Monday, June 20, 2022

நீரினுள் காற்றை ஒளித்தற்று

நீரினுள் காற்றை ஒளித்தற்று


வித்தின்றி முளை விடுமாறில்லை 

முன் குறிப்பு:

மிகுந்த  கவனத்துடன் உணரப்பட  வேண்டிய மனித உடல் மற்றும்  வாழ்வியல் உண்மை  பற்றி அறியப்போகிறோம். எள் முனையளவு  சிந்தனை மாறுபட்டு நின்றாலும்  விரசமாகி வீணாகி விடும், ஜாக்கிரதை. 

இதனை படிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள் நேரான சிந்தனையில் படிக்கவும்.

விதையை, அது விளைந்த மரத்திலே விதைக்கும் வித்தை இது.

விதையை பிறிதோரிடத்தில் விதைப்பதன் மூலம், இன்னொரு மரமாக வளர்ந்து பலன் தருகிறது. 

நம் சிந்தனைக்கான  ஒரு கருத்து. 

விதையை, அது  விளைந்த  மரத்தின் உள்ளே விதைக்க முடியுமா?

விதைக்க முடிந்தால் என்னவாகும்? 

வாருங்கள். திருமூலரின்  வழிகாட்டுதலை பார்ப்போம்.

முதலில் விதையின் தன்மையை அறிவோம்.

பொதுவாக விதைகள், முளைகட்டும் வித்தும்,  அதனை பாதுகாப்புடன் வைத்திருக்கும் சதைப்பற்றும் தோலுமாக இருக்கும். நெல் போன்ற வித்துக்களில் உமிப்பகுதி விதையை பத்திரப்படுத்துவதுடன்  முளை விடுவதற்கு உதவியாக இருக்கிறது. இரண்டும் பிரிக்கப்பட்டால், மீண்டும் முளைவிட்டு மரமாகும் வாய்ப்பில்லை. எனினும், வித்திலிருந்தே முளை பிறக்கிறது.

திருமந்திரம் - 1932

வித்தினில் அன்றிமுளை இல்லை அம்முளை 
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை 
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல 
அத்தன்மை யாகும் அரநெறி காணுமே.

                                                                                             

விதையும் முளையும் வேறு வேறல்ல. வித்தில்லாமல் முளை தோன்றி மரமாகாது. 

விதையே முளையாகி, செடியாகி, மரமாகிறது. பருவம் வந்ததும் தன்  இனம் பெருக்க மலராகி, காயாகி, கனியாகிறது. இனிமையான கனி தன்னுள்ளே விதையை தாங்கி வருகிறது.

இந்த இயற்கை விதி மனித விதைக்கும் பொருந்தும்.

மனித வித்தில் முளையாகும் தன்மையே, புதியதோர் பிறப்பினை உருவாக்கும்  அரநெறி என்று சொல்லக்கூடிய சிவ நெறி. சிவம் நாதமாக வித்தாக, சக்தி ஒளியாக  முளையாக உள்ளதாக நாம் புரிந்துக் கொள்வோம். 

ஒரு ஆல மரத்தின் விதை கடுகினும் சிறிதாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த சிறிய விதைதான் இன்னொரு ஆலமரமாக வளரப்போகிறது என்று தெரிந்தாலும், மனம் அதை முழுமையாக ஏற்க தயங்குகிறது. அதைவிட பல ஆயிரம் மடங்கு சிறிய அளவில்தான் மனித விதை இருக்கிறது.


***  *** ***

மின்னலிழை 

மனித வித்தின் அளவை திருமூலர் கணக்கிட்டு சொல்கிறார்.

பசுவின் மயிர் ஒன்றை குறுக்காக வெட்டி. அதனை ஒரு லட்சம் பாகமாக பகுத்தால் வரும் ஒரு பகுதியின் அளவே மனித வித்தின் அளவு.

 திருமந்திரம் - 2011

மேவிய சீவன் வடிவது சொல்லிடில் 
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு 
மேவிய கூறது ஆயிரம் ஆயினால் 
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே.

                                           

எடுத்திருக்கும் அத்தனை பிறவிகளின் சரித்திரமும் அங்கே பதிந்திருக்கும். எடுக்கும் புது பிறவியிலும் அதன் தாக்கம் இருக்கும்.

வினாடிக்கு 1500 ஜீவ வித்துக்கள் மனித உடலில் உருவாகிறது என்று சொல்லும் அறிவியல், வெளியேறாத  ஜீவ வித்துக்கள் உடலிலே மீண்டும் கலந்துவிடும் என்கிறது. ஆனால், இது மீண்டும் உடலில் விதைக்கப்பட்டதாக கொள்ள முடியாது. ஏனெனில், இது பிறக்காத ஜீவ வித்துக்கள்.


***  ***  ***

விதையில்லாத மாங்கனியா? 

மனித வித்திலும் கனியும், விதையுமாக இரண்டு பரிமாணம் உள்ளது.

அன்ன வித்து, பிராண வித்து என இரண்டு அடுக்கை கொண்டது மனித விந்து.

 திருமந்திரம் - 1966

அன்னம் பிராணன் என்றுயார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் 
சொன்னமாம்  உருத்தோன்றும் எண் சித்தியாம் 
அன்னவர் எல்லாம் அழிவற  நின்றதே.

                                                            

தன்னுடைய உடலின் தேவையை அறிந்து அதற்கேற்ப உணவுண்டு, அன்னம், பிராணன் என்னும் இரு அடுக்கை கொண்ட வித்தினை வெற்றி கொள்ள முடிந்தவர்கள், தங்கத்தைப் போன்ற உடலும், அவர்தம் எண்ணங்கள் வெற்றி அடையப்பெற்று நீண்ட காலம் மண்ணில் வாழ்வார்கள்.

உண்ணும் உணவு அன்ன விந்துவை உடலில்  தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது. அதேபோல், உடலில் சேரும் பிராண சக்திக்கேற்ப பிராண விந்துவும் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது.


***  ***  ***

உயிர் வளர்த்தேனே 

நாம் உட்கொள்ளும் உணவு ஏழு வகையான தாதுக்களை உடலை சீராக வைத்துக்கொள்ள வழங்குகிறது. அதில் சக்தி [இரதம்], இரத்தம் மற்றும் சுக்கிலம் எனும் மூன்று தாதுக்கள் விந்துவை உற்பத்தி செய்கிறது. ஒரு புல்லின் நுனியில்  உள்ள பனியளவே  உருவாகும் இவ்விந்து நம் உடலில் கலந்திருக்கும்.

 திருமந்திரம் - 1934

இரதம் முதலான ஏழ்தாது  மூன்றில் 
உரிய தினத்தின் ஒரு புல்  பனிபோல் 
அரிய துளி  விந்துவாகும் ஏழ்மூன்றின் 
மருவிய விந்து வளரும் காயத்திலே.

                                            

வித்தினை அளவு முறை அறியாமல் வீணாக செலவிடும்போது, உடலின் பிராண சக்தி குறைந்து உடல்   தளர்ந்து போகிறது. அவ்வாறில்லாமல், வித்தின் தன்மை அறிந்து அதனை உடலிலே மீண்டும் விதைத்து வைத்துக்  கொள்வது உடலின்  உயிர் சக்தியை அதிகரிக்கும்.


***  ***  ***

வித்துவித்தான் தினை அறுப்பான்

விளைவு அறியாதவர்கள் வித்தினை வீணாக மோக இன்பத்திற்காக செலவு செய்பவர்கள். வித்தின் தன்மை உணர்ந்தவர்கள், இன்பத்திற்காக பெண்ணுடல் கலந்தாலும், வித்தினை கழிந்தோட செய்யாமல் ,  அதனை தன்  உடலிலே மீண்டும் விதைக்க முற்படுபவர்கள். இருவருமே வித்தினை செலவு செய்பவர்களாயினும், இரண்டாமவன் வித்தினை உடலில் விதைத்தவன் ஆகிறான்.

 திருமந்திரம் - 1964

வித்துக்குற்று உண்பான் விளைவு அறியாதவன் 
வித்துக்குற்று உண்ணாமல் வித்துச்சுட்டு உண்பவன் 
வித்துக்குற்று உண்பானில் வேறுஅலன் ஈற்றவன் 
வித்துக்குற்று உண்ணாமல் வித்துவித்தான் அன்றே.

                                                                          

ஆனால், உடலில் எப்படி விதைப்பது?

திருமந்திரம் - 1963

விந்துவும் நாதமும்மேவக் கனல் மூல 
வந்த அனல்மயிர் கால்தோறும் மன்னிடச் 
சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே 
விந்துவும் மாளும் மெய்க் காயத்தில் வித்திலே.
                                                                  

ஒளியும், ஒலியுமாக ஒன்றிணைந்த விந்துக்கனலும், மூலாக்னியில் வந்த கனலும் உடலில் அனைத்து உணர்வு மண்டலங்களில் படர்ந்து நிற்க, அகத்தின் விழிப்புணர்வு  முழுதும் சிவமாக மாறும்பொழுது, உடலில் சேமித்த வித்துவானது உடலில் உள்ள வித்தினுள் விதைக்கப்படுகிறது.

***  ***  ***

மோகம் கெட போகம் 

வித்தினை வீணடிக்காமல் உடலில் சேகரிப்பது என்பது ஒரு கலை.

பெண்ணுடன் தவிர்க்கமுடியாமல் மோகத்தினால் சேர்ந்தாலும், இன்ப உச்சத்தில் வித்தினை வெளியேற்றாமல் உறவு கொள்வார்கள் சிவ யோகிகள். இதுவே சிவ போகம் என்று அறியப்படுவது.

 திருமந்திரம் - 1960

யோகம் அவ்விந்து ஒழியா வகைபுணர்ந்து 
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குஉறாப் 
போகம் சிவபோகம் போகிநற் போகமாம் 
மோகம் கெடமுயங்கார் மூடர் மாதர்க்கே.

                                                   

மோகத்தினால் பெண்ணுடன் சேர்பவர்கள் தன் உயிர் சக்தியை இழக்கும்  மூடர்கள். மோகத்தினால் பெண்ணுடன் சேர்ந்து, இரண்டு உடல்கள் கலந்தாலும், அதனை யோகமாக செய்யும் சிவ யோகிகள், தங்கள் உயிர் சக்தியை பெண்ணிடம் செலுத்தாமல் தன்னுடலிலே தக்க வைத்துக்கொள்வார்கள். 

தேனில் ஊறிய பலாச்சுழை. வாய் மணக்க சுவைத்து மென்று, பின்னர்  விழுங்கக்கூடாது என்றால் அது எப்படி சாத்தியம். சிவ யோகிகளுக்கு சாத்தியமாகி இருக்கிறது.

***  ***  ***

பரியங்க யோகம் 

சிவபோகத்தை அடைந்தவர்களின் அங்கம் , குதிரையின் பலத்துக்கு ஒத்திருக்கும். மோகம் கெட பெண்ணுடன் கலவியில் இருப்பதற்கு, பரியங்க யோகம் என்னும் கலையையும் விளக்குகிறார் திருமூலர். உடலுறவின் மூலம்  இறைவனையே தரிசிக்கும் வழியும் இதுதான்.

திருமந்திரம் - 826 

போதத்தை உன்னவே போகாது வாயுவும் 
மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில் 
சூதொத்த மென் முலையாளும் நற்சூதனும் 
தாதில் குழைந்து தலை கண்டவாறே.

                                                                 

உறவின்போது தலைவனும், தலைவியும் மெய்ஞானத்தை உணர்வாக கொண்டு முயங்கவேண்டும். இந்த நிலையில் காம வாயுவான மேகத்தை போன்ற வெண்மையான  ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்தில் கலக்காது  உடலிலே தங்கிவிடும். இவ்வண்ணம் சூதாட்ட கருவிபோல் மயக்கும் முலைகளை உடைய பெண்ணும், கலவிக்காக உடம்பை இயக்குகின்ற ஆணும் இறை நிலையை தலையில் தரிசிப்பர்.

***  ***  ***

வானீர் அமுதம் 

உறவின்போது உடலில் சேகரித்த விந்தின் பயன் என்ன? 

சேகரித்த வித்து வீணாக வெளியேறாமல், திசை மாற்றி, புருவ மத்தியாகிய சந்திர மண்டலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். 

சேகரித்த  விந்துவை வற்றச்  செய்ய வேண்டும். மூலாதாரத்தில் இருந்து வெளிப்படும்  அனலில் விந்துவை வற்ற செய்து, சுழி முனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், புருவ மத்தியில் இருந்து அமுதம் பெருக்கெடுக்கும். சிவ யோகிகள் இதனையே உண்டு மகிழ்ந்திருப்பர்.

திருமந்திரம் - 1949

வற்ற அனலைக் கொழுவி மறித்தேற்றி 
துற்ற சுழிஅனல் சொருகிச்சுடர் உற்று 
முற்று மதியத்து அமுதை முறைமுறை 
செற்று உண்பவரே சிவயோகி யாரே.

                                          

சிவ யோகிகளுக்கு மட்டுமே சாத்தியமானது என்றால் இல்லற வாழ்வில் உள்ளவர்களுக்கு சாத்தியமில்லையா என்ற அச்சம் எழுவது இயல்பு. ஒன்றை நாம் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். சிவ யோகி என்று தனியாக தகுதி நிலை ஆய்வுகள் இல்லை. எனவே, மேற்கண்ட முறையில் தன் இணையாளுடன் இன்பம் காணும் எவருமே சிவ யோகியே!

இல்லறத்தாருக்கும் வானீர் அமுதம் பருக வாய்ப்பிருப்பதை நாம் தெரிந்து கொண்டு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால், நமக்கும் வானீர் விருந்து சாத்தியமே.

*** ***  ***

எரிதழலில் வித்து 

உறவின் போது சேகரித்த விந்துவை வற்ற செய்ய வேண்டும். பின்னர் அதனை நெற்றிப்புருவ மத்தியில்  கொண்டு செல்ல வேண்டும். பின்னர் குளிர செய்ய வேண்டும்.

முதலில் வித்தினை எப்படி வற்ற செய்வது என்று பார்க்கலாம்.

மூலாதாரத்தில் இருந்து வெளிப்படும் அனலைக்கொண்டு விந்துவை வற்ற செய்ய வேண்டும். இதற்கு பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுப்பயிற்சி அவசியம்.

மூச்சுப்பயிற்சியின் போது இடது நாசி வழியாக குளிர்ந்த காற்றும், வலது நாசி வழியாக வெப்பக்காற்றும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த வெப்பக்காற்று, பிராண விந்துவாகி, உடலில் சேகரித்து வைத்துள்ள விந்துவை எரிக்கும். இவ்வாறு எரிந்து  ஒளி வடிவம் பெரும் விந்துவானது அக்னி நாடி வழியாக புருவ மத்தியில் உள்ள சுழுமுனையை அடையும்.

குளிர்ச்சியான சுழுமுனை அனலில், அக்னி நாடி வழியாக வந்த ஒளி அலைகள், அமிர்தத்  துளிகளாக மாறும். 

திருமந்திரம் - 1951

அண்ணல் உடலாகி அவ்அனல் விந்துவும் 
மண்ணிடை மாய்க்கும் பிராணன் ஆம்விந்துவும் 
கண்ணும் கனல்இடைக் கட்டிக் கலந்துஎரிந்து 
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.

நீரை சுமந்த மேகம் வானத்தில் குளிரடைந்து மீண்டும் பூமிக்கே மழையாக பொழிவது போல், சுழுமுனை அடைந்த விந்து அமிர்தமாக மாறி அண்ணாக்கில் கசிய ஆரம்பிக்கும்.
                                                                     

*** *** ***

சுவாசக்காற்றே அமிர்த ஊற்று 

நாம் சுவாசிக்கும் காற்றானது, ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயுவை பிரதானமாக உடலுக்கு கொண்டுசெல்கிறது என்பதை அறிவோம். பிராண வாயுவை மட்டுமல்ல, அதனுடன் இன்னும் ஒன்பது வாயுக்களை சேர்த்து தசவாயுக்கள், என்னும் பத்து வகை வாயுக்களை  உடலுக்குள் செலுத்துகிறது என்கின்றனர் நம் சித்தர்கள்.

குறிப்பாக, அகத்தியர் தனது சௌமிய சாகரம் பாடல்களில் இதனை தெளிவாக சொல்கிறார். பத்து வாயுக்களையும் இரண்டாக பகுத்து, ஓரைந்து வாயுக்கள் வெப்பமேற்றும்  காற்றாகவும், மீதமைந்து குளிரேற்றும்  காற்றாகவும் உட்செல்கிறது என்கிறார்.

தச வாயுக்கள்:

1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 

6. நாகன்  7. கூர்மன்  8. கிரிகரன் 9. தேவதத்தன் 10. தனஞ்செயன்

வெப்பத்தன்மை கொண்ட ஐந்து வாயுக்கள்:

1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 

சௌமிய சாகரம் 

வளியான வாய்வினிட வழிதான் மைந்தா 
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு 
நெளியாத பிராணனுடன் அபானன் தானும் 
நிசமான உதானனுடன் சமானன் மைந்தா 
அளியாத வியானனுடன் ஐந்துமப்பா 
அரகரா தேய்வுடனே வாய்வு மாச்சு 
சுளியாத தேயு வாயுவைத்தான் கண்டால் 
சுகமாக பூத வாயுவைத் தான் கேளே. 

                                                    

குளிர்ந்த காற்றின் தன்மை கொண்ட ஐந்து வாயுக்கள்:

1. நாகன்  2. கூர்மன்  3. கிரிகரன் 4. தேவதத்தன் 5. தனஞ்செயன்

சௌமிய சாகரம் 

கேளப்பா நாகனொடு கூர்மன் மைந்தா 
கிரிகரனும் தேவதத்தன் தனஞ்செயனாம் ஐந்தும் 
ஆரப்பா ஐம்பூத வாயுவென்பார் 
ஆச்சரியந் தச வாய்வை அறிந்துகொள்ளு 
காலப்பா தசவாய்வை அறிந்துகொண்டு 
கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால் 
கோளப்பா ஒன்றுமில்லை எல்லாஞ் சித்தி 
குறிப்புடனே ஆகாச வழிதான் கேளே .

                                                           

தச வாயுக்களின் முக்கிய பணிகளாக, ஐம்புலன்களின் உணர்வு நிலையாக, சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்று சொன்னார்கள். கொட்டாவி, தும்மல், விழித்தல், இமைத்தல், கழிவுகளை வெளியேற்றும்  உணர்வு/தன்மை, விந்து பாய்ச்சுதல்  போன்ற செயல்களையும் இவைகளே காரணிகளாக  உள்ளன  என்பதையும் விளக்கினார்கள்.

மூச்சுப்பயிற்சியின் போது சூரிய நாடியில் வரும் வெப்ப வாயுவானது மூலாதார பிரணவ கனலுடன் கலந்து, கலவியின் போது  வெளியேறாமல் உடலில் தங்கிய விந்து மற்றும் சுரோணிதத்தை வற்ற செய்து அக்னி நாடியில் ஒளி அலைகளாக  சேர்க்கிறது. அக்னி நாடி இதனை சுழிமுனைக்கு எடுத்து சென்று அமிர்தமாக மாற்றுகிறது. இப்படி பெருக்கெடுக்கும் அமிர்தத்தை சிவயோகியர் உண்டு சிவ போகத்தில் திளைத்திருப்பர்.

விந்து ஜெயம் என்பது சாதாரண காரியமல்ல. 

இல்லறத்தார், துறவறத்தார், ரிஷிகள்   மற்றும் மானிடராய் பிறப்பெடுத்த தேவர்கள் என்று யாருமே வெல்ல முடியாதது பெண்ணாசை. இரண்டு உடல்கள் கலக்கும் நேரத்தில், மோகத்தில் வித்தினை செலுத்தாமல் நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமா என்றால்  அவரவர் சோதித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

அது சிவ யோகிகளுக்கு  சாத்தியப்பட்டிருக்கலாம். நாமும் சிவ யோகி ஆவதில் எந்த தடையும் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

*** *** ***

பெண் விந்து ஜெயம் 

ஆண்களுக்கு  மட்டும் விந்து ஜெயம் பற்றி கூறி இருக்கிறார்கள். பெண்களுக்கு இதில் பங்கில்லையா? அவர்கள் ஆண்கள் பெரும் பயனை அடையமுடியாதா  என்று கேட்க தோன்றுகிறதில்லையா?

சித்தர்கள், ஞானிகள், குருமார்கள் என அனைவரும் பெண்களை மட்டம் தட்டி எழுதுகிறார்கள்.  'காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி' - என்று பெண்களை பேராசை பிடித்தவர்களாகவும், தங்கள் உடல் அழகால் ஆண்களின் மனதை திசை மாற்றுபவர்கள் என்றும், அயல் வளவில் மாற்றானுடன் உறங்கி கணவனுடன் வாழ்பவள் என்றும் பல வழிகளில் கேவலமாக எழுதி விட்டு சென்றிருக்கிறார்கள்.

பெண்ணைப்பற்றி திருமூலர் சொல்வதைப்பார்ப்போம்.

 திருமந்திரம் - 180 

விரும்புவர் முன்என்னை  மெல்லியல் மாதர் 
கரும்பு  தகர்த்துக்  கடைக்கொண்ட நீர்போல் 
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்  
கரும்பொத்துக்  காஞ்சிரம்  காயும் ஒத்தேனே.

                                                                

இளமை நிலையாமை பற்றி விளக்கும்போது, பெண்கள் ஆண்களை உயிருக்கு உயிராக காதலிப்பதும், இளமை நீங்கியதும் அவர்கள் விலகுவதையும் விளக்கவே இப்பாடல். இங்கே இளமை நீங்குவது என்பது, தான் இன்புற்று தன் இணையையும்  இன்புற  வைக்கும் உடல் ஆற்றல் நீங்குவது என்றுதான் கொள்ளவேண்டும்.  ஏனெனில், பட்டத்தரசிகள் கூட வயதில் முதிர்ந்த ரிஷிகளை அடைந்துதான் பாண்டவர்களும், துரியோதன  சகோதரர்களும் பெற்றெடுத்தார்கள்  என்பது புராணம் சொல்லும் பாடம் நமக்கு. இன்றைக்கும், சாமியார் வேடம் போட்டு எழுபத்து நான்கு வயதில் பதினாறு வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து சட்டத்தின் பிடியில் சிக்கித்திணறும் போலிகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே வயது என்பது இளமையை தீர்மானிக்கவில்லை. விந்துவின் ஆற்றலே இளமையை தீர்மானித்து வெற்றி கொள்கிறது.

பெண்களும், ஆண்களுக்கு இணையாக விந்து ஜெயம் கொள்ளும் வழிதனை காட்டுகிறார்.

திருமந்திரம் - 815 

பொழிந்த இருவெள்ளி பொன்மண் அடையில்
வழிந்து உள்இருந்து  வான்முதல் அங்குக் 
கழிந்தது போகாமல் காக்க வல்லார்க்குக் 
கொழுந்துஅது  வாகும் குணம்அது தானே.
                                                           

[வெள்ளி - விந்து, ஆணின் வித்து;  பொன் - சுரோணிதம், பெண்ணின் வித்து]

மண்ணாலான உடலில் விந்துவும், சுரோணிதம் எனும் இரு வித்துக்கள் விளைந்த வண்ணம் உள்ளது. அதனை சந்திர மண்டலமான நெற்றிக்கு எடுத்து செல்ல வேண்டும். உடலில் இருந்து வெள்ளியும்/பொன்னும்  கழிந்து வீணாகாமல் காக்க முடிபவர்களுக்கு அதுவே உடலினை காக்கும் மூலிகை மருந்தாகும்.

 திருமந்திரம் 1956

மேலா  நிலத்தெழு விந்துவும் நாதமும்                                                                                                     கோலால் நடத்திக்  குறிவழியே சென்று                                                                                                     பாலாம் அமிர்துண்டு பற்றறப்  பற்றினால்                                                                                           மாலானது மாள மாளும் அவ் விந்துவே.                                                                                                                                            

மூல அனலில் வற்றிய வித்துவை, சுழினைக்கோலை நடத்தி செல்லும்  கருவியாக  கொண்டு,  அக்னி நாடி வழியே நெற்றிக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கே வித்துவானது அழிந்து  அமிர்தப்பாலாக மாறி நிற்கும். இதனை அருந்தி, அதன்மேல் பற்றில்லாமல்  அவ்வழியைப்பற்றினால், மானிட வாழ்வில் உண்டாகும் மாயைகள் அனைத்தும் மாண்டுவிடும். விந்து மறைந்து உடலில் விதைக்கப்பட்டு விடும்.

இதற்கு பிராணாயாம பயிற்சி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

பிராணாயாம பயிற்சியின் போது  எட்டு நிலைகள் உண்டாகும்.

1. உயிரணுக்கள் உடலின் மத்தியிலே தங்கி, வற்றி  வியர்வையாக மாறும். 

2. உயிரணுக்கள் கீழ் நோக்கி செல்லும் உந்துதல்  இழந்து தங்கி விடும்.

3. ஒளி அலைகளாக மாறுவது மூன்றாம் நிலை.

4. உடல் லேசாக மாறும்.

5. பருவத்து பெண்ணினைப்போல் உடல் மெருகு பெரும்.

6. குண்டலினி மேலே உயரும்.

7. உடல் வானத்தில் பறக்கக்கூடிய நிலை உண்டாகும்.

8. தூரத்தில் உள்ள பொருட்களைப்பார்க்க முடியும். 

இவ்வாறு உயிரணுக்கள் மீண்டும் உடலில் கலப்பதால், தலையில் எட்டு திசைகளில் உண்டாகும் ஒலிதனை கேட்கலாம். கர்ம வினைகள் நீங்கி, நாடிகள் சுத்தி அடையும்.

*** *** ***

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் 

வித்துவானது தூய வெள்ளியை போன்ற வெண்மையும், அதனுள்ளே ஓம் என்னும் பிரணவ ஒலியும் சீராக ஒலித்துக்கொண்டிருக்கும்.  இது உடலின் உள்ளும், வெளியிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

திருமந்திரம் - 1929 

புறம்அகம் எங்கும் புகுந்தொளிர் விந்து 
நிறம்அது வெண்மை நிகழ்நாதம் செம்மை 
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் 
திறனொடு வீடளிக்கும் செயல் கொண்டே.

                                                       

வெண்மையான விந்துவில் சீரான பிரணவ நாதம் ஒலிக்கும் உடலின் ஆயுளும் கூடி நிற்கும். இறை அருளால் வீடு பேரும் கிட்டும்.

எதற்கு இந்த வழி நமக்கு சொல்லப்பட்டு உள்ளது? 

இல்லறத்தார் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்க்கையின் பாதையை கடப்பதிலே செலவழித்து விடுகிறோம். தன்னைப்பற்றி சிந்திக்கும் காலம் வரும்போது, உடலில் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறோம்.

திருமந்திரம் - 2023

ஆக மதத்தன ஐந்து களிறுஉள
ஆக மதத் தறியோடு அணைகின்றில 
பாகனும் எய்த்து  அவைதாமும் இளைத்தபின் 
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.

                                                            

ஐம்புலன்கள் என்னும் யானைகள், கட்டுக்கடங்காமல் ஆடியதால், புலன்கள் செயலிழந்து, பாகனின் உடலும் ஓய்ந்தபின் அவனுக்கு  யோக வழிகளில் நடப்பது என்பது சாத்தியமில்லை. எனவே, உடலில் ஆரோக்கியம் உள்ள போதே நம்மைப்பற்றி சிந்தித்து, உடலையும் மனதினையும் தொடர்ந்து நல்ல நிலையில் வைத்திருக்க முயல்வோம்.

வித்தினை உடலில் விதைக்கும் கலையை முயன்று பார்க்கலாம்.

முயற்சி திருவினை ஆக்கும்.

திருமூலர் காட்டும் மனித குலத்துக்கான, குறிப்பாக இல்லறத்தாருக்கு வழங்கும்  மாபெரும் வழிகாட்டுதல் இது.

***  ***  *** 




வீர. நாகராஜ் 

என்னைப்பற்றி 

தமிழ் கற்பதில் ஆர்வமானவன். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இன்றும் அறிவியல் கண்டறியாத உண்மைகளை, தனது பாடல்களின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்த   திருமூலர் எனக்கொரு ஆச்சர்யம்.

'வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதையென்ன?' - தெளிவாக்கும் திருமந்திரம் தமிழின் பொக்கிஷம்.

நான் புரிந்து கொண்டவகையில் எழுதி உள்ளேன். மாற்று பொருள் இருப்பினும் ஏற்பதில் எனக்கு மகிழ்ச்சியே! 

உள்ளே 


*** ***  ***

உடம்பினுள்ளே உத்தமன் 

மனிதனின் ஆன்மீக முன்னெடுப்பிற்கு முழு முதல் ஆதாரமாக இருப்பது அவனது உடல். உடலின் ஆரோக்கியமே மன ஆரோக்கியம். மனம் அமைதியாக இருக்கும் அளவில் மட்டுமே ஆன்மீக வழிகளில் முன்னேற்றம் காணலாம்.

எனவே, உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது அடிப்படை தேவைகளில் தலையானது.

திருமந்திரம் - 725

உடம்பினை  முன்னம்  இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் 
உடம்பினுளே உத்தமன் கோயில் கொண்டானென்று 
உடம்பினை யான்இருந்து  ஓம்புகின் றேனே.  

                                                            


வித்தினை எரிக்கும் பட்சத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்காகவும், அது செல்லும் பாதையை செப்பனிட்டு இலக்கை அடையவும் வழி சொல்லி இருப்பதை பார்ப்போம்.

காயகற்ப பயிற்சியின் போதும், வித்தினை மீண்டும் விதைக்கும் முயற்சியின் போதும் மூலாதாரத்தில் வெப்பம் மிகுதியாக உண்டாகும். இதனால் பலவித மூல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. 

வெப்பத்தை சீராக்க அகஸ்தியர் சொல்லும் எளிய இயற்கை வழிதனை பார்ப்போம்.

  

மூல சுத்தி 

ஊதையிலே துன்பமென்ற வினைகள் நீங்கும் 
        ஊதுகொண்ட நஞ்சதுவும் உள்கொள் ளாது
போதையிலே மூலமதிற் காந்தி யுண்டாம் 
        பொருந்திநின்ற காந்தியிலே கடுப்பு கண்டால்
ஆதரவாய் கத்தாழஞ் சாறு வாங்கி 
        அதுக்குநிகர் ஏரண்டத் தயிலம் விட்டுச்
சாதகமாய் நடுவிரலில் தோய்த்துக் கொண்டு 
        தன்மையுடன் மூலமதில் சுழத்தி யாட்டே.
860

   

[சுழுனை நின்று ஓம் என்று] ஊதையிலே


ஆட்டையிலே துர்மலங்கள் விஷநீ ரெல்லாம்
        அப்பனே கீழ்நோக்கி அகன்று போகும் 
நாட்டையிலே பூரணத்தை நாடிச் செல்லு
        நடுக்கமுடன் மயக்கங்கண் டாலமுரி கொள்ளு
மூட்டையிலே பசிதாகங் கண்டால் மைந்தா
        முறையோடே பாலுடனே அமுது கொள்ளு 
தாட்டிகமாய்  முன்போலே அமுரி கொள்ளு 
        தனிமிளகு போயமுரி தன்னிற் கொள்ளே. 861 


அமுரி - சிறுநீர் 


கொள்ளையிலே கபநீர்கள் கழன்று  போகும் 
        கொடிதான சூட்டுடனே மயக்கங் கண்டால் 
அல்லவே சொல்லுகிறேன் மைந்தா கேளு 
        அப்போதே மூதண்டக் கிழாயங் கேளு 
செல்லவே அந்திசந்தி யாறு வேளை 
        தீர்க்கமுடன் கொண்டிடவே மேகம் போகும் 
சொல்லவொண்ணாச் சூட்டுடனே மேகந்  தீர்ந்தால் 
        சுருதியுள்ள வாசியது  துலங்கும் பாரே. 862

மூதண்டக் கிழாய - ஒரு கைப்பிடி அருகம்புல்லை ஒரு லிட்டர் நீரில் கொதிக்க விடவும். 25 கிராம் அளவு மிளகு சேர்க்கவும். பாதியாக சுண்ட வைக்கவும். இறுதியாக 10 கிராம் வெண்ணை போட்டு இறக்கி வையுங்கள். இதை மூன்று நாளைக்கு, காலை, மாலை என ஆறு வேளை அருந்தவும். மேகம் -  வாய், பிறப்புறுப்பு, குதம் இவற்றில் தோன்றும் தொற்று நோய் .

சிலருக்கு, இயல்பாகவே கபம் சம்பத்தப்பட்ட நோய்கள் இருக்கும். இதுவும் நம் வித்தினை விதைக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கலாம். அதற்கும் அகஸ்தியர் காட்டும் இயற்கை முறை வைத்தியம் இதோ!

கபசத்துரு கரிசாலை நெய் 

தானென்ற சுழுனை வளி  ஏறச்
        சாதகமாய் இன்னமொரு பாகங் கேளு  
வீணென்ற கபமகல மைந்தா கேளு 
        விபரமுடன் கரிசாலைச் சாறு வாங்கிக்  
கோனென்ற குருவருளால் ஆவின் நெய்யைக்
        கூர்மையுடன் இடைசரியாய்க்  கலந்து காய்ச்சி
நானென்ற ஆணவத்தை யகலத் தள்ளி 
        நன்மையுடன் நெய்யதனை வடித்துக் கொள்ளே. 1113

கரிசாலை - கரிசிலாங்கண்ணி      ஆவின் நெய்  - பசுவின் நெய்      இடைசரியாய் - சம அளவில் 



வடித்ததொரு நெய்யதனை மைந்தா கேளு 
        மார்க்கமுடன் தற்சனையு மத்திமையுங் கூட்டிக் 
கடுத்ததொரு நெய்யதனைத் தொட்டு நீயும் 
        கண்டமதிற் சுத்திவிடு கபநீ ரெல்லாம்
தொடுத்துமிகத் தான் வடித்துசுத்த மாகும்
        சுத்தமுடன் மண்டலம்நீ தொகுத்துப் பார்த்தால்
பிடித்தகபக்   கட்டறுத்து  ஆறா தாரம்
        பெரிதான தூலமது சூட்ச மாச்சே. 1114    

தற்சனை - ஆள்காட்டி விரல்  மத்திமை - நடு விரல்  கண்டம் - கழுத்து   மண்டலம் - 48 நாட்கள் [சித்த மருத்துவப்படி]  



ஆச்சப்பா சூட்சமதாய் இருந்துகொண்டு 
        அப்பனே கரிசாலை நெய்யில் மைந்தா 
பாச்சப்பா பெருவிரலில் தோய்த்து அந்தப் 
        பதிவான அண்ணாக்கைப் பதிவாய்ச் சுத்து 
காச்சப்பா  இப்படியே  பத்து விசை சுத்து
        கபாடமதில் நின்ற கபங்  கழன்று போகும் 
மூச்சப்பா ஒடுங்கிநின்ற அண்ட வாசல் 
        மூடிநின்ற திரைய கன்று வழிசெல் வாரே. 1115

அண்ணாக்கு - உள் நாக்கு தொட்டுக்கொண்டிருக்கும் மேற்பகுதி 

இதனுடன் இன்னொரு வழியையும் சொல்கிறார் அகஸ்தியர்.

குமரி திரிகடுகு லேகியம் 

தானான மவுனமதுக் குறுதி யான 
        தன்மையுள்ள கற்பமொன்று சொல்லக் கேளு 
தேனான கத்தாழஞ் சோறெ டுத்துத்
        தீர்க்கமுடன் தான்கழுவிச்  செம்மை யாக  
ஊனான திரிகடுகைப் பொடித்து மைந்தா 
        உத்தமனே தானெடுத்து வைத்துக் கொண்டு 

கோனான சத்குருவை தியானம் பண்ணிக் 
        குருவான கற்பமென்று குவிந்து போற்றே. 1107   

கதிரிகடுகு - சுக்கு  மிளகு, திப்பிலி

போற்றிமனப் பூரணமாய் மைந்தா நீயும் 
        புகழான குமரிதிரி கடுகு மொன்றாய்ப்
பார்த்திபனே பீங்கான்தன்   தாளி சேர்த்துப் 
        பத்தியுடன் தேனதனை  பதிவாய் விட்டுச்
சேர்த்துநன்றாய்த் தான்கிளரி  ரவியில் மைந்தா 
        தீர்க்கமுடன் நவநாள்தான் வைத்தெ டுத்து 
ஆத்துமத்தின் செயலறிந்து அந்தி சந்தி 
        அரகரா மண்டலமாய் கொண்டு தேறே.  1108

குமரி - கற்றாழை    ரவி - சூரியன்  நவ - ஒன்பது  அந்தி சந்தி - காலை மாலை 

உடம்பினுள்ளே உத்தமன் குடி கொண்டானென்று மனதில் கொண்டு உடம்பினை நாம் போற்றுவோம்.

***  ***  ***


நீரினுள் காற்றை ஒளித்தற்று 

காற்றினை கண்ணால் கண்டவர் உண்டோ?

காற்றினை நீரினுள் ஒளித்து வைக்க முடியுமா? 

முடியாதுதானே? 

அவ்வளவு அரிதானது வித்தினை அது விளைந்த மரத்திலே விதைப்பேன் என்பது.

ஆனால், நீரினை காற்றில் ஒளித்து வைக்க முடியுமா?

முடியும். 

நீரைத்தழுவும் ஒவ்வொரு முறையும் தன்னுள் தண்ணீரை முகர்ந்து செல்கிறது காற்று. வெப்பம் கூட கூட, நீர் காற்றுக்குள் வேகமாக சங்கமமாகிறது. மேகமாகிறது. மேகக்கூட்டமாகிறது.

அப்படியானால், மேகத்தை பார்க்க முடிந்தவர்கள், நீர் சுமந்த காற்றினை கண்டவர்கள்தானே.

சூல் கொண்ட மேகங்கள்  மழையாக, வானீராக  மீண்டும் நிலத்தில் சங்கமிக்கிறது.

இதே சூத்திரம்தான் மனித உடலுக்குள்ளும் நடக்கிறது. 

பிராணாயாமத்தின் போது, உடலில் சேகரிக்கப்பட்ட  வித்து எரிக்கப்பட்டு சுழு முனைக்கு கொண்டு  செல்லப்படுகிறது. அங்கே, துரியாதீத தவத்தின் அருளால், சூல் கொண்டு அமிர்தமாக அண்ணாக்கில் கசிகிறது.

நீரினில் காற்றை ஒளித்தால் என்ன? காற்றினில் நீரை ஒளித்தால் என்ன?

நமக்கு தேவை வித்தினில் அதை விளைந்த மரத்திலே விதைப்பது. 

முயற்சி திருவினை ஆக்கட்டும்.

*** ***  ***

போகர் 7000

உண்மையெட்டு பருவமுண்டு, பிராணாயத்தி லொளியாமல்சொல்‌லுகிறேன் வந்து கேளு, வெண்மை மத்தி நின்று முத்தி வேர்வையாகு மிக்கநின்ற  தம்பிக்கும்சண்டாம்பட்சம்‌,  தின்மையற்ப ற தீபமர மூன்றாம் பட்சம்செடந்  தானும்லெகுவாகும்‌ நாலாம்பட்சம்‌, பெண்மையொத்து பிசகாசிக்கு மஞ்சாம்பட்சம்‌ பேரானகுண்டலி மேலாறிலாமே.

ஆறவே வாகாய கெவுனமார்க்க மதிகமாந்‌ தூரதிஷ்டிய றியப்பண்‌ ணும்‌, ஏற வேயெ ட்டினுட பெருமைகேளு ஏற்றமாங்கேசரத்தில்‌தி சை நாதங்கள்‌, நாறவே நல்வினையுந்  தீவி னையும்நீறாம நயந்த பின்பு நாடியுத்தி தானுமாகும், ஊறவே காமப்பாலுடம்போடே கலக்கு முவந்துமே பிராணாயமுறைத்துப்பாரே.


பொருள்:

பிராணாயாமத்தினால் எட்டு நிலைகள் உண்டாகும்.

1. உயிரணுக்கள் உடலின் மத்தியிலே தங்கி, வற்றி  வியர்வையாக மாறும். 

2. உயிரணுக்கள் கீழ் நோக்கி செல்லும் உந்துதல்  இழந்து தங்கி விடும்.

3. ஒளி அலைகளாக மாறுவது மூன்றாம் நிலை.

4. உடல் லேசாக மாறும்.

5. பருவத்து பெண்ணினைப்போல் உடல் மெருகு பெரும்.

6. குண்டலினி மேலே உயரும்.

7. உடல் வானத்தில் பறக்கக்கூடிய நிலை உண்டாகும்.

8. தூரத்தில் உள்ள பொருட்களைப்பார்க்க முடியும். 


இவ்வாறு உயிரணுக்கள் மீண்டும் உடலில் கலப்பதால், தலையில் எட்டு திசைகளில் உண்டாகும் ஒலிதனை கேட்கலாம். கர்ம வினைகள் நீங்கி, நாடிகள் சுத்தி அடையும்.



Thursday, April 21, 2022

அறம் செய விரும்பு


அறம் செய விரும்பு 

தருமம் செய்யவும் விருப்பத்துடன். இதைத்தான் நமக்கு சொல்லி தந்தார்கள்.

ஆனால்,

 அறம் என்றால் என்ன?

அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. அறம் என்ற சொல்லின் பொருள் என்ன? ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.

மேலும் படிக்க கீழ்கண்ட இணைய பக்கத்திற்கு செல்லவும்:

 https://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012111.htm


அறம் எனப்படுவது நியம பண்புகளை வாழ்வின் வழியாக கொண்டு இயமத்திடை நிற்றல் ஆகும்.

நியம பண்புகள்:

1. தூய்மை  - உள்ளத்தில் தூய்மை 

2. அருள்  - கருணை உள்ளம் 

3. ஊண் சுருக்கம் - அளவறிந்து உண்ணல் 

4. பொறை  - பொறுமையாக இருத்தல் 

5. செவ்வை  - நேர்மையுடன் நடத்தல்  

6. வாய்மை - உண்மை பேசுதல் 

7. நிலைமை - நடுவு நிலை நிற்றல் 

8. காமம் - அளவற்ற இச்சை  

9. களவு - பிறர்  பொருளை அபகரித்தல்   

10. கொலை - உயிர்களை கொல்லுதல்


தூய்மை  அருள்ஊண் சுருக்கம் பொறை  செவ்வை    
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றுஇவை 
காமம் களவு கொலைஎனக்  காண்பவை 
நேமி ஈர்ஐந்து நியமத்தன் ஆமே.

                                                                        - திருமந்திரம் 556


இயமம்  எனப்படுபவை,

1. கொல்லான்  - பிற உயிர்களை கொல்ல  மாட்டான் 

2. பொய் கூறான் - உண்மைக்கு புறம்பாக பேச மாட்டான் 

3. களவிலான்  - பிறர் பொருள்களை கவர மாட்டான் 

4. எண்குணன் - தன் நல்ல  எண்ணம் போன்ற குணத்தை கொண்டவன் 

5. நல்லான் - பேசவும், பழகவும்  நல்லவன் 

6. அடக்கம் உடையான் - அடக்கத்துடன் நடந்து கொள்பவன் 

7. நடுச்செய்ய வல்லான்  - பிரச்சனைகளை  ஆராய்ந்து தீர்ப்பு சொல்பவன் 

8. பகுந்துண்பான் - தனக்கு கிடைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துண்பவன் 

9. மாசிலான் - குற்றமற்றவன் 

10. கள் [இல்லான்] - மது அருந்தாதவன்  

11. காமம் இல்லான் - மித மிஞ்சிய இச்சைகளை வளர்த்துக்கொள்ளாதவன் 

 

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன் 
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய 
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள்காமம் 
இல்லான் இயமத் திடைநின்  றானே.

                                                                              - திருமந்திரம் 554


திருக்குறளில் உள்ள அறன் வலியுறுத்தல் [31-40] பாடல்கள், மேற்குறிப்பிட்ட பொருளுடன் விளங்கிக்கொள்ள சிறப்பாக  உள்ளது.

அறவழியில் வாழ்பவனுக்கு, பொறாமை, பேராவல் அதாவது காமம், கோபம் கொண்டு வெகுண்டெழுதல் மற்றும் கடு மையான வார்த்தைகளை கொண்டு பேசுதல் அவன் அறவாழ்வின் எதிரிகளாகும். 

அழுக்காறவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்ற தறம்.

                                                                                                      - குறள் 35

பேசாமல் மனதளவில் எந்த குற்ற எண்ணம் இல்லாமல் இருப்பதே தலை சிறந்த அறமாகும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற.

                                                                                                       - குறள் 34






Saturday, April 16, 2022

தெய்வம் தந்த வீடு

 



அம்மா என்னும் 
தெய்வம் தந்த வீடு 
நான் 

பவானி ஆறு.

ஆற்றங்கரையில் புல்லை அறுத்துக்கொண்டிருக்கும் அம்மாவை பார்க்கிறேன்.

ஏனோ இந்த எண்ணம் மனதில், அம்மா இல்லாத உலகம் எப்படி இருக்கும்? என்னால் அதை தாங்கிக்கொண்டிருக்க முடியுமா?

என்னுடைய முழு உலகம்  அம்மா மட்டுமே! 

ஆனால், அம்மாவின் உலகம் மட்டும்  ஏன் இப்படி இருக்கிறது.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காட்டிற்கு சென்று விறகு சேகரிக்கிறாள். மதிய உணவு சமையலின்போதே, நெசவு செய்வதற்கான துணை வேலைகளை செய்கிறாள். மதியமும், மாலையும் அடுத்தவர்  வீட்டு நெசவு தொழிலுக்கு துணை வேலை செய்கிறாள். கூடவே, வீட்டில் இருக்கும் பால் தரும் எருமைக்கு தேவையான நீர், புல்லை கொடுக்கிறாள். வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து, தன்னுடைய ஏழு குழந்தைகளுக்கான தேவைகளை புரிந்து செய்கிறாள். எத்தனை மணிக்கு தூங்க செல்வாள் என்று எனக்கு தெரியாது.

கணவனின் ஆதரவில்லாமல், சரியான நிதி ஆதாரமில்லாமல், சொந்த வீடில்லாமல்  இது எப்படி சாத்தியம்?

பால்யமணம் புரிந்து தனித்திருந்த பெரியம்மா எங்களுக்கு வீட்டை கொடுத்து, ஆதரவாக இருந்தது மலையளவு பலம் அப்போது.

பன்னிரண்டாவது வயதில், பழத்தோட்டம் பேருந்து நிறுத்தத்தில், என்னை அரசு விடுதியில் தங்கி படிக்க அனுப்பும்போது அம்மாவின் கண்களில் வழிந்தது  கண்ணீர். இன்றைக்கு அந்த கண்ணீருக்கு ஆயிரம் பொருள் சொல்ல முடியும் என்னால். அன்றைக்கு, படிக்கத்தானே போகிறேன், எதற்கு அழணும் என்றே நினைத்தேன்.

அரசு விடுதி.

பிற்படுத்தப்பட்டோர் வரிசையில் போராடி எனக்கும் ஓரிடம் கிடைத்தது. படிப்பில் போராட வேண்டியதாக இல்லை. வகுப்பில் முதல் இடம் என்பது நான் முயற்சிகள் செய்யாமலே கிடைத்தது, ஆச்சர்யம். அதுவரை ஆறாம் வகுப்பு வரை  நான் படித்த பள்ளியில், முதலிடம் பிடிக்க கடின முயற்சி தேவைப்பட்டது. இங்கோ, என்னுடன் படித்த மாணவர்கள், வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அதிகமாக படிப்பை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்பதும் உண்மை.

ஆனால், அதிகம் போராட வேண்டி இருந்தது பசி இல்லாமல் இருப்பதற்கு.  அதைவிட கொடுமை, சக மாணவர்களின் சகிக்க முடியாத பழக்க வழக்கங்கள். இரண்டும்கெட்டான் பருவத்தில் கொடுக்கப்பட்ட தகாத புத்தகங்கள். இயற்கையாக உடலில் ஏற்பட்ட வளர்ச்சியின்  மாற்றங்கள்.

என் உலகம் அம்மாவை விட்டு தனியாக வளர ஆரம்பித்தது.

பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி நாட்கள்.

மீண்டும் அம்மாவுடன்.

வறுமை தேவதையின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது வீடு. இரு சகோதரர்களின் சொற்ப வருமானம். அதுவும், வேலை நிறுத்தம், அது இதுவென்று முழுமையாக வீடு வந்து சேராது. 

அம்மாவின் உழைப்பு நின்றபாடில்லை; கொஞ்சம் குறைந்திருந்தது. இயலாமையில் வரும்  வார்த்தைகளின் வெப்பம் அதிகம் என்னை சுடும்.

எதற்கு எங்களை பெற்றாய்?

யாரும் தன் அம்மாவிடம் கேட்டுவிடக்கூடாத கேள்வி. கேட்டு விட்டேன். விவரமறிந்து கேட்டேனா அல்லது வெறுப்பின் உச்சியில் இருந்து கேட்டேனா தெரியாது. இன்றைக்கும் என்னை கூனிக்குறுக வைக்கிறது அந்த வார்த்தைகள்.

வேலையில்லாப்பட்டதாரி.

கல்லூரி முடித்து ஒன்றரை வருடங்கள். யார் எதை பேசினாலும், என்னை நோக்கியே  பேசுவதாக அர்த்தம் வருகிறது. வாழ்க்கையே அர்த்தம் அற்றதாக தோன்றும்போது, உறவுகள் அனைத்தும் கசப்புதானே.

ஒரு வாரம் முழுக்க உண்ணா நோன்பு, உள்ளுக்குள் அழுதுகொண்டே. அம்மாவுக்கு தெரியும் நான் பண்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று.

என் வெறுமைக்குள் அம்மாவும் அன்று.

வாழ்வில் வசந்தம் வரவும், வளரவும் செய்தது வங்கிப்பணி. இருபது ஆண்டுகள் ஓடி மறைந்தது.

திரும்பிப்பார்க்கிறேன்.

அம்மா தனிமரம்.

அதையே வரமாக ஏற்றுக்கொண்டார்கள். வேடந்தாங்கல் பறவைகளாக பெற்றவைகள் மற்றும் பெற்றவைகள் பெற்றவைகள். வருவார்கள், போவார்கள் உலகெங்கிலிருந்தும்.

மீண்டும் இருபது ஆண்டுகள் ஓடி மறைந்தது. ஞாயிற்று கிழமைகளில் அம்மாவுடன் மகிழ்வுடன்.

'எல்லாம் வெறுத்துவிட்டது, இந்த மீன் சாப்பிடுவதில் மட்டும் ஆசை இருக்கிறது.'

அம்மாவின் நினைவாக மீன் படையலிட்டு, அம்மாவை என் கண்கண்ட தெய்வமாக வணங்குகிறேன்.

[17-04-2018 என்னையும், மண்ணையும் விட்டு பிரிந்த அம்மாவின் நினைவாக]

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள 
அத்துள்ளே  வாழும் அரசரும் அஞ்சுள்ள 
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் 
மத்தளி  மண்ணாய்  மயங்கிய வாறே.

                                                                                                         - திருமந்திரம் 189

மத்தளம் போன்ற உடல் ஒன்றிருக்கிறது. அந்த மத்தளத்தை வாசிக்கும் தாளங்களாக இடது மற்றும் வலது சுவாசம் உள்ளது. அந்த உடலை ஐம்புலன்கள் அரசாட்சி செய்கின்றது. அரசராக உயிர் இருக்கிறது. அரசன் நீங்கி விட்டால், மண் வளர்த்த  அந்த உடல் மண்ணிலே மறைந்துவிடுகிறது..

பிறந்ததொன்று நிலைப்பதில்லை. யாரும் இதில் விதி விலக்கில்லை.



 

Wednesday, March 9, 2022

முக்கனல்

முக்கனல் 

புதிய சூரியனின் 
பார்வையிலே..
உலகம் விழித்துக்கொண்ட
வேளையிலே..    


இந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?

அதிகாலை நடைப்பயிற்சி செய்யும்போது கிடைக்கக்கூடியது.

காலை ஆறுமணி வாக்கில் பூங்காற்று வீசும். அதுவும் ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் மட்டுமே. அதை தென்றல் என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது. அதனினும் மென்மை மற்றும் மேன்மையானது.

நடைப்பயிற்சியில் ஏற்படும் களைப்பை களைந்து உடனடி உற்சாகத்தை தரக்கூடியது. ஒவ்வொரு நாளும் இந்த அனுபவத்திற்காகவே காலை நடைப்பயிற்சியில் எனக்கு ஆர்வம் அதிகம்.

லேசாக வியர்த்திருக்கும் உடலுக்கு, அந்த காலை இளங்காற்று சுகமாக இருக்கும்.

உழைப்பில் ஈடுபடும்போதோ, வெளியில் வெப்பம் அதிகமானாலோ  வியர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றுகிறது.

இது எதனால், எப்படி  என்று பார்ப்போம்.

சாதாரணமாக உடலின் வெப்ப நிலை சற்றேறக்குறைய 98.6 F டிகிரி அல்லது 36.4 C  டிகிரி அளவில் இருக்கும். இந்த உடலின் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டால் உடல் தன் வெப்ப சமனத்தன்மை பெறுவதற்கு சில காரியங்களை செய்யும். அவற்றில் ஒன்று வியர்வை.

அது தவறும் பட்சத்தில், அதிக வெப்ப நிலை என்பது காய்ச்சலாகவும், குறைந்த வெப்ப நிலை  உடலில் ஜன்னியாகவும் அறிகிறோம்.

சரி, உடலின் வெப்பம், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை சீராக எப்படி இருக்கிறது. வயிற்றில் [மணிப்பூரகம்] வெப்பம் உண்டாகிறதென்றால், உச்சந்தலைக்கோ, உள்ளங்காலுக்கோ செல்வதற்குள் குளிர்ந்து விடாதோ?

அவ்வண்ணமே, சூரியனில் உண்டாகும் வெப்பம், சூரியக்கதிர்களாக உறைபனிக்கும் மிகக்குறைந்த வெப்ப மண்டலத்தை கடந்தும் பூமிக்கு எப்படி வெப்பம் கொடுக்கிறது. விமானப்பயணத்தின்போது கவனித்திருக்கலாம், விமானம் உயரப்பறக்கும்போது, வெளி வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் கீழே இருக்கும். இந்த வெப்ப நிலை உறைபனிக்கும் குறைவானது. இக்குளிர் வெளியை கடக்கும்போது  குளிர்வடைந்த சூரியக்கதிர்கள், எப்படி வெப்பம் பெற்று பூமிக்கு வெப்பத்தை கொடுக்கிறது?

அவை எப்படி சாத்தியம் என்று  பார்ப்போம்.

உடலில் உள்ள ஒவ்வொரு சிற்றறையும்,  சக்தியை   எரிக்கும் கொதிகலனாக இருக்கிறது. சிற்றறையில் உள்ள சக்தியானது அங்கேயே எரிக்கப்படும்போது  உடலுக்கு தேவையான வெப்பம் சமச்சீராக கிடைக்கிறது.

அதே போன்று, சூரியக்கதிர் பூமி மண்டலத்தை அடையும்பொழுது, புவிஈர்ப்பு காந்த மண்டலத்துடன் சேர்ந்து  வேதி மாற்றம் பெற்று  வெப்பத்தை கொடுக்கிறது. புவி ஈர்ப்பு அதிகம் உள்ள பூமத்திய ரேகை பிரதேசங்களில் வெப்பம் கூடுதலாக உள்ளது.

உயிர்கள் இந்த மண்ணில் வாழ மூன்று வகையான வெப்பம் உடலுக்கு  தேவைப்படுகிறது. அவைகளை, உயிர்க்கனல், இறைக்கனல் மற்றும் புறக்கனல் எனப்பிரித்தறியலாம்.

1. உயிர்க்கனல் 

உயிர்க்கனலை மூலக்கனல் என்றும் அறியலாம். மூலாதாரத்தில் இருந்து எழும் நெருப்பானது மணிப்பூரகத்தில் வெளிப்பட்டு நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் உணவில் இருந்து கிடைக்கும் ஏழு வகை சத்துக்களை உடலின் அதனதன் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உந்துதலாகவும் இருக்கிறது. 

மூலாதாரத்தில் நெருப்பை யார் வைத்தது?

வேயின் எழுங்கனல் போலஇம் மெய்எனும் 
கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் 
தோயமதாய்  எழும் சூரியன் ஆமே. 

                                                                                   - திருமந்திரம் 116

மூங்கில்கள் உரசிக்கொள்ளும்போது நெருப்பு உண்டாகும். அவ்வண்ணமே மனித உடலில் ஜீவாத்மாவாக குடிகொண்டுள்ள பரமாத்மா, கடலில் இருந்து எழும் சூரியன் போல, தாயின் பரிவுடன் மும்மலங்களை அகற்றி, உயிர்க்கனலாக எழுகிறான்.

2. இறைக்கனல் 

உடலில் உயிர் இருக்கும்வரை மூச்சுக்காற்றின் மூலம்  இறைக்கனல் உடலில் பாய்ந்துகொண்டே இருக்கும். இக்கனலே, உயிர்க்கனல் உடலின் சிற்றறைகளில் சேமித்து வைத்த சக்தியை எரிக்க உதவும் நெருப்பு பொறி ஆகும். இறைக்கனலின் தன்மையால் சக்தி எரிக்கப்பட்டு உடல் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே 
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா 
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் 
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

                                                                                  - திருமந்திரம் 117

குவிக்கப்பட்ட சூரியக்கனல் பஞ்சை எரித்துவிடும். ஆனால், உடலை எப்பொழுதும் சுற்றிவரும்  இறைக்கனல் உடலை எரிப்பதில்லை. [மாறாக உணவில் இருந்து சிற்றறையில் சேமிக்கப்பட்ட சத்தினை எரிக்கும் பொறியாக அமைகிறது.] இவ்விறைக்கனலின் தன்மையை உணர்ந்து கொண்டவர்களின் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள், சூரியக்கனல்  குவியலின்  முன்னர் இருக்கும்  பஞ்சு எரிவதுபோல் எரிந்துவிடும்.

3. புறக்கனல் 

புறக்கனல் என்பது  சூரியனில் இருந்து பூமிக்கு கிடைக்கும் வெப்பம் ஆகும். இந்த வெப்பமானது, இடத்திற்கேற்பவும், காலத்திற்கேற்பவும் மாறுபடுகிறது.

நம் உடல் சூரிய வெப்ப  நிலைக்கேற்ப  தன்னைத்தானே சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்கிறது. வெளியில் வெப்பம் அதிகமானால், உடலில் உள்ள நீர் வியர்வையாக மாறி உடலை குளிர்விக்கிறது. அதே சமயம், குளிர் அதிகம் உள்ள காலத்தில், சிற்றறைகளில் உண்டாகும் வெப்பம் கூடுதலாகி உடலை வெப்பமாக வைத்துக்கொள்கிறது.

அங்கிமிகாமை வைத்தான் உலகு ஏழையும் 
எங்குமிகாமை  வைத்தான் உடல் வைத்தான் 
தங்கிமிகாமை வைத்தான் தமிழ்ச்  சாத்திரம் 
பொங்கிமிகாமை வைத்தான் பொருள் தானுமே.

                                                                                  - திருமந்திரம் 87

ஏழுலகைப் படைத்த இறைவன் எங்கும் வெப்பத்தை தேவையான அளவு  வைத்தான். அவ்வண்ணமே உடலைப்படைத்த இறைவன், அதிகமான வெப்பம் உடலில் தங்காமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டான். இவற்றின் பொருளை அறிந்துகொள்ள, தமிழ் சாத்திரம் என்னும் திருமந்திரத்தையும் தேவையான பொருள் தரும்படி  அளவுடன்  படைத்தருளினான்.









Tuesday, February 22, 2022

தமிழும்தான் காலி

 தமிழும்தான்  காலி 

காலி காலி 
மொத்தத்துல 
அவனும்தான் காலி


அப்படியே  தமிழும்தான்  காலி 

 


அரபிக்  குத்து 

எப்படியாவது இந்த பாடலை  புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னைத்  தொற்றிக்கொண்டது.

தமிழ் பாட்டுதானே! 

திருக்குறள், திருமந்திரம், போகர் பாடல்கள், பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சௌமிய சாகரம் படித்து  ஓரளவிற்கு என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தமிழை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். அப்பப்ப புறநானூறு கூட படிக்கிறேன், ஆனால் LKG, UKG  அளவுகூட புரிதல் இல்லை.

திரும்ப திரும்ப இந்த பாடலின் வரிகளை படித்த பின்புதான் தெரிந்தது. இது கற்காலத்திற்கு முற்பட்ட தமிழ் என்று. ஒருவேளை, குமரிக்கண்டம் கடலில் மூழ்காமல் போயிருந்தால் இந்த பாடலுக்கான அகராதி கிடைத்திருக்கலாம்.

அதுக்கு முந்தினதாம் இது:

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி!

புறப்பொருள் வெண்பா மாலை -ன்னு ஒரு இலக்கண நூல்; 9th CE!
சங்கத் தமிழ்-ல்லாம் இல்ல.. ரொம்ப பிந்தி!

நன்றி: puliththiral blog 

அரபி, ஆங்கிலம், நவீன தமிழ் மற்றும் இவைகளின் கலவை. கூடவே வட நாட்டின் ஹோலி பண்டிகை வேறு.  

ஹலமிதி அபி வந்தாளே - அரபி + தமிழ் 

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி - ஹிந்தி + தமிழ் 

ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி  உன் பியூட்டி  அதில் மாட்டி  - ஆங்கிலம் + தமிழ் 

தமிழைத்தேடினேன்.

என் வயசுக்குள்ளே முதல் மழையா ஃபீல வச்சானே.

ரொம்பவுமே ஃபீல் ஆயிட்டேன், இந்த வரிகளை படிச்சதும். என்னமா எழுதி இருக்காங்க.

கவியரசு கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் கோட்டை விட்டதை புடிச்சிட்டாங்க.

தமிழில் உள்ள 51 சிறப்பெழுத்துக்களை தவிர்த்து சுத்த தமிழில் எழுதுவோம் என்று தமிழில் எழுதும்போது நாம் எடுக்கும் முயற்சி என்ன? இப்படிப்பட்ட தமிழ் - ஆங்கிலம் - அரபி கலவையில் தமிழுக்கு சிறப்பு செய்யும் கூட்டம் என்ன?

இந்த சிறப்பெழுத்துக்கள் தமிழ் அல்ல என்று சொல்பவர்களால், இன்றைய தமிழக முதல்வரின் பெயரை தமிழில் எழுத முடியுமா, உச்சரிப்பு மாறாமல்.

முடியாது.

இந்த 51 தமிழின் சிறப்பெழுத்துக்கள் நம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்களில், தாமரை இதழ்களாக இருக்கிறது.

ஆறந்த முங்கூடி யாகும் உடம்பினிற்
கூறிய வாதார மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலாக
ஊறிய வாதாரத் தோரெழுத் தாமே.

                                                                                                - திருமந்திரம் 1680



Wednesday, February 9, 2022

ஒன்றும் ஒன்றும் ஒன்று

ஒன்றும் ஒன்றும் ஒன்று 

நீ தருவாயோ நான் தருவேனோ 
யார் தந்த போதும் 
நீயும் நானும் வேறல்ல..

    


கலப்பினத்தமிழ் 

கலப்பின மாடுகள் அதிக பால் தருமே தவிர, நாட்டு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் பாலில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்ட சத்துகள் இருக்காது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நாம் அனைவரும் பகிர்ந்து கொண்ட செய்தி இது.

இதே வழியில்,  படிப்படியாக நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்து, தமிழர்களை வட்டாரத்தமிழ்வாசிகளாக்கி விட்டார்கள்.

கோவைத்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், சென்னைத்தமிழ் மற்றும் வெளி நாடுகளைப்பொறுத்த மட்டில் நாட்டுக்கொரு வட்டார வழக்கு.

இதில் சென்னைத்தமிழ் அந்த மண்வாசனை உள்ளவர்களுக்கு மட்டும் எளிது.

'சார்.. தியாகராஜ பாகவதர் காலத்திய படங்களில் பேசுற தமிழ் சுத்தமா புரியாது'

'மனோகரா படத்தில் கண்ணாம்பா சூப்பரா வசனம் பேசுவாங்க. ஆனா, எனக்குதான் ஒண்ணுமே புரியாது'

' எண்பது, தொண்ணூறுகளில் வந்த படங்கள் ஓரளவு புரியுது. எல்லாம் பாட்டுக்காக பாப்போம்'

'அப்பா.. பாட்ட மாத்துங்க. ஒரே அழுகை அழுகையா வருது, இந்த பாட்ட கேட்டா' - இது புதிய தலைமுறை.

இப்ப எல்லாம்,  'ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா' -  இதுதான் தமிழில் டாப் டக்கர் பாட்டு.

வழக்குத்தமிழில் பேசும்போது  பாதிக்குமேல் ஆங்கிலத்தில் பேசினாலோ அல்லது எழுதும்போது ஆங்கிலம் கலந்து எழுதினாலோ மட்டுமே சொல்ல வந்த  கருத்தை எளிதில் சொல்ல  முடிகிறது.

ரொம்ப காலமா இதே சிந்தனை. எங்கே, நம்மை கலப்பினத்தமிழுக்கு மாற்றினார்கள் என்று.

எனக்கு மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் அறிமுகம், அதாவது ஒன்பதாவது வயதில். இது அரை நூற்றாண்டிற்கு முந்தைய நிலை. இன்றைக்கு, கருவில் உள்ள குழந்தைக்கு, பள்ளியில் முதல் மாணவனாக வர பயிற்சி. சொல்லவே வேண்டாம், இவர்கள்தான்,  தமிழுக்கு ஆதரவு தந்து தமிழில் படிக்க வைப்பார்கள் என்று.

எனக்கு இலக்கணம், செய்யுள் பாடங்கள் சொல்லி தந்தார்கள். உரை நடையிலும், செய்யுள்களிலும் வரும் இலக்கண மரபுகளை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். தமிழ் கற்பதற்கான ஆர்வம் ஏற்பட வழி இருந்தது.

இரண்டாம் வகுப்பு செல்லும்போது, என்னால் 'கன்னித்தீவு' படிக்க முடிந்தது.

என்னுடைய இந்த எழுத்துக்கள் எல்லாம் அன்றைக்கு எனக்கு கிடைத்த தமிழ் ஆசிரியர்களின் ஆசீர்வாதமே. எழுத்துப்பிழைகளை தவிர்க்க முடிவதும் எனக்கு கிடைத்த வரமே.

நான் பெற்ற பெரும்பாக்கியம், திருமந்திரம் போன்ற தெய்வத்திருமறைதனை, என் அறிவுநிலைக்கு ஏற்ப புரிந்து எழுத முடிவது.

திருமந்திரம் என்பது ஒவ்வொருவரின் அறிவு நிலைக்கு ஏற்ப பொருள் கொடுக்கும் அற்புதமான தமிழ்ப்புதையல். இதனை படிக்கவோ, புரிந்து கொள்ள எண்ணுவதோ, புரிந்து மற்றவர்களுக்கு சொல்வதோ அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியமே.

இதோ ஒரு எடுத்துக்காட்டு:

'நான் யார்?' என்று எண்ணும்போது, உடல் மற்றும் உயிர் என்பது நான் என்னும் இரண்டான உண்மை. உடலோடு உயிரும், உயிரோடு உடலும் ஒன்றி இருப்பதைக்கண்டு, இவை இரண்டும் ஒன்றுதான் என்று அறிகிறேன். நான் உடல்  என்ற நினைவில் உள்ள மனதினை, மலராக உயிருக்கு சமர்ப்பித்தால், உடலும், உயிரும் ஒன்றென்று ஆகிவிடும்.

தான்என்று  அவன்என்று இரண்டாகும் தத்துவம் 
தான்என்று  அவன்என்று இரண்டும் தனிற்கண்டு 
தான்என்று  பூவை அவன்அடி சாத்தினால் 
நான்என்ற  அவன்என்கை நல்லது ஒன்றன்றே.  

                                                                                       - திருமந்திரம் 1607

இப்ப பாருங்க ஒன்றும், ஒன்றும் ஒன்றாகிவிட்டது.

கவியரசர் கண்ணதாசன் எதை எண்ணி இந்த திரைப்பாடலை எழுதினாரோ தெரியாது. உடலுக்கும், உயிருக்குமான பாடலாக  பார்த்தால் அப்படியே ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிவிட்டது. 

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல.

மேலும் படிக்க..

Thursday, February 3, 2022

காலத்தை வென்றவன்

காலத்தை வென்றவன் 
நீ.. 
காவியமானவன் 
நீ..


'டாக்டர், எப்படி சொல்றீங்க நான் உயிருடன் இல்லை என்று?' - ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வந்த டாக்டரை கேட்கிறேன்.

'இதோ உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். பேசுகிறேன். உங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்'

டாக்டர் என் இருக்கையை  பார்த்துக்கொண்டிருந்தார், பேசவில்லை. அவர் பேசியதாக நினைத்துக்கொண்டு, அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

நான் உயிருடன் இருப்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும். விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் அமர்ந்திருக்கும் இருக்கையில், என் மீதே யாரோ அமர்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. மெதுவாக வெளியே வருகிறேன்.

ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வரும் என் உடலைப்பார்க்கிறேன்.

யார் யாரோ,  என் உடலைப்பார்த்து அழுகிறார்கள். எல்லாரும் பனிமூட்டத்தின் இடையில்  இருப்பது போல் தோன்றுகிறார்கள்.

செத்துத்தான் போய்விட்டேன் போலிருக்கிறது.

அப்படியானால், இப்பொழுது நான் யார்?

உயிர் - வெறும் ஆன்மா.

உடலில் இருக்கும்வரை என்னால் உணர முடியாத ஆன்மா.

இந்நாள் வரைக்கும், ஏன் என்னால் உயிர் இருப்பதை அறிந்து அதன் தன்மையை உணர்ந்து  கொள்ள முடியவில்லை. 

அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

ஏன் சாத்தியமில்லை?

உயிர் உடலில் இருக்கும்வரை அதனை மூன்று வகையான  இருள் சூழ்ந்திருக்கிறது.

பரிந்துபார் முதற்பாழில் பூதபூதம் புரியாதவன்தான் வாதியாவான் 
எரிந்துபாரண்டன்பாழ்தேதிட்டாக்க லெட்டெட்டு மறுபத்துநாலாஞ் சித்தன்
முரிந்துபார் மூணாம்பாழ்   புக்கினாக்கால் மூச்சான வாதுபது பிரந்ததானம் 
கரிந்துபார் நால்பரிஞ்ச போகுவிடங்கண்டால் எமனடுங்கிப்போவான் இடம்காட்டிடாமே.

                                                                                                                           - 142 போகர் 7000

1. பஞ்ச பூதங்கள் என சொல்லப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் இவற்றால் ஆன உடலில் உள்ள ஐம்புலன்களின் தன்மைதான்  முதல் இருட்டு.

- இதனை புரிந்து கொள்ள இயலாதவர்கள் கண்டதைப்பேசித் திரிவார்கள்.

2. அறிவு நிலை. கற்று, கேட்டு, அறிந்து, உணர்ந்து, விவாதித்து பெற்ற  அறிவு நிலை இரண்டாம் இருள் நிலை. அறிவே இருளாக மாறிவிட்டது ஆன்மீகத்தில்.

- 64 கலைகள் கற்றிருந்தாலும் அவற்றை எரித்துவிட்டால் சித்தர் நிலை எய்தலாம்.

3. காற்று. சுவாசத்தின் போது உள்ளிழுக்கும் காற்றானது பத்து வகைகளாக பிரிக்கப்பட்டு, உடலில் உள்ள அனைத்து சிற்றறைகளுக்கும் சீராக சென்றிருப்பது  மூன்றாம் பாழ். 

- காற்று  உடலில் சமனத்தன்மை அற்றிருப்பதே அனைத்து உடல் உபாதைகளுக்கும் பிரதான காரணம். 

இம்மூன்று இருட்டினையும் உடலில் உயிர் உள்ளபோதே கடக்க முடிந்தால், அதுவே உயிர் இருக்கும் நிலையை அறிய செய்துவிடும். எமனையும் வெல்ல முடியும்.

முதல் இரண்டு இருட்டு நிலையை நாம் தியானத்தின் மூலம் கடக்க முடியும் என்றால், காற்றான  மூன்றாம் இருளை பிராணாயாமப் பயிற்சியினால் வெல்ல முடியும்.

காற்று என்றால் என்னவென்று பார்ப்போம்.

கால் - காற்று 

பாம்பறியுமாம் பாம்பின் கால். 

பாம்புக்கு காது என்று தனியாக அங்கம் இல்லை. கண்ணே காதாக செயல்படுகிறது. அதனால் பாம்பிற்கு  இன்னொரு பெயர் கட்செவி.  

ஒரு பாம்பின் சீறும் மூச்சுக்காற்றை மற்றொரு பாம்பு அறிந்து கொள்ளும் என்பதே பாம்பறியுமாம் பாம்பின் கால்.

காலன்  - காற்றை ஆள்பவன், எமன்.

மனிதனுக்கு அளவிடப்பட்ட காற்றின் அளவு முடிந்தவுடன், உடலில் இருந்து உயிரை எடுத்துக்கொள்பவன்.

கால காலன் - காற்றினுள் காற்றாய் இருப்பவன், இறைவன்.

மனித மூச்சினில் பிராணனாய் இருந்து உயிர்களுக்கு அருள்பவன்.

உள்நின்று ஒளிரும் உளவாய் பிராணனும் 
விண்நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் 
மண்நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் 
கண்நின்று இயங்கும் கருத்தவன் தானே.

                                                                                                                    - திருமந்திரம் 3040

மண்ணிலே காற்றாய் நிற்பவன் இறைவன். அவ்விறைவனே கதிரவனாகவும், உடலுக்குள் இயங்கும் பிராணனாகவும் இருக்கிறான்.

காலம் - காற்றினை மூச்சாய் கொண்டு உயிர் மண்ணில் வாழும் நாட்கள்.

முப்பாழையும் ஒருவனால் தாண்டி சமாதி நிலைக்கு செல்ல முடியுமானால், அவனே  காலத்தை வென்றவன் ஆவான்.



ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...