Friday, September 6, 2019

எங்கே நிம்மதி?

எங்கே நிம்மதி?




பெண்ணைப் படைத்து
கண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே


'பெண் என்பவள் ஒருவனுடன் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருப்பாள். ஒருவனை தீவிரமாக பார்த்துக்கொண்டிருப்பாள். ஒருவனை கனிவுடன் நினைத்துக்கொண்டிருப்பாள். மற்றொருவனுக்கு உரிமையானவளாக இருப்பாள்.'

 பெண்ணைப்பற்றிய இந்த விளக்கம், வேறெங்குமில்லை, நம்ம மஹாபாரதத்தில் சொன்னதுதான்.

தன்னுடைய குளிர்சாதன அறையில் இருந்து வெளியே வந்த நிர்வாக இயக்குனர்  சாதனா, பிரபல தொழிற்சாலையில் இருந்து வந்த மூத்த பொறியாளரை முகத்தில் புன்முறுவலோடு வரவேற்றாள். அவள் பார்வையில், மெக்கானிக் மோகன் காரை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறுவது  பட்டது. கார் சரியாகாமல் போனால் மகனை பள்ளியில் இருந்து அழைத்துவர கணவருக்கு சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

அட, மஹாபாரதம் சொன்னது சரிதான். மல்டி டாஸ்கிங் பெண்களால் மட்டும்தான் பண்ண முடியும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறது.

சாதனா, பொறியாளரை வரவேற்று பேசுகிறாள். மெக்கானிக் மோகனை பார்க்கிறாள். மகனை நினைக்கிறாள். கணவனிடம் சொல்ல எண்ணம் கொள்கிறாள்.

அவ்வளவுதானா..

திருக்குறள் 56

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.                                                                 

தன்னைக்காத்துக்கொள்ளும் பொறுப்பு  பெண்களுக்கு, அவர்களின் மூச்சுக்காற்றை போன்றது. மணவாழ்வில், கணவன், குழந்தைகள், கணவனை சார்ந்த உற்றார், உறவினர் அல்லாமல் பிறந்த வீட்டின் பெருமை குறையாத பேச்சுடன் சோர்வில்லாமல் வாழ்பவள்தான் பெண்.

இன்னும் இருக்கு பாருங்க..

திருமந்திரம் 1053

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச்   செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை
அவளன்றி ஊர்புகு மாறு அறியேனே.
                                                                  

சக்தியின் வடிவம் பெண்.
சக்தியை அறியாத தேவர்கள் இல்லை. சக்தியின்றி எந்த தவமும் நிறைவேறாது. ஐம்புலன்களில் இந்திரியம் என்னும் ஆற்றல் இல்லாமல் போகும். சக்தியின்றி இறைவனடி சேருவதும் இயலாது.

சக்தியின்றி  தேவர்களும், அவர்கள் ஆற்றும் தவமும், செய்யும் கடமையும் செய்வதற்கியலாமல் இறைவனின் திருவடி சேரவும் வேறு  வழியில்லை.


பெண்ணைப் படைத்து
மண்ணைப்  படைத்த
இறைவன் இனி-அவளே.

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...