நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு - LGBT
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை - திருமந்திரம்
'அந்தக்காலத்திலேயே இப்படியா?'
'ஆணோடு ஆண் புணர்ந்தால் மட்டும் மேதமையோ ? சாமி சரணம் !'
முகநூலில் ஒருவர் 'பெண்ணோடு பெண் புணரும் பேதைமை..! - திருமந்திரம்' எனப்பதிவிட, படித்தவர்களின் கருத்துகள். இன்னும் பலவிதமான கருத்துகள், அவரவர் அறிவு நிலைக்கேற்ப.
ஆணவம்
உள்ளதொன்றை உள்ளதென்று உணரா மனம்.
உறக்கத்தில் தன்னைச் சுற்றி உள்ள எதையும், தன்னையும் மனம் உணர்வதில்லை.
பகுத்தறிவுவாதிகள் உறக்கத்தில், ஆணவ நிலையில் உள்ளவர்கள்.
அகங்காரம்
உள்ளதொன்றை உள்ளவாறு அறியா மனம்.
கண்டு, கற்று, கேட்டு, ஆராய்ந்து ஒன்றை முழுமையாக அறியாமல், தானும் மயக்க நிலையில் வாழ்ந்து, மற்றவரையும் மயக்க நிலையில் வழி நடத்துவது.
ஆன்மீகவாதிகள் தானும் மயங்கி தன்னை சார்ந்தவர்களையும் மயக்க நிலைக்கு தள்ளும் அகங்கார மாயையில் வாழ்பவர்கள்.
இவ்வாறான ஆணவம் மற்றும் அகங்காரம் மிக்கவர்கள் இடையேதான் சகலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், உண்மை நிலை உணராமல்.
திருமந்திரம்-1159
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை யாணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை யாணென் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை யாணிடைப் பேச்சற்ற வாறே.
பெண்ணாக பிறந்திருந்தாலும் அவள் உடலின் உணர்வில் குறித்த அளவு ஆண் தன்மையும் இருக்கிறது. பெண்ணாக பிறந்து ஆண் தன்மை அதிகம் உள்ள பிறப்பினை அறிந்து, தன்னை ஈர்க்கின்ற பெண்ணை அடைகின்றபோது அவர்கள் உறவில் முழுமையடைகிறார்கள். எனவே, பெண்ணோடு பெண் உறவு என்று பேசுவது அறிவீனம் ஆகும்.
அறிவியலும் ஆய்ந்து அறுதியிட்டு சொல்ல முடியாத தீர்வை நான்கு வரிகளில், போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார் திருமூலர்.
சரி, LGBT என்றால் என்ன?
L - Lesbian [பெண்ணொரு பெண்ணுடன் உறவில் இருப்பது]
G - Gay [ஆணொரு ஆணிடம் உறவில் இருப்பது]
B - Bisexual [ஆண், பெண் இருவரிடமும் உறவில் இருப்பது]
T - Transgender [ஆண்மையும், பெண்மையும் திரிபுற்ற உடலில் இருப்பது]
'LGBT உறவில் இருப்பது சட்டத்திற்கு சம்மதமே. அவர்கள் திருமண உறவில் இருப்பது சட்டத்திற்கு ஏற்புடையதல்ல.' - இது சமீபத்திய இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்.
வழக்கை LGBT பாலார் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மட்டும் இந்த திருமந்திரப் பாடலை சொல்லி, நீதியரசருக்கு விளங்க வைத்திருந்தால், தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கும்.
இன்னும், அவகாசம் இருக்கு. பாடலை எடுத்துரைத்து, நீதி மன்றத்தின் அகங்காரத்தை அகற்றினால், 'நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு' என்று கேட்கலாம்.
*** *** ***
No comments:
Post a Comment