சங்கிலித்தொடர்
என்தெந்து நின்னனு மறது
பதுக்கிரலாறெ..
இன்னெந்து நின்னனு அகலி
நானிரலாறெ..
என்றென்றும் உன்னை மறந்து வாழ்ந்திருக்க மாட்டேன் - அகக்கனல். இனி என்றும் நீயில்லாமல் நானிருக்க மாட்டேன் - புறக்கனல்.
நாம் உண்ணும் உணவை, ஏழு வகை தாது சத்துக்களாக மாற்றும் வேலையை அகக்கனல் செய்கிறது. சத்துக்களை எரித்து, ஆற்றலாக மாற்ற புறக்கனல் துணை நிற்கிறது.
நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இங்கே இருக்கிறது. அகத்தையும், புறத்தையும் இணைக்கும் சங்கிலித்தொடர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
விழித்திருக்கும் நேரமும், உறங்கும் நேரமும் அல்லது உயிருள்ள ஒவ்வொரு கணமும் அகக்கனலும், புறக்கனலும் எவ்வாறு நம் உடலுடன் தொடர் இணைப்பில் இருக்கிறது?
இணைக்கும் சக்தியை திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்:
அண்ட சராசரங்களும், எல்லையற்ற பேரண்டப் பெருவெளியும் உருவாக வித்துவாக இருக்கும் விந்து, புறக்கனலாக திகழ்கிறது. அதுவே, ஐம்பூதங்களின் காரிய மாயையில் சிக்கியுள்ள உடலில் அகக்கனலாக உருவெடுத்து நிற்கிறது.
வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே.
- திருமந்திரம் 1928
வித்து ஒன்றுதான். சங்கிலித்தொடராக இருக்கும் கனலின் தன்மையே மனித உடலின் செயல் திறனாக இருக்கிறது. இந்த வித்தின் தன்மையையும் கீழ்க்கண்டவாறு திருமூலர் விளக்குகிறார்:
தூய வெண்மை நிறத்தில் ஒளிரும் தன்மையையும், தன்னுள்ளே சீரான ஒலியையும் கொண்டுள்ள விந்து, உடலில் எங்கும் நிறைந்துள்ளதுபோல், புறத்திலும் பரவி நிற்கிறது. இங்கேதான், சக்தியும் சிவமும் உறைந்துள்ளதை மகிழ்வுடன் உணர்ந்து வாழ்பவர்களுக்கு, வாழ்நாள் கூடும், வீடுப்பேறடையவும் கூடும்.
புறம்அகம் எங்கும் புகுந்தொளிர் விந்து
நிறம்அது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடளிக்கும் செயல் கொண்டே.
- திருமந்திரம் 1929
அகம், புறம் இணைத்து நம் உடலை பாதுகாக்கும் முறையை அறிந்து, போற்றி, அதன் வழி நடக்க திருமந்திரம் நல்ல வழிதனை காட்டி உள்ளது.
தொடர்ந்து எழுதுகிறேன்...
இறைக்கனல்: 3 தொடரும்..
No comments:
Post a Comment