Friday, October 31, 2025

காணாததை காணலாம்

 காணாததை காணலாம் 



கடவுளைக் காண்பது சாத்தியமா?

கடவுளை யாரும் கண்டிருக்கிறார்களா?

கடவுள் என்பது யார்?

இறைவனா? தெய்வமா? அல்லது கடவுளா?

கோயிலில் இருப்பது இறைவனா? தெய்வமா அல்லது கடவுளா?

இறைவன் கோயிலில் உள்ள சிலையில் மட்டும் இருந்தால், பிரபஞ்சத்தில் உள்ள  மற்ற  பொருட்களில் இறைவன் இல்லை என்றாகிவிடும். எங்கும் எதிலும் இருப்பவன் இறைவன்.

இறைவனே  இயற்கை என்பதால் இறைவனை  கோயிலில் இருந்து எடுத்து விடுவோம்.

இனி கடவுளுக்கு வருவோம்.

ஒவ்வொரு உயிர்வாழ் உடலிலும் இறைவனின் இணைப்பு இருக்கிறது. அதை உயிர்வாழிகள் உணர்வதில்லை. தனக்குள்ளே பரம்பொருள் உறைகிறான் என்று உணர்ந்து, கடும் முயற்சி செய்து, அறிய முற்படும் பொழுது இறைவன் கடவுளாக வெளிப்படுகிறான்.

அடுத்து தெய்வத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

பூவுலகில் தானும் வாழ்வாங்கு வாழ்ந்து, தன்னை சார்ந்தோர்க்கும் பயனளிப்பவனாக இருந்து, தன்னை ஒரு முன்னோடியாக கொண்டு மக்கள் வாழ  வழிகாட்டியாக வாழ்ந்தவர்கள் தெய்வம் ஆகிறார்கள்.

திருக்குறள் - 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

எனவே, நாம் இன்று தெய்வம் என்று வணங்குபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து சென்றவர்கள் என்று கொள்ளலாம். குறிப்பாக, ஆதி யோகியாகிய சிவன், தமிழ்க்கடவுளான முருகன் மற்றும்  திருமூலர் போன்ற சித்தர்களை இந்த வரிசையில் கொண்டு வரலாம். இவர்கள்  அஷ்டமா சித்திகள் என்னும் எட்டு வகை  ஆற்றலை  கைவரப்பெற்றவர்கள். 

அஷ்டமா  சித்திகள் என்பது எட்டு வகை ஆற்றல்கள்:

1. அணுவை விட சிறிய நிலை எடுப்பது 

2. அண்டத்தை விட பேரண்டமாக விரிந்து நிற்பது 

3. காற்றினும் மென்மையாக இருப்பது 

4. மலையினும் பாரமாய் இருப்பது 

5. எண்ணம் போல் நினைத்தவற்றை அடைவது  

6. உலகப்பொருட்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பது  

7. தன்னுயிரை பிறிதோர் உடலில் மாற்றுவது 

8. தெய்வ நிலையில் நிற்பது 

அதாவது, தெய்வ நிலையில் இருக்கும் இவர்கள் கோயிலில் இருந்து மக்களுக்கு அருள் பாலிப்பவர்களாக இருக்கிறார்கள். கருவறையில் உள்ள கல்லிலும் இவர்களால் உறைந்திருக்க முடியும்.

இந்தக் கோட்பாட்டில்தான் நம் முன்னோர்கள் கல்லிலும், பொன்னிலும்  தெய்வ சிலைகளை வடித்து அதனை கருவறைக்குள் வைத்திருக்கிறார்கள். மனிதன் வடித்த சிலைகளில் எல்லாம் தெய்வங்கள் வாழ்கின்றனர்.

சிவன் கோயில் கருவறை சிலையில்  சிவன் இருப்பதும், முருகன் கோயில் கருவறை சிலையில் முருகன் இருப்பதும், சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பின்னர்  கோயில்களில் சித்தர்கள் இருப்பதும்  இவ்வாரென்று கொள்ளலாம்.

கல்லென்று பார்ப்பவர்களுக்கு கல்லாகவும், தெய்வம் என்று பார்ப்பவர்களுக்கு தெய்வமாகவும் இருக்கிறார்கள்.

திருமூலர் இந்த கருத்தை மிகத் தெளிவாக திருமந்திரத்தில் விளக்குகிறார்.

திருமந்திரம் - 2290

மரத்தை மறைத்தது மாமத யானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே. 

மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது, நம் கண்களுக்கு யானை மட்டுமே தெரிகிறது. இந்த யானை, மரத்தால் செய்யப்பட்டது என்று உணர்ந்து யானையைப் பார்க்கும்போது யானை மரமாக தெரிகிறது. அதுபோலவே, இந்த உலகம், இறைவனை மறைத்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பெரும்  பூதங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுது, இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்கிறோமோ அப்பொழுதே பஞ்ச பூதங்கள் மறைந்து இறைவனுக்குள்  ஐக்கியமாகி விடும்.

இனிமேல், கோயிலில் தெய்வத்தை வணங்கும்போது, முழு விழிப்புணர்வு நிலையில் வணங்கினால் நம் முன் இருப்பது கற்சிலையல்ல, சிலை வடிவில் உள்ள நாம் வணங்கும் தெய்வம். 

அங்கே  மனமுருக பிரார்த்திக்கும்போது, ஒலியற்ற நம்  குரல் தெய்வத்திற்கு கேட்டிடும், தெய்வத்தின் கருணை அளவின்றி பொழிந்திடும்.

*** *** ***



Friday, October 17, 2025

நட்சத்திரமடி நீ எனக்கு

நட்சத்திரமடி நீ எனக்கு 




நிச்சயம் மறுபடியும் பிறந்திருப்பேன் - எனினும் 
நானாக பிறப்பது நிச்சயமில்லை - குறிப்பாக  
மனிதனாக பிறப்பதும் நிச்சயமில்லை.

செய்யக் கூடாததை செய்தும் 
செய்ய வேண்டியதை செய்யாமலும் 
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் - மீண்டும் 
மனிதனாக பிறப்பது நிச்சயமில்லை.

இயமநியமம் ஈரங்க யோகநிலை 
இயல்பான  வாழ்வாக  பழகிவிட்டால் 
அறமதுவே பிறவிக்  கடமை - மறுபடியும் 
மனிதனாக பிறப்பதற்கது  கடவுச்சீட்டு.


திருமந்திரம் - 113

விண்ணின்‌ றிழிந்து வினைக்கீடாய்‌ மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத்‌  தலைக்காவல்‌ முன்வைத்து 
உண்ணின்‌. றுருக்கியொ ரோப்பிலா ஆனந்தக்‌ 
கண்ணின்று காட்டிக்‌ களிம்பறுத்‌ தானே.


வானத்திலிருந்து இறங்கி வரும் இறைவன், ஒருவன் முற்பிறவியில்  செய்த நன்மை, தீமைக்கேற்ப உடல் கொடுக்கிறான்.

அந்த உடல் மனித உடலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தனது குளிர்ந்த காலை, உடலுக்கு காவலாக தலையில் வைக்கிறான்.   முற்பிறவியின் நினைவுகளையும், மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்னும் களிம்பை  அகற்றும் இறைவன், ஒப்பற்ற ஆனந்தப் பேரொளியாக கண்களின் இடையே திகழ்கிறான்.

இந்தப்பாடலில் மிகவும் கடினமான  மெய்யியல்  கேள்விக்கு பதில் இருக்கிறது.

கேள்வி: 

முதன் முதலில் மனிதன்  பிறக்கும்போது, வினைப்பயன் அற்ற நிலையில் தானே இருந்திருப்பான். நல்வினை, தீவினை  என இருவினைகளுக்குள் செல்ல வேண்டிய அவசியம் எப்படி அமைந்தது?

பதில்: 

முதல் பிறப்பில் தூய உடலில் இருந்தாலும், மண்ணில் பிறந்தவுடன் மும்மலங்கள் என்னும் ஆணவம், கன்மம், மாயைக்குள் வாழ்க்கையை  துவங்குகிறான். வாழ்வில் இன்பம் ஒன்றையே நாட்டமாக கொள்வதால், நல்லவை, கெட்டவை என்று பகுத்தறியாமல் இருவினைகளின் மாய வலையில் சிக்கிக்கொள்கிறான்.

ஒவ்வொரு முறை மனிதனாக பிறப்பெடுக்கும்போதும், உடல் மற்றும் பின்புலம் அவன் முற்பிறப்பின்  முழு வினைப்பயனாலே  அமைகிறது. அதாவது முந்தைய பிறவியின் மும்மலங்கள்  அழிக்கப்பட்டு புதிதாகவே பிறக்கிறான்.

இதைத்தான் திருமந்திரம், 

வினைக்கீடாய் மெய்கொண்டு.. களிம்பு அறுத்தானே..  என்று விளக்குகிறது.

*** *** ***



Saturday, October 11, 2025

காலதேவனின் கணக்கு

காலதேவனின் கணக்கு 

உடலைப்  பிரிந்த  உயிரின் நிலை என்ன?

மறுபடியும் பிறந்திருக்கும்.

இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உயிரின் நிலை என்ன?

இராப்பகல் அற்ற சுத்தப் பெருவெளியில்  இருக்கும்.

உயிரின் இறுதி ஆதார நிலை என்ன?

முழுமுதற் பொருளான இறைவனுடன்  இணைந்து  இருக்கும்.

இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.

திருமந்திரம் - 1822

கூறுமின் நீர்முன் பிறந்துஇங்கு  இறந்தமை 
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும் 
பாரணியும்  உடல் வீழவிட்டு  ஆருயிர் 
தேரணியும் இது  செப்ப  வல்லீரே. 

ஏற்கனவே நீங்கள் இந்த பூமியில் பிறந்து, இறந்திருக்கிறீர்கள், மீண்டும் பிறந்திருக்கிறீர்கள் இது வேறு.  அதைப்போலவே, பூமியில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலை அடைந்து இறந்தவரின் உடலை விட்டு அதன் மெய்ப்பொருளான உயிர் நீங்கியிருக்கும்.  ஆனால், அவர்  இந்த மண்ணில் பிறக்கும்போது கூட வந்த உடலை, மண்ணிலேயே விட்டுவிட்டு சென்ற உயிர், இறைவனின் தேரில் ஏறி இறையுடன் இணைந்திருக்கும். அந்த உயிர் மீண்டும் மண்ணில்  பிறப்பெடுக்காது.

இதைப்  புரிந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

*** *** *** *** ***





Monday, October 6, 2025

பெருந்துயரம்

பெருந்துயரம் 

 



திருமந்திரம் - 171

ஈட்டியதேன் பூமணம் கண்டு ரதமும் 
கூட்டியே கொணர்ந்து ஒருகொம்பிடை வைத்திடும் 
ஓட்டியே துரத்திட்டு அதுவலியார் கொளக் 
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

இந்தப் பாடலுக்கான சரியான பொருள் நீண்ட காலம்   பிடிபடாமலே இருந்தது. இந்தப் பாடலின், நேரான விளக்கம், மெய்யியல் விளக்கம் மற்றும் அரசியல் விளக்கம் என  மூன்று கோணங்களில் புரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேனீக்கள் மலர்களின் நறுமணத்தைக் கொண்டு, மலர்களிடம் இருந்து  தேனை சேகரிக்கிறது. மரத்தின் கொம்புகளில் உள்ள தனது தேனடையில் சேமித்து வைக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தேனடை தெளிவாக தெரிவதால், தேனெடுக்கும் ஆற்றல்  உள்ளவர்கள்,  தேனீக்களை துரத்திவிட்டு தேனை எடுத்துக்கொள்வார்கள்.

மலர் தன் நறுமணத்தால் காட்டிக்கொடுத்து  தேனை இழந்தது. தேனீ, கண்ணில் படும்படி கட்டிய  தேனடையால் அதன்  பலனை இழந்தது.

இது நேரான புரிதலில்..

மனிதன் சுவையான  உணவினை தேடி தேடி  உண்டு பல வகைகளில் தன் உடலை வளர்த்து  வைத்திருக்கிறான். ஒரு நாள், கால தூதன் உயிரை எடுத்தபின், பொத்தி பொத்தி வளர்த்த உடலால் எந்த நன்மையும்  அவனுக்கு இருப்பதில்லை.

இது மெய்யியல் பார்வையில்..  

ஒருவன் தன் பல வருட உழைப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொள்கிறான். அவர்களின் மூலம் தனக்கான ஒரு அரசியல் பாதையை அமைத்து வெற்றிக்காக பாடுபடுகிறான். அவனுக்கு சேரும் கூட்டம் ஆட்சி செய்பவர்களின்  கோபத்தை தூண்டி விடுகிறது. இதுவே, கரூரில் நடந்த பெருந்துயர நிகழ்விற்கு  காரணமாகிறது. கூடிய கூட்டத்தால் அவனுக்கு எந்த பலனும் இல்லை. 

இது அரசியல் நிகழ்வில்..

*** *** ***

மக்களை காப்பது மன்னனின் கடமை 

மக்களை காப்பதுதான் மன்னனின் கடமை 

மக்களை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை 

மக்களின் உயிரை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை 

மற்றவர் மீது  குற்றம் சுமத்துவது  சுத்த மடமை 


*** *** ***







 

Tuesday, September 30, 2025

பயணம் முடிந்துவிடும்

பயணம் முடிந்துவிடும் 

NEWS: 

Accenture lays off more than 11,000 employees: CEO Julie Sweet says we are "exiting" employees on a compressed timeline, people where reskilling, based on our experience, is not a viable path for the skill we need.

மற்றவர்கள் உங்களை மாற்றுவது சாத்தியமல்ல. நீங்களாக, மாறுவதை தெரிந்து, மாறிக்கொள்ளுங்கள்.

புதிய பயணத்தை தொடங்குங்கள்.

திருமந்திரம் - 177

கிழக்குஎழுந் தோடிய ஞாயிறு மேற்கே 
விழக்கண்டும் தேறார் விழிஇலா மாந்தர் 
குழக்கன்று மூத்து எருதாய்ச் சிலநாளில் 
விழக்கண்டும் தேறார் வியன்உல கோரே.

காலையில் கிழக்கே உதிக்கும் கதிரவன் மாலையில் மேற்கே மறைவதை தினமும் காண்கிறீர்கள். மாற்றத்தை கண்கூடாக பார்த்தும் பாராமல் இருக்கிறீர்கள். எருதின் கன்று வளர்ந்து பருவமடைந்து, வாழ்நாள் முடிந்து நம் கண் முன்னரே மறைவதை பார்த்தும் மாற்றத்தின் தன்மையை உணராமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

எந்தவொரு பயணமும் மாறி மாறி ஒரு நாள் முடிந்துவிடும் என்பதை  உணர்ந்து கொள்ளுங்கள். வாழும் நாட்களை விழிப்புணர்வோடு வாழுங்கள்.






Saturday, September 27, 2025

காமதேனு

காமதேனு 


திருமந்திரம் - 2015

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 
மற்றைப் பசுக்கள் வறள்  பசுதானே.

தமிழகம் ஏன் ஏனைய மாநிலங்களில் இருந்தோ, மற்ற நாடுகளில் இருந்தோ தனித்து  தெரிகிறது? இறைத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் இறை உணர்வாளர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். 

இங்குதானே, இறை  மறுப்பாளர்களும், அவர்களின் போதனைகளும் நிறைந்து வழிகிறது. இவர்களின் போக்கும், செயல்களும் தாங்கள் மிக்க அறிவுடையவர்கள் மற்றவர்கள் இழி பிறவிகள் என்னும் அளவிற்கு தங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

'கடவுள் இல்லை ' - என்றால் பகுத்தறிவாளன். உண்டு என்றால் சுயமாக சிந்திக்கும் திறனற்ற பழமைவாதி. 

இந்த பகுத்தறிவாளர்கள்தான் தான்  கற்ற பசுக்கள். கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசும் தங்கள் பங்கிற்கு இறை மறுப்பை சிரமேற்கொண்டிருப்பதும் தமிழகத்தில்தான். மக்களின் தேர்தல் வாக்குகளுக்காகவும், கோயில்களின் சொத்துகளுக்காகவும், தினம் தினம் உண்டியலில் சேரும் செல்வத்திற்காகவும், இவர்கள் செய்யும் குட முழுக்குகளும், விழாக்களும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கொற்ற பசுக்கள். நெற்றியில் அதிகாரம் என்னும் குறியை கட்டி  மேய்பவர்கள். 

ஆனால், தன்னுள் நிரம்பி நிறைகுடமாக உள்ள ஒருவர் போதும். உலகையே தன் பக்கம் இழுத்து, சமுதாயத்திற்கு தேவையானதை செய்ய.

இந்த முற்ற பசுவின் ஒரு குடம் பால் போதும். ஏனைய பசுக்கள், பால் வற்றிய வறள் பசுக்களே.

அப்படிப்பட்ட ஒருவர்தான் இவர். சமுதாய ஊடகத்தின் இன்ப்ளூயன்சர்.









                                                                                      

Tuesday, September 16, 2025

ஆசை நூறுவகை

 ஆசை நூறுவகை 



திருமந்திரம் - 2033

அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்கா அறிவு  அறிந்தேனே.


புலன்களால் உண்டாகும் ஆசையை அடக்கினால் மட்டுமே யோக  வாழ்வை  அடைய  முடியும் என்று அறிவற்றவர்கள்தான் சொல்வார்கள். புலனாசையை, வானில் வாழும் தேவர்களாலும், அடக்க முடியாது. அதற்கு தேவர்களும் விதி விலக்கல்ல. அடக்க இயலா காமத்துடன் சென்று, முனிபத்தினியான அகலிகையின் சாபம் பெற்றவன் தேவர்களின் கோமான்  இந்திரன். புலன்களை அடக்குவதால் இன்னொரு கோளாறும் உண்டு;   நாமும் ஜடப்பொருள்களைப்போல் ஆகி நம் வாழ்வும் இயந்திர  வாழ்வாகி விடும்.

எனவே, புலனாசையை அடக்காமல், புலன்களின் இயக்க உண்மையை அறிவதே யோக வாழ்விற்கு வழிகாட்டியாகும்.

புலன்களின் உண்மைத்தன்மை அறிந்து யோக வாழ்விற்கு வழி காட்டும் திருமூலரின் திருமந்திரத்தை நாம் தொடர்வோம்.


 

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...