Saturday, July 18, 2020

தமிழ் கடவுள்

தமிழ் கடவுள் 

உள்ளம் உருகுதையா 
முருகா 
உன்னடி காண்கையிலே 




காணொளி:

உள்ளம் உருகுதய்யா..

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா..




'இது அதர்மம்'  -  குருக்ஷேத்திர தர்ம யுத்தத்தில், யாராலும் எளிதில் பிளக்க இயலாத எதிரியின்  சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைந்து,  எதிரிகளை தன் போர்த்திறனால் துவம்சம் செய்து கொண்டிருந்த தன்னை, நாலா புறமும் இருந்து யுத்த தர்மத்தை மீறி தாக்கும் கௌரவப்  படையினரை நோக்கி கர்ஜித்தான் அபிமன்யு.

கலியுக அபிமன்யுக்கள் இன்றும் கதறிக்கொண்டிருக்கிறார்கள், 'இது அதர்மம்' என்று.

 இவர்களின் ஒரே ஆயுதம் கடவுள்

இல்லையென்று ஒரு சாரார் அடுத்தவருக்கு புத்தி சொல்ல எடுத்துக்கொண்ட ஆயுதம், கவச  அவமதிப்பு.
இருக்கிறதென்று கூறுவோர்கள் எடுத்துக்கொண்ட 
ஆயுதமோ சிலைக்கு காவி பூச்சு. இடையில் மறக்கடிக்கப்படுவது என்னவோ  பெருந்தொற்றின் 
மனிதகுலத்தின் பேரழிவு.

சொந்தமாக கற்றுணர்ந்து அறிவு பெற பொறுமையில்லாத இவர்கள் அடுத்தவர் உண்ட  எச்சில் இலையில்  இருந்த உணவின் சுவையை விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதை அஹங்காரம் என்று சொல்கிறார் அகத்தியர். மனித உடலினின்று இயங்கும் முப்பத்தாறு பிரதம தத்துவங்களில் புத்தி நிலையும் ஒன்று. இது நான்கு தத்துவங்களாக விரிந்து, மனம், புத்தி, அஹங்காரம்  மற்றும் சித்தி என்று நிலை கொள்கிறது.
மனம் ஓரளவிற்கு கல்வி, கேள்வியில் தேர்ச்சி பெற்றதும், 
அடுத்த நிலையான அகங்காரத்தை பற்றி கொள்கிறது.

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
                                              -  அகத்தியரின் சௌமிய சாகரம்  32

நான்காம் நிலையான சித்தியை அடையும் வழியை நம் முன்னோர்கள் விட்டு சென்றதை, இவ்வகை போராட்டங்களினால் அநியாயமாக இழப்பதோடல்லாமல் அடுத்த தலைமுறையினரையும் தெம்பிழக்க செய்கிறோம்.

திருமூலர் வெகு நிறைவாக இதை தெளிவாக்குகிறார்.

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போதும்  
மற்றைப் பசுக்கள் வரள் பசுதானே.
                                                   - திருமந்திரம் 2015

ஒரு பக்கம் வேதம், மந்திரங்கள், பல்வகை சமய சடங்குளை கற்றவர்கள் எவ்வளவுதான் கற்றதை மட்டும் கத்திக்  கதறினாலும்,  இன்னொரு பக்கம் கும்பலாக கூட்டம் கூடி எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முட்டி மோதினாலும், முற்றும் உணர்ந்து சித்தி நிலை அடைந்தவர்கள் வழங்கும்  இறையருளே  போதுமானது. ஏனையோர்கள் எல்லாம் சமுதாயத்திற்கு உருப்படியாக ஏதும் வழங்க முடியாத வறட்டு மாடுகளே!

முருகனின் பேரருள் கந்த சஷ்டி கவசமே,  இன்றைய 
பெருந்தொற்றுக்கு கவசம். தன்னை இழிவுபடுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் கொண்டே இன்று தமிழகம் முழுவதும் உயிர்பெற்று முழங்க வைத்த முருகனின்  கவசத்தை நீங்களும் ஒருமுறை  வீட்டில் ஒலிக்க விட்டு கேட்டு பாருங்கள்:



 

2 comments:

  1. மிகச் சிறப்பான பதிவு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. நீங்கள் ஏதும் எழுதுகிறீர்களா?

      Delete

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள்   நீங்கள் கனவு காண்பவர்களா? கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருக...