என்று தள்ளிவிட்டு போக விடாமல் நம் பகுத்தறிவிற்கு சவால் விடும் சமாச்சாரம் இது.
கற்சிற்பங்களே ஆவணங்கள். மறைக்கப்பட்ட ஆன்மீகம் என்று கூறிவிட முடியாது.
இந்த அறிவியலை அவர்கள் முறையாக கற்க, கற்பிக்க, செயல் முறைப்படுத்த அதற்கான புத்தகங்கள், உபகரணங்கள் வைத்திருந்திருப்பார்கள்தானே?
அவைகள் எங்கே?
அறிவு சார்ந்து தேட ஆரம்பித்தால், ஒரு வேளை அவைகள் நம் கண்ணுக்கு புலப்படலாம். புத்தகங்களாகவோ அல்லது வேறு வடிவிலோ. ஒருவேளை அழிந்து போயிருந்தாலும் போயிருக்கலாம்.
ஆனால், உண்மை நிலையை பறை சாற்றிக்கொண்டிருக்கிறது இக்கற்சிற்பங்கள்.
கும்பமுனி, முதல் நிலை சித்தரான முருகனின் அடுத்த நிலை சித்தர் என்றும் அறியப்படுகிறார். போகரின் குருவாகவும் விளங்கியவர்.
போகரின் பூர்வீகம் சீனா என்றும் அவரது பெற்றோர்கள் சலவைத்தொழில் செய்பவர்களென்றும் அகஸ்தியர் தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றைக்கு 2022 என்பது நம் காலக்கணக்கு. இக்காலக்கணக்கு ஆரம்பிக்கும் முன்னர், சுமார் நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக அறியப்படுபவர் போகர் சித்தர், 300 - 450 BC.
அதனால், திருமூலர் வாழ்ந்த காலம் 12-ம் நூற்றாண்டு. திருமந்திரத்தில் போகரைப் பற்றி குறிப்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால், போகர் தன்னுடைய போகர் - 7000 பாடல் தொகுப்பில் எவ்வாறு திருமூலரை பாட்டனாராக அழைக்கிறார்? திருமூலருக்கு சுமார் 15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தவராக அறியப்படுபவர் போகர்.
திரயமாங் காண்டத்தைச் செப்பு தற்கு
சித்தமனோன் மணித்தாயார் பாதம் போற்றி
நிரயமாம் சிவனுடைய பாதம் போற்றி
நித்தியராம் குருநந்தி பாதம் போற்றி
முரயமாம் பாட்டதிரு மூல நாதர்
முத்தியாம் பாதமெந்தன் சிரமேல் வைத்து
கரயமாங் காலாங்கி பாதம் போற்றி
கடாச்சித்த சனகாதி பாதங்காப் பாமே.
- போகர் 7000 [மூன்றாம் ஆயிரம் -1]
சித்தர்களுக்கு காலப்பயணம் இல்லையோ? முக்காலமும் அவர்களுக்கு ஒன்றுதானோ?
இத்தோடு விட்டால் நம் முயற்சி எல்லாம் பலனற்றதாகிவிடும்.
காலக்கணக்கு இல்லையென்றால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இன்றும் இருப்பார்கள் தானே?
பார்க்க ஆவலாக சென்றேன்.
திருமூலர் திருவாவடுதுறையில் அமர்ந்து 3000 திருமந்திரப் பாடல்களை எழுதினார் என்று படித்திருக்கிறேன். அத்திருத்தலத்தைக்காண [20-08-2022 சனி] சென்றிருந்தேன். கும்பகோணத்திலிருந்து சுமார் 21 கி.மி. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
கோயில் முதல் நிலை தாண்டியவுடன் இடது பக்கம் திருவள்ளுவரின் மேடை. திருமந்திரம் படிக்கும்போது எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் வரும். திருவள்ளுவரும், திருமூலரும் ஒருவரோ என்று.
திருமந்திரத்தின் சாரம் அப்படியே திருக்குறளில் பதிந்திருக்கிறது.
யோசித்துக்கொண்டே திருமூலரின் சந்நிதிக்கு சென்றேன். கோமுத்தீசுவரசுவாமி கோயிலின் பின்புறம், அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது திருமூலர் ஆலயம்.
கண்களை மூடி கைகளை கூப்பி, ஏதும் வேண்டாமல் தொழுது நிற்கும்போது, நான் சற்றும் எதிர்பாராத, ஓம் எனும் பிரணவ ஒலி என் உள்ளுக்குள்ளிருந்து, மிகவும் தெளிவாக கேட்டது. மனப்பிரம்மையோ என்று திடுக்கிட்டு கண் திறந்தேன். திறந்த மாத்திரத்தில் ஒலி மறைந்தது.
என்னுடன் வந்தவர்களிடம் கேட்டேன் அவர்களுக்கும் அந்த ஒலி கேட்டதா என்று.
கோவையிலிருந்து கரூர் செல்லும் வழியில் பெரிய பெரிய போஸ்டர்கள். போஸ்டர்களில் கடவுளின் படத்திற்கு மாறாக, தானே கடவுளாக அவதரித்துக்கொண்டிருந்தார் விழாவை முன்னின்று நடத்தும் சாமியார்.
ஆண்களும், பெண்களும் செவ்வாடை உடுத்தி திரள் திரளாக குடமுழுக்கு விழாவிற்கு வந்து கொண்டிருந்தார்கள்.
'ஐயா, நீங்கள் கடவுளின் அவதாரம் என்றால், ஒருமுறையாவது கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா?'
அவர்களில் ஒருவருக்காவது சாமியாரிடம் இந்த கேள்வியை கேட்கும் திராணி இருக்குமா என்பது சந்தேகமே!
'பார்த்திருந்தால், நாங்களும் பார்க்க ஏதுவான வழி சொல்லுங்கள். அவ்வாறு முடியாதென்றால், நீங்கள் சொல்வதை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?'
இந்த மண்ணில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒரே குலம். அவர்களுக்கு எல்லாம் ஒரே தெய்வம்.
சிலர் சிவன் என்பார்கள். சிலர் இயேசு என்பார்கள். அவரவர்க்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொன்னாலும், இறைவன் ஒருவனே! பெருந்தெய்வமானாலும், குறுந்தெய்வமானாலும், குலதெய்வமானாலும் மனித குலம் கொடுக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் பெயருக்கும் உரியவன் ஒருவனே.
ஒன்றே குலம், ஒருவனே தேவன். அவனை சிந்தித்திருங்கள், மரண பயம் நீங்கிவிடும். வெட்கப்படாதீர்கள். வேறு வழி இல்லை. உங்கள் அறிவினை அவனை உணர்வதில் செலவிடுங்கள். வாழ்வின் பொருளுணர்ந்து உய்யும் வழி இது ஒன்றே ஆகும்.
'ஆனா, இன்னைக்கும் உங்க மாநிலத்துக்காரங்க, தமிழ்நாட்டுக்கு, விசா இல்லாம, சிங்கப்பூர் போற மாதிரி நெனச்சு, வந்து வேல செஞ்சு நல்லா சம்பாரிச்சு வளமா இருக்காங்க. அவங்களும் இலவசத்தை வாங்கிக்கிறாங்க.'
'உங்களால பொருளாதார முன்னேற்றத்துக்கு எதுவும் பண்ண முடியல. வக்கணையா வந்து நாங்க பண்றத கிண்டல் பண்ண மட்டும் தெரியுது.'
'நாங்க எதுக்கு நீங்க சொல்றத கேக்கணும்?' - தமிழக நிதி மந்திரி வடநாட்டு டி வி நேரடி வாக்குவாதத்தில் கேட்டதின் சாராம்சம்தான் இது.
கடல் நீரில் உப்பிருக்கு. மக்களால் உப்பை கடலில் இருந்து எடுத்து உபயோகிக்க முடியாது. அரசு, கதிரவனைப்போல் கடல் நீரை வற்ற செய்து உப்பாக்கி அதனை இலவசமாக தருகிறது. அதுவே, மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் முதலீடாகவும் அமைகிறது. பொருளாதாரம் வளம் பெறுவதால் மீண்டும், மீண்டும் பொருளாதார மறு சுழற்சி நடை பெறுகிறது.
கடல் நீர் உப்பாவதும், உப்பு கடல் நீரில் கரைந்து போவதுமாக, பொருளாதாரம் இலவசமாவதும், இலவசம் பொருளாதாரமாவதுமாக இயற்கையின் சுழற்சி மக்களின் வாழ்வை மேம்படுத்தும்.
மனம் தளர்ந்திருந்தான் கோவலன். கைகளில் கண்ணகியின் காற்சிலம்பு.
மதுரையின் வீதிகளில் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான். அவனை அறியாமலே வந்து நின்ற இடம் பூவிலை சூட்டிய மகளிர் தெரு. மாலை வேளைகளில் ஆடலும், பாடலுமாக சொர்க பூமியாக திகழும் கணிகையர் வீதி.
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட, மனித உணர்வுகளை மதித்து நடக்கும் ஒரு பண்புமிக்க சமுதாய நாகரிகத்தின் ஒரு பகுதியே இவ்விடம். அவர்களும் இல்லற வாழ்வில் உள்ளவர்களுக்கு எந்த மாறுபாடும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
தொடர்ந்த சமுதாய மாற்றங்களில் ஒன்றாக, இறைவனுக்கு தொண்டு செய்யும் பெண்களாக, இறைவனையே மணந்து, ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கியவர்களும் சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே வாழ்ந்திருந்தார்கள்.
காலப்போக்கில் இவை எல்லாம் கலைந்து, உயர்ந்த நாகரிகமாக கருதப்பட்ட வழக்கு முழுமையாக ஒழிந்து போனது.
ஆனால், அதுவே இன்று சமுதாயத்தின் சாபக்கேடாக மாறி, மனம் திரிபுற்ற நிலையில், பல்வேறு பாலியல் குற்றங்கள் நடக்க காரணமாகி நிற்கிறது.
உடல் தன் தேவையை அடையாமல் இருக்க முடியாது. இது இரு பாலார்க்கும் பொருந்தும் இயற்கை விதி. பெரும்பாலாக பெண்கள் இதனை ஒரு சேவையாக செய்யாவிட்டாலும், தங்கள் வாழ்வின் பொருளாதார தேவைக்காக செய்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் இதனை சட்டப்படியான தொழில்களில் ஒன்றாக ஏற்று, அதற்கான பதிவுகள், லைசென்ஸ், ஆரோக்கிய நடைமுறைகள் என்று முறைப்படுத்தி இருக்கிறார்கள்.
நாமோ, நம்முடைய கலாச்சாரத்தையும் கை விட்டு, மேற்கத்திய கலாச்சாரத்தையும் ஏற்க முடியாமல் திரிசங்கு சொர்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளோம்.
'பாலியல் தொழில் செய்வது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதனை சட்டப்படி குற்றமாக கொள்ளக்கூடாது'. - சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்களை விடுவித்து இந்திய நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு, ஒரு சமுதாய மறுமலர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
மனித சமுதாயம் கூட்டமாக வாழ ஆரம்பித்த போது, டிமாண்ட்/சப்ளை நடுநிலை இல்லாதபோது துவங்கப்பட்ட ஆதி தொழில் இது. கணவனை இழந்த நிறைய அபலைப்பெண்களுக்கு, இத்தொழிலே குழந்தைகளை, வயதானவர்களை காக்கும் வழிமுறையும் ஆகிப்போனது.
கடந்த மே மாதம் 26-ம் தேதி உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், 'பாலியல் தொழில் சட்டப்படி செய்யும் தொழில், எனவே பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இணங்கி இத்தொழிலை செய்யும் நபர்கள் குற்றவாளிகள் அல்ல.' - என்று கூறி இருக்கிறது.
இந்த தீர்ப்பை தனிப்பட்ட நீதியரசரோ அல்லது ஒரு குழுவோ வழங்கி இருக்கலாம். இந்த ஒரு தீர்ப்பு, லட்சக்கணக்கான மக்களுக்கு நன்மை வழங்கக்கூடிய, அவர்கள் 'தவறு செய்கிறோம்' என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து விலக்கக்கூடிய உன்னதமான தீர்ப்பு.
'அக்னிபாத் இளைய சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். கொள்கையற்ற எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் மக்களிடம் செல்லாது.' - கட்சி மாநாட்டு மேடையில், அக்னிபாத் எதிர்ப்பாளர்களை தலைவர் விளாசிக்கொண்டிருந்தார்.
'அக்னிபாத்னா என்னங்க?' - தலைவர் யாரோ பொய் பரப்புறதா சொல்றார்.
'எனக்கும் சரியா தெரியல. அவர் கர்நாடகாகாரர் தானே? பிசிபேளாபாத் மாதிரி ஏதாவது இருக்கும். எப்படியும் சாப்பிடும்போது பாத்துக்கலாம்.'
'அப்ப.. சாப்பாடு ஐட்டத்துல ஒரு கை பாத்துரவேண்டியதுதான். சீக்கிரம் போயிருவோம். இல்லன்னா போன மாநாடு மாதிரி கெடைக்காம போயிரும்.'
'சை.. மிலிட்டரிக்கு ஆள் எடுக்கிறது, அக்னிபாத். அது சாப்பாடு இல்ல' - கொஞ்சம் விவரம் தெரிந்தவர் சொன்னார்.
'இளைஞர்களுக்கு கிடைக்கவிருக்கும் ஒரு அற்புத வேலை வாய்ப்பு இந்த மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும் அக்னிபாத் முறை. நான்கே வருடத்தில் லட்சக்கணக்கான பணத்துடன் ஓய்வு பெற்று விடுவார்கள். பதினேழரை வயதிலிருந்து இருபத்து மூன்று வயது வரை வயது வரம்பு.' - தலைவர் திட்டத்தை விவரித்துக்கொண்டிருந்தார்.
'ஓய்.. ஓம் பையன் இந்த வருஷம் பிளஸ் டூ முடிக்கிறான்தானே. தலைவர்கிட்ட சொல்லி சேத்து விட்டுரு.'
'கெடைக்கும்னா, அங்கேயே வச்சுக்க மாட்டாங்களா? இருபத்தஞ்சு சதவீதம் மட்டும் வச்சுகிட்டு மத்ததை கழிசடைனு அவங்களே கழிக்கும்போது, இங்கே யார் வேலை குடுப்பாங்க?'
'என்னமோ போங்க. தலைவர் பேச்ச கேப்போம்.'
இந்த தலைவனும், தலைவன் என்ற குறிகட்டி, மேயும் வறள் பசுதான்..
கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!
*** *** ***
விருந்துக்கு வந்த ஒருவர் தவறாமல், தற்செயலாக வருவதுபோல், விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு வந்து சென்றனர். பார்த்த சில பெண்களின் மார்பகங்கள் விம்மி இறங்கியதைப்பார்க்கும்போது, பொறாமையின் உச்சிக்கே சென்று வந்தவர்களைப்போல் தோன்றினார்கள்.
விருந்துக்கு தேவையான அனைத்து பாத்திரங்களும், கிண்ணங்களும் தங்கத்தாலும், வெள்ளியாலும் மின்னிக்கொண்டிருந்தது, விருந்து மேடையில். இவைகள் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. விருந்துக்கு தலைமை ஏற்கும், நெப்போலியனின் இருக்கைக்கு நேராக வைத்திருந்த கிண்ணங்களும், தட்டுகளும், ஸ்பூன்களுமே அனைவரின் எண்ணத்தை ஆக்கிரமித்திருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பான அலுமினியத்தால் செய்யப்பட்ட உணவு கிண்ணங்களே அவைகள். நெப்போலியனுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்தது.
இன்றைக்கு, ஒருவரின் வறுமை நிலையை சொல்ல வேண்டுமானால் , அவரின் சொத்து ஒரு அலுமினிய தட்டும், ஒடுங்கிய டம்ளரும் என்று சொல்லுகிறோம்.
ஒரு அரசனுக்கு நிகரான நெப்போலியன் தன்னை தனித்து காட்ட, தன்னையே கீழ்மை படுத்திக்கொண்ட கதை இது.
கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!
*** *** ***
'நீ போட்டுட்டியா?'
'இல்ல. ஆனா ரெண்டு போட்ட மாதிரி செர்டிபிகேட் வாங்கிட்டேன்.'
'பூஸ்டர் வேற போடணுமாம்'
'விட்றா.. இன்னொரு செர்டிபிகேட் வாங்கிட்டா போச்சு.'
'ஜனநாயக நாட்டில் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி கட்டாயம் என்பது சட்ட விரோதம்.' - என்பது ஒரு சாராரின் வாதம்.
'முகக்கவசம் போடாமல் பொது இடங்களில் நடமாடக்கூடாது. தடுப்பூசி போடவில்லை என்றால் பயணங்கள் சாத்தியமில்லை.' - இது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இதைவிட பெரிய கூத்து உலக சுகாதார நிறுவனம். 2019-ல் தொற்று ஆரம்பித்தபோது அது பரவக்கூடியதல்ல என்று அறிவித்தது. நிலைமை சீர்கேடடைந்த பின்னர் எந்த மாற்றம் வந்தாலும் மக்களை பயமுறுத்தும் வண்ணம் அறிவிப்பை வெளியிடுகிறது. அது இன்னும் முடிந்தபாடில்லை. உண்மை நிலை யாருக்கும் தெரியாது.
தடுப்பூசி போட்டவர்களும் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். ஊசி போட்டவுடன் இறந்தவர்கள் பற்றி பெரிதாக ஒன்றும் செய்தி வெளி வரவில்லை.
ஆக மொத்தம், கூட்டி கழித்துப் பார்த்தால் வரக்கூடிய முடிவு '0' தான்.
உலகிற்கே அறிவுரை சொல்லக்கூடிய, உலக சுகாதார நிறுவனமும் வறள் பசு தானே!
கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!
*** *** ***
'மற்றைய மாநிலங்களை கணக்கில் கொள்ளும்போது, குறைந்தது பதினைந்து ஆண்டுகள் முன்னோடியாக திகழ்கிறது தமிழக கல்வி முறை. புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்பதால் தமிழகம் பின்னோக்கி செல்ல வேண்டி இருக்கும்.' - அரசு வக்கீல் தனது வாதத்தை நீதியரசரிடம் எடுத்துரைத்தார்.
ஒரே நாடு, ஒரே கல்விமுறை எனத்திட்டமிடும்போது கல்வியில் வளர்ச்சி பெற்றுள்ள மாநிலங்களை கணக்கில் கொண்டு புதிய கல்வி முறையை கொண்டு வந்திருக்க வேண்டும். பின்தங்கிய மாநிலங்களை தாங்கி பிடிக்க கொண்டு வரும் புதிய கல்வி முறை நிச்சயம் எதிர்ப்பை சந்திக்கத்தான் செய்யும்.
இன்றைக்கும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவித்து தமிழகம் கல்லூரிகளுக்கு அட்மிஷன் போட்டுக்கொண்டிருக்கையில், C B S E தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகள் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கல்வியின் தரத்தில் வறண்ட மாநிலங்களை கணக்கில் கொண்டு தேசிய கல்வி கொள்கையை வகுக்கும் தலைவர், பெரிய பொறுப்பிலிருந்தாலும், தன்னுடைய அதிகார வரம்பிற்குள்தானே திட்டமிட முடியும்.
புதிய தேசிய கல்வி திட்ட தலைவர் என்ற பதவியை கொண்ட இவரும் ஒரு வறள் பசுவே.
'என்னைப் பிடிக்காமல் போய் விட்டால்..?' - பலமுறை பார்த்தும் திருப்தி அடையாமல் மீண்டும் மீண்டும் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். மீசையில் அங்கங்கு நரைத்திருந்த முடிகளை திருத்திய பின்னரும், புதிதாக ஏதும் தெரிகிறதா என்று ஆராய்ந்தான்.
காலையில் புரோக்கர் வாட்சப்பில் அனுப்பி இருந்த பெண்ணின் படத்தை டெஸ்க்டாப் இமேஜாக மாற்றி வைத்திருந்தான். படத்தை பார்க்க பார்க்க, சுமாராக தேர்வெழுதிவிட்டு தேர்வு முடிவுகளை தேடும் மாணவனின் நெஞ்சத்தின் படபடப்பு.
கன்னிகா.. கன்னிகா.. கன்னிகா..
'பார்க்குமிடமெல்லாம் கன்னிகா. - நான் சுவாசிக்கும் காற்றே கன்னிகா.' - இது நிஜம்தானா என்று பலமுறை தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.
'முப்பத்தாறு வயசு' என்பதை பெண்ணின் வீட்டார் பெரிதாக சொல்வார்களோ. 'ஆனா வயசுக்கேத்த வேலையும், சம்பளமும் இருக்கே.' என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ள முயற்சித்தான்.
அவனுடைய அத்தனை தேறுதல்களும், பெண்ணின் படத்தை பார்த்ததும் காணாமல் போனது.
'இவளுக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேனோ?'- சுண்டி இழுக்கும் கண்களில் ஆழ்ந்திருக்கும்போது மொபைல் அழைத்தது.
எதுக்கு சம்பாரிக்கிறோம். நல்ல வாழ்க்கை அமையத்தானே. இந்த பெண் கிடைத்தால் இதை விட என்ன சந்தோசமான வாழ்க்கை கிடைத்துவிடப்போகிறது பணத்தை வைத்து.
'இன்னிக்கு நீங்க சரி சொல்லிட்டு, அமௌன்ட் அனுப்பி வச்சீங்கன்னா, பொண்ணுட அம்மா அப்பாகிட்ட பேசிறலாம். சாயந்தரம் நல்ல நேரம் இருக்கு. மருதமலை கோவில்ல வச்சு கல்யாணத்த முடிச்சிரலாம்.'
சரவணனுக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை புரோக்கர்.
'நானும், கன்னிகாவும் மட்டும் தனியாக. அதுவும் தனி அறையில்'. மின்னலைப்போல் தாக்கிய இன்ப அதிர்வுகளால் நிலைகுலைந்தே போய் விட்டான் சரவணன்.
'சரவணன் சார்.. பொண்ணுக்கு உங்க வாட்சப் நம்பர் குடுத்திருக்கேன். பேங்க் டீடெய்ல்ஸ் அனுப்புவா. பணம் அனுப்பிட்டு கன்பார்ம் பண்ணுங்க. கல்யாண ஏற்பாடு பண்ணிர்றேன்'.
கையிலிருந்த ஆறு லட்சம் கன்னிகா பேங்க் அக்கௌண்டுக்கு அனுப்பியாச்சு. மீதம் ஒரு மாதத்திற்குள் கொடுப்பதாகவும் ஏற்பாடு.
அதன் பின்னர் நடந்ததெல்லாம் வெறும் கனவில் நடப்பதுபோல் நடந்தேறியது.
*** *** ***
இதோ, இத்தனை வருடம் காத்திருந்த வசந்தம் வெகு அருகில். தாஜ் அறையின் குளிர்ச்சியை தாண்டி வியர்த்தது சரவணனுக்கு.
'ஏங்க, இங்க சரக்கு கிடைக்குமா? ஆடர் பண்ணுங்க' - கன்னிகாவின் குரலில் வந்த முதல் செய்தியை கேட்டு, புரிந்து கொள்ள முடியாமல் விழித்தான் சரவணன்.
'என்ன.. சரக்கா?'
'ஆமாங்க, இன்னிக்கு ரொம்ப அலைச்சல் நமக்கு. சரக்கிருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.' - என்ற கன்னிகா தன் மொபைலில் ஏதோ வீடியோ கிளிப்பை தேடினாள்.
'ஆ.. இதோ கெடச்சிருச்சு. பாருங்க இந்த பிராண்ட் ஆர்டர் பண்ணுங்க' - தன் அக்காவுடன் குடிக்கும்போது எடுத்த விடீயோவை காட்டினாள்.
இதுவரை இன்ப மயக்கத்தில் இருந்த சரவணனுக்கு, தலையில் செங்குத்தாக இடி இறங்கியது.
ஒரு பீடியோ, சிகரெட்டோ, குடியோ எதுவுமே பழக்கம் இல்லாத சரவணன் பதறிப்போனான்.
'இதெல்லாம் தப்புமா. இதுவரைக்கும் நீ எப்படியோ. இனிமேல் நாம் புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்போம்.'
இப்படி சொன்ன சரவணனின், சொட்டையாக தயாராக இருந்த தலையை வெறித்து பார்த்த படியே சொன்னாள், கன்னிகா, 'சரி. ரொம்ப டயர்டா இருக்கு. எனக்கு வேற பீரியட்ஸ் ஆயிருச்சு. தூங்குவோம்' - என்று சொன்னபடியே ரெஸ்ட்ரூம் போனாள்.
திரும்பி வந்தவள் பெட்ஷீட் இழுத்து போர்த்தி படுத்துக்கொண்டாள். அவளிடம் இருந்து வந்த ஒருவித பழ வாசனை, என்னவென்று சரவணனுக்கு தெரியவில்லை.
*** *** ***
நேற்றைய இரவில் நடந்ததை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்ட மாதிரி தெரியவில்லை, கன்னிகாவின் நடவடிக்கைகளில்.
சந்தோசமாக பேசிக்கொண்டு சரவணனுடன் ஷாப்பிங் மால் சுற்றினாள். சரவணனும் சளைக்காமல் அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தான். வாழ்வின் முதன்முறையாக காஸ்மெடிக்ஸ், பியூட்டி ப்ராடக்ட்ஸ், டிரஸ் என ஐம்பதினாயிரத்துக்குமேல் செலவு செய்தான்.
அவள் அருகாமை பிரமிப்பிலிருந்து மீளாமல் சரவணனிருக்க, அவனுடன் இறுக்கமாக இணைந்து நடந்துகொண்டாள் கன்னிகா.
'எனக்கு எஸ்கலேட்டர்னா பயம். என் பிரண்ட்ஸ் கூட கிண்டல் பண்ணுவாங்க. நீங்க எஸ்கலேட்டர்ல போங்க. நான் படியில் ஏறி வர்றேன்.' - அவனை நான்காவது மாடி கடைக்கு அனுப்பி வைத்தாள்.
'நாலு மாடி ஏறி வர பத்து நிமிஷம் ஆகுமா. அரை மணி நேரம் ஆச்சு. இன்னும் மேல வரலையே' - இப்பொழுதுதான் சரவணனுக்கு எங்கோ தவறு நடந்த மாதிரி ஒரு பிளாஷ்.
எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை கன்னிகா.
அறையில் வைத்து விட்டு வந்த நகைகளும், பணமும் அவளைப்போலவே காணாமல் போயிருந்தது. நல்ல வேளை, அறை சாவியை வரவேற்பறையில் கொடுத்து விட்டு போயிருக்கிறாள்.
*** *** ***
'சார். இது எங்க கண்ட்ரோல் ஏரியா இல்ல. நீங்க அந்த பொண்ணு ஊர்ல போய் கம்ப்ளைண்ட் குடுங்க' - சரவணனின் முறையீட்டை ஏற்க மறுத்து, நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த காவல் நிலையத்தை கை காட்டினார் நிலைய காவல் அதிகாரி.
இனி மீதமுள்ள வாழ்க்கை கன்னிகாவுடன் வாழ்ந்த இரண்டு நாள் நினைவுகளும், காவல் நிலையமும்தான் சரவணனுக்கு.
*** *** ***
இது ஒரு உண்மை கதை.
20-06-2022 அன்று செய்திகளில் பரபரப்பாக வந்தது. கதைக்களம் சிறுகதைக்கேற்ப மாற்றம் பெற்றிருந்தாலும், கதைக்கரு உண்மை நிகழ்வு.
தான் கற்ற கல்வியோ, உலக அனுபவ அறிவோ எதுவும் உதவவில்லை சரவணனுக்கு.
தனக்கே உதவாத கல்வியை வைத்துக்கொண்டு எவ்வளவு கதறினாலும், யாருக்கும் உதவாத வறள் பசு போன்றவர்களே இவர்கள்.